திருத்தம்பலேஸ்வரம் பகுதி 3

சென்ற பகுதியில் தம்பலேஸ்வரம் எனும் பெயர் வரக்காரணம், தம்பன் எனும் மன்னன் அல்லது தலைவன் ஆட்சி செய்த பகுதியென்றும், அதனால் அவன் பெயர் சார்ந்து இப்பெயர் வந்திருக்கலாம் என்ற கோணத்தில் ஆராய்ந்திருந்தோம். இப்பகுதியில் இப்பெயரினை மொழிவழக்கு ரீதியில் ஆராயவிளைகின்றேன். இந்த வகையில் ஆய்வு செய்ய உதவிய என் ஆய்வாள நண்பருக்கு நன்றிகள்.

தம்பலம் என்ற சொல்லுக்குப் பொருள்தேடி சதாவதானி நா.கதிரவேற்பிள்ளை அவர்களின், “தமிழ்மொழி” அகராதியை புரட்டிப்பார்த்தபோது, ஆச்சரியப்படத்தக்க உண்மைகள் புலப்பட்டன. அவ்வகராதியிலிருந்து எமக்குப் பொருத்தமாக அமைந்த சில சொற்களை இப்பகுதியில் எடுத்து நோக்குவோம்.

Photobucket - Video and Image Hosting
தம்பலகாமத்தின் செந்நெல்வயல்களும், ஆதி கோணைஸ்வரர் கோவில் கோபுரமும்.

தம்பலடித்தல்:
இச்சொல்லுக்கு அகராதி சொல்லும் விளக்கம், பயிரிடுதல், உழவு செய்தல் என்பதாகும்.
இவ்விளக்கம் நுர்றுசதவீதம், தம்பலகாமத்துடன் ஒத்துப்போகும். ஏனெனில், வயலும் வயல்சார்ந்த மருதநில மண் என நாம் முன்னரே பார்த்திருந்தோம். இந்த செந்நெல் கழனிகளில் நடைபெற்ற தொழிலினடிப்படையில் இப்பெயர் வந்திருக்கக் கூடும்.

தம்பலாடல்:
இச்சொல்லுக்கு அகராதி தரும் விளக்கம், சேறடித்தல் அல்லது சேறாடால்.
இந்த விளக்கமும் இப்பிரதேசத்தின் தன்மையேர்டு பெருமளவு ஒத்துப்போகும். ஏனெனில் இப்பிரதேசத்தின் உழவு என்பது சேறடித்துப் பயிரிடும் முறைமையே. இதைச் சேறாடல் எனச் சொல்வது அதிகபொருத்தம் என்றும் சொல்வேன். உழவுக்கு இயந்திரங்கள் வந்த பின்னர் கூட, இப்பகுதி மக்கள் எருமைகளைக் கொண்டு, கழனிகளை கால்களால் மிதித்து, நீரும், களிமண்ணும், சேர்ந்த சேற்றுக்களியாக்கிய நிலங்களில் விதையிடுவது வழக்கமாகவிருந்தது. இந்தச் சேறுமிதிப்பினைக் கழனிகளின் கரையிருந்து பாரத்தால், வயலில் சேறுமிதிப்பவர்கள், ஆடல்புரிவதுபோன்றே தோற்றமளிக்கும்.

தம்பலி:
இச்சொல்லுக்கு அகராதி தரும் விளக்கம், மருதமரம் என்பதாகும்.
இப்பிரதேசத்தில் நிறைந்து காணப்படும் மரவகைகளில் அதிகமானது மருதமரங்களே. ( அந்த மருதமரங்களின் நிழல் சுட்டியே இவ்வலைப்பக்கத்திற்கு மருதநிழல் என்று பெயரிட்டேன்) வயல்நிலங்களின் கரைகளிலும், நீர்பாசனப்படுக்கைகளிலும், களத்துமேடுகளிலும் இந்த மருதமரங்களை நிறையவே காணலாம். மிகப்பெரிய விருட்சமாக வளரும் இம்மரங்களின் நிழல்கள் இதமானவை.

தம்பல்:
இச்சொல்லுக்கு அகராதி தரும் விளக்கம் சேறு என்பதாகும்.
ஏலவே சொன்னதுபோல் இப்பகுதி வயல்நிலங்களின் மண்வளம் கருங்களிச் சேற்றுத்தன்மைகொண்டதாகும்.

இப்படித் தமிழச்சொற்களின் தொடர்புகொண்டு ஆய்வு செய்யிடினும், இப்பிரதேசம் பூர்வீக தமிழ்ப்பிரதேசமாவே காணப்படுகிறது. இப்படியான சிறப்புக்கள் பொருந்திய நிலத்தில் அமைந்த சிவன் ஆலயத்தின் பெயரால், இது திருத்தம்பலேஸ்வரம் என இப்பூமி அழைக்கப்படிருக்கலாம் என்றும் எண்ணத் தோன்றுகிறது.


- இன்னும் சொல்வேன்

இதை எழுதக் கூடாது என்றுதான் இதுவரையில் நினைத்திருந்தேன். ஏற்கனவே இடியப்பச் சிக்கலாகவே புரியப்பட்டிருக்கும், இலங்கை இனப்பிரச்சனை இன்னமும் குழப்பமாக அறியப்பட என் எழுத்துக்களும் அமைந்துவிடக் கூடாது என அமைதியாக இருந்தேன். ஆனாலும், போகிற போக்கில் புலியெதிர்ப்புக் கோஷத்தில், சில பொய்மைகள் புனிதப்படுத்துவதை ஏற்றறுக் கொள்ள முடியாமையால் இப்பதிவை எழுதுகின்றேன். தென்தமிழீழத்தின் உண்மைநிலையின் ஒரு சாட்சியமாகவே இதைப் பதிவு செய்கின்றேனொழிய, எந்தவொரு பிழைகளையும் நியாயப்படுத்துவதோ அல்லது எந்தவொரு மக்கள் சமூகத்தின் மீதும் வீண்பழி சுமத்துவதோ என் நோக்கம் அல்ல.


எண்ணிப்பார்க்கும்போது ஆச்சரியமாகவிருக்கிறது. நானறிந்தவரையில் இதுவரை எந்தவொரு ஊடகத்திலும், யாழ்ப்பாணத்திலிருந்து முஸ்லீம்கள் வெளியேற்றப்பட்டதே பெரிதாகப் பேசப்பட்டுள்ளது. தென்தமிழீழத்தில் தமிழ்மக்கள்மீது முஸ்லீம்கள் செய்த கொடுமைகள் எதுவும் பெரிதாகக் கதைக்கப்படவில்லை. இதற்கான காரணம் என்னவென்றும் தெரியவில்லை. அதற்காக முஸ்லீம்கள் தமிழர்கள் மீது தாக்குதல்களைச் செய்யவில்லை என்றும் சொல்ல முடியாது.

ஈழவிடுதலைப்போராட்டம் முகிழத் தொடங்கிய 1977ம் ஆண்டுகாலப்பகுதியிலிருந்து, 1982ம் ஆண்டு காலப்பகுதி வரையில், தற்போது முக்கியத்துவம் வாய்ந்ததாக செய்திகளில் அறியப்பட்டிருக்கும் மூதூர் தொகுதியில் வாழ்ந்தவன் என்ற வரையில், என்னால் நேரடியாக அறிந்துணரப்பட்ட, முஸ்லீம்களின் தமிழ்விரோதச் செயற்பாடுகள் சிலவற்றை இங்கே அடையாளப்படுத்துகின்றேன்.


இலங்கையின் தேசிய இனங்களுக்கான பிர்ச்சனையில், தமிழர்களுக்கும் சிங்களவர் அரசியலளார்களுக்கும் பிரச்சனை தோன்ற வெகுகாலத்துக்கு முன்னமே, முஸ்லீம்களுக்கும் சிங்களஆட்சியாளர்களுக்குமான மோதல்கள் ஏற்பட்டு, அதுவே சிங்கள முஸ்லீம் கலவரம் வரைக்கும் சென்றதாகவும், பின்னர் தமிழ்அரசியல்தலமைகளின் தலையீட்டால், அவை தணிக்கப்பட்டதாகவும் வரலாறுரைக்கும். பின்னாளில் தமிழர்கள்மீதான் சிங்கள ஆக்கிரமிப்புக்கள் ஆரம்பமானபோது, அதற்கு ஏதிரான போராட்டங்கள் படிப்படியாக குழுநிலைப்போராட்டங்களாக தென் தமிழீழத்தில் இளைஞர்களால் தொடங்கப்பட்டபோது, அவற்றை சிங்கள அதிகாரவர்க்கத்ததுக் காட்டிக் கொடுத்த கயமைத்தனத்தில் முஸ்லீம்களின் எதிர்வினை ஆரம்பமாகியது எனச் சொல்லலாம். இதற்கு சிங்கள அதிகார வர்க்கம் அவர்களுக்குக் கொடுத்ததெல்லாம், வேலைவாய்ப்புக்களும், பதவியுயர்வுகளுமாகும்.


மூதூர் இரட்டைப்பாரளுமன்ற உறுப்பினர் தொகுதி. இதிலே ஒரு உறுப்பினர் முஸ்லீமாக வருவார். அப்படி வருபவர்கள் சிங்களப்பேரினவாத கட்சிகளில் ஏதாவதொன்றினைப் பிரதிநிதித்துவப்படுத்துவார். அப்படி மாறிமாறித் தெரிவாகிய முஸ்லீம் தலைவர்களின் உறவினர்களும், ஆதரவாளர்களும் தமிழ இளைஞர்களுக்குக் கொடுத்த இன்னல்கள் சொல்லிமாழாது. இதைப் பெயர்விபரங்களுடன் கூடச் சொல்ல முடியும். ஆனால் இங்கு அதைசெய்ய விரும்பவில்லை. ஒருதடவை சிங்கள அரச புலனாய்வுத்துறை தமிழ் இளைஞர்களின் பெயர் பட்டியல் ஒன்றை வைத்துக்கொண்டு, அவர்களைத் தேடியபோது, அப்போது ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் திருகோணமலை அமைப்பாளராகவிருந்த சிங்களப்பிரமுகர், தனக்குத் தெரிந்த தமிழ்பிரமுகருக்கு இரகசியமாக அந்தப் பெயர்பட்டியலை வழங்கி, அத்தமிழ்இளைஞர்களைத் தப்பிக்கவைத்தார். ஆனால் அப்போதை பாராளுமன்ற உறுப்பினராகவிருந்த முஸ்லீம் தலைவரும், அவரது மைத்துணரான காவலதிகாரியும், தமிழ் இளைஞர்களைக் காட்டிக் கொடுப்பதிலும், கைது செய்வதிலும் மும்மரமாகச் செயற்பட்டார்கள். சாதாரண காவல்துறை அதிகாரியாக இருந்த அந்த நபர், இத்தகைய காட்டிக்கொடுப்புக்களால் சீனன்குடா பொலிஸ்நிலைய அத்தியட்சகராகவும், அதன்பின் புலனாய்வுத்துறை அதிகாரியாகவும் பதவி பெற்றார் எனவும், பின்பு ஒருதாக்குதலில் கொல்லப்பட்டார் எனவும் பின்னர் அறிந்தேன். இது நடந்தது எழுபதுகளின் இறுதியில். இங்கே நான் பெயர் குறிப்பிடாவிட்டாலும் கூட, அக்காலத்தில் அப்பகுதியில் வாழ்ந்த யாராவது இதை வாசிப்பார்களாயின், அவர்களால் யாரைக் குறிப்பிடுகின்றேன் என்பதை இலகுவாகப் புரியமுடியும். ஏனெனில் அந்தளவுக்கு அவர்களின் செயற்பாடுகள் பிரபலம்.


83 இனக்கலவரங்களோடு இணைந்து தென்தமிழீழப்பகுதிகளில் நடைபெற்ற கலவரங்களின்போது, தமிழ்க்கிராமங்களான தம்பலகாமம், முள்ளிப்பொத்தானை, கிராமங்கள் முதலான கிராமங்கள் சூறையாடப்பட்டது, சிங்களவர்களால் அல்ல. முஸ்லீம் ஊர்காவல் படையினரும், அவர்களோடு சேர்ந்த முஸ்லீம் காடையர்களும் என்பதும் அப்பகுதி மக்கள் அறிந்த உண்மை.

கிண்ணியா என்பது மூதூர்தொகுதியிலுள்ள ஒரு முஸ்லீம் கிராமம். அங்கே சிறுபாண்மையாக வாழ்ந்த தமிழ்மக்களில், சில இளைஞர்கள் கலவரம் ஒன்றின்போது, இராணுவத்தின் துணையோடு, முஸ்லீம் ஊர்காவல் படையால் வெட்டிக் கொல்லப்பட்டார்கள். அவர்களுக்குள் என் நண்பனொருவனும் இருந்தான். சிறு அளவிலான அந்த மக்கள் மத்தியில் அவனது திறமையும், ஆளுமையும், இப்பகுதி முஸ்லீம் சமுகத்திற்கு அச்சம் தர, தருணம் பார்த்து அவனும், மேலும் சிலரும், கொலை செய்யப்பட்டார்கள்.


தென்தமிழீழத்திலிருந்து விடுதலைப்போராட்டத்தில், (எல்லா இயக்கங்களுக்கும்) போராளிகளாகத் தமிழ்இளைஞர் இணைந்துகொள்ள, சிங்களப்பேரினவாதிகளின் வெறித்தனச் செயற்பாடுகள் மட்டும் காரணமல்ல... தென்தமிழீழ முஸ்லீம் தலைமைகளினதும், அவர்களது அடிவருடிக்கும்பல்களினதும், ஊர்காவல் படையென்ற பெயரில் , காடைத்தனம் புரிந்த முஸ்லீம் காடையர்களும் காரணமென்றால் அதுமிகையாகாது. புலியெதிர்ப்புவாதத்திற்காக பொய்மைகளைப் புனிதப்படுத்துவது நியாயமாகாது.

திருத்தம்பலேஸ்வரம் பகுதி 2

'' இசையும், கலையும், இணைந்து வாழ்ந்த அந்தப்பசுமைப்பூமியை, இசையோடு காண உங்கள் ஒலிச்செயலியை இயங்கவைத்தபின், தம்பலகாமத்திற்குள் அடியெடுத்து வையுங்கள் ''





தம்பலகாமம்.

திருகோணமலைக்கு தெற்கே, பதினைந்து மைல்கள் தூரத்தில் அமைந்த பசுமைப்பூமி. ஒருகாலத்தில் வருடமொன்று மூன்று போகங்கள் (தடவைகள்) நெல்விளைந்த நிலம். தூய தமிழ்ப்பெயர்களில் வதிநிலங்களையும், சூழவும் வயல் நிலங்களையும் தன்னகத்தே கொண்ட அழகான மருதநிலம். இந்த முது நிலத்தின் ஆற்றுப்படுக்கைகள் எந்நேரமும் நீரால் நிறைந்தோடுபவை. கடல் நடுவே காணும் தீவுக்கூட்டங்கள் போல், வயல்களின் நடுவே திட்டுத்திட்டாகத் தெரியும் குடியிருப்புக்கள்.



தம்பலகாமத்தை ஒரு தடவை சுற்றி வந்தால் அத்திட்டுக் குடியிருப்புக்களின் பெயர்களில் தமிழ் மணக்கும். மக்களின் வாழ்வில் தமிழ் சுவைக்கும். திருகோணமலையிலிருந்து கண்டி நோக்கி விரிகின்ற நெடுஞ்சாலையில் பதின்மூன்று மைல் தொலைவில் கிழக்கு நோக்கிப்பிரிகின்ற சாலை எம்மைத் தம்பலகாமத்துக்கு அழைத்துச் செல்லும்.

சாலை பிரியும் அச்சந்தி தம்பலகாமம் சந்தி அல்லது பதின்மூன்றாம் கட்டை என அழைக்கப்படும். அங்கிருந்து உள் நுழைந்தால் வரும், முதலாவது குடியிருப்பின் பெயர் புதுக்குடியிருப்பு. அதையும் தாண்டி உள்ளே செல்ல சாலை மீண்டும் இரண்டாகப்பிரியும். இடதுபுறமாகச் செல்லும் சாலை ஊருக்குள் சென்றுவர, மற்றையது கோவில்குடியிருப்பு நோக்கிச் செல்லும்.

இடதுபுறமாக ஊருக்குள் செல்லும் சாலை வழியே செல்வோமானால், பட்டிமேடு, கூட்டாம்புளி, கள்ளிமேடு, முன்மாதிரித்திடல், சிப்பித்திடல், வர்ணமேடு, முள்ளியடி, வரைக்கும் சென்று கிண்ணியா நோக்கி அவ்வீதி செல்லும். கோவில்குடியிருப்பு வரை சென்ற வீதி அங்கிருந்து நீண்டு, குஞ்சடப்பன்திடல், நாயன்மார்திடல், நடுப்பிரப்பன்திடல், ஆகிய வற்றினுர்டு சென்று முள்ளியடியில் மற்றைய வீதியுடன் இணைந்து கிண்ணியா செல்லும். இந்தக் குடியிருப்பினிலெல்லாம் , தென்னை மரத்தோப்புகளும், தீங்கனிச்சோலைகளும், இதந்தரு மனைகளும், இன்பமும் நிறைந்திருக்கும்.


கோயில்க்குடியிருப்பின் நடுவே உயர்ந்து நிற்கும் ஆதி கோணேஸ்வரர் ஆலயம். இந்த ஆலயத்தின் தோற்றப்பாட்டுக் கதையோடு பின்னிப் பிணைந்திருக்கிறது திருத்தம்பலேஸ்வரத்தின் வரலாறு என்பது என் எண்ணப்பாடு. அதன் வரலாற்றுக்குச் செல்லமுன் தம்பலகாமம் என்ற பெயர் வருவதகான காரணத்தைச் சற்று நோக்குவோம்.

இந்நிலப்பரப்பை ஒருகாலத்தில் ஆட்சி செய்த மன்னனின் பெயர் தம்பன் என்றும் அவன் பெயர்சார்ந்தே இந்நிலப்பரப்பு தம்பலகாமம் எனப்பெயர் பெற்றதென இங்குவாழ்ந்த பெரியோர்கள் சொல்லக் கேள்விப் பட்டிருக்கின்றேன். இம் மன்னன் சோழர்காலத்தே வாழ்ந்த பூர்வீக ஈழத்தமிழனாக இருந்திருக்க வேண்டும். சோழமன்னர்களின் ஆட்சி விரிவாக்கத்தின்போது, அவர்களுடன் இசைந்து வாழ்ந்தவனாகவும் இருந்திருக்க வேண்டும். இப்படி அவன் சோழ மன்னர்களுடன் நல்லுறவு பேணி வளர்த்தமையால், சோழமன்னர்கள் தங்கள் ஆட்சி விரிவாக்கத்தின்போது ஆற்றிய நற்பணிகளினூடாக, இப்பகுதியில் இருந்த சிவனாலயத்தைப் புனருத்தாரணம் செய்து, குடமுழுக்குச் செய்திருக்கின்றார்கள். அத்தோடு, தங்கள் வழியில், அந்நிலமன்னனாகவிருந்த தம்பன்பெயரால் அவ்வாலயத்திற்கு தம்பலேஸ்வரம், திருத்தம்பலேஸ்வரம் எனப் பெயரிட்டிருக்க வேண்டும். (சோழர் காலத்தே கட்டப்பெற்ற ஆலயங்களுக்கு அதைக்கட்டிய மன்னர்களின் பெயர்சார்ந்து பெயரமைக்கப்பட்டிருப்பதற்கு, சோழேஸ்வரம், ராஜராஜேஸ்வரம், ஆகிய பெயர்களை உதாரணமாகக் காணலாம்.)

தம்பன் எனும் தலைவன் நிச்சயம் ஒரு ஈழத்துத்தமிழன் என, நான் கருதுவதற்கு முக்கிய காரணம், அத்தகைய ஒரு பெயர் சோழர்பரம்பரைக்குள் காணப்படவில்லை. அதேசமயம் தமிழீழத்தின் வன்னிப் பெருநிலப்பரப்பில், இத்தகைய பெயர்களும், மன்னர்களும் கூட வாழ்ந்திருக்கின்றார்கள். பனங்காமம் என்ற நிலப்பரப்பை ஆட்சிசெய்த அரசன், பனங்காமவன்னியன் என அழைக்கப்பட்டிருக்கிருக்கின்றான்.

தம்பனின் ஆட்சிக்குட்பட்டிருந்த வயல்நிலப்பகுதியை, தம்பலகமம் என்பது சரியா? அல்லது தம்பலகாமம் என்பது சரியா? என ஒரு கேள்வி பின்னாட்களில் எழுந்தபோது, மறைந்த பண்டிதமனி கணபதிப்பிள்ளை அவர்கள், பனங்காமம், கொடிகாமம், வீமன்காமம், எனும் பெயர்களை மேற்கோள்காட்டி, தம்பலகாமம் என அழைப்பதே சரியென நிறுவினார்.

அதைவிடவும், தம்பலகமம் என பெயர்விளித்துவருங்கால், அது பின்னாட்களில் சிங்கள குடியேற்றவாசிகளால் தம்பலகமுவ அல்லது தம்பலகம எனப் பெயர் மாற்றம் செய்ய இலகுவாக இருக்கும் என்பதையும் குறிப்பிட்டிருந்தார்.

தம்பலகாமத்திற்கான வரைபடம் கிடைக்காத காரணத்தால், என் மனம் நிறைந்த அந்த மண்ணை நானே வரைந்து இங்கே தந்துள்ளேன். அதிலே தம்பலகாமம் சந்தியிலும், கோவிகுடியிருப்பிலும் சிகப்பு வட்ட அடையாளமிட்டபகுதிகளில் மிகப்பெரிய இராணுவ முகாம்கள் இருப்பதாக அறிகின்றேன். இம்மண்ணிற்கு அண்மையில் சென்று வந்த என் நண்பனிடம் எனக்கும் ஆசையுண்டு எனச் சொன்னபோது சொன்னான், வேண்டாம் தற்போது வேண்டாம். ஏனெனில் உன் மனதில் பதிந்துள்ள அந்தப் பசுமை மண்ணை நீ இப்போது பார்க்க முடியாது. ஆதலால் அந்நிலம் மீட்சிபெறும்வரை, அதன் பசுமை நினைவுகளாவது உன்னிடம் அழியாதிருக்கட்டும் என்றான்...


- இன்னும் சொல்வேன்


நன்றிகள்:
''' புயலடித்த தேசம் '' இறுவட்டுக்கலைஞர்களுக்கும்
சுவி்ஸ் கலைபண்பாட்டுக்கழகத்தினர்க்கும்












 

நன்றி, வணக்கம்.