சங்கப்பலகை - திருமலை

இதைப்பற்றிக் கனநாளா எழுதவேணும் என்டு நினைத்ததுதான். ஆனாலும் எப்படியோ கழிந்து போயிரும். கனநாட்களாக மருதநிழலில் எழுதவும் இல்லை. ( மருதநிழலுக்கு அடிக்கடி வாற அக்கா வேற கோபிக்கப்போறா) இணையத்தில் இதுவரையில் வேறயாரும் இதனைப்பதிவு செய்ததாகத் தேடிப்பார்த்ததில் காணவில்லை. ஆதலால் இன்று இதைப்பதிவு செய்கின்றேன்.

சங்ககாலத்தில் எழுதப்பட்ட நூல்களின் தரமறியச் சங்கப்பலகைமேல் வைத்து, பொற்றாமரைக்குளத்தில் விட, நூல் தரமாயின் சங்கப்பலகை நூலோடு மிதக்குமெனவும், அல்லாவிடின் நீரில் அமிழ்ந்துவிடும் என்றும் ஒரு கதை சிறுவயதில் கேட்ட ஞாபகம். அதுசரி, சங்கப்பலகைக்கும் திருமலைக்கும் என்ன தொடர்பு என எண்ணுகின்றீர்களா? இங்கே நான் குறிப்பிடுவது தமிழீழத்தின் திருமலை.

ஆமாம் திருகோணமலையில் 70களின் இறுதிகளில் இயங்கி வந்த ஒரு தமிழார்வக் குழுமத்தின் பெயர்தான், இங்கே நான் குறிப்பிடும் சங்கப்பலகை. தலைவரென்றும், செயலாளரென்றும், பதவிகள் தெரிவுசெய்து, மாதம் ஒருதரம் கூடி, தேநீரும், வடையும் சாப்பிட்டு, வெட்டிக்கதை பேசுவதோடு முடிந்து விடும் சங்கங்கள், மன்றங்கள், மத்தியில் தனித்துவத்தோடு செயற்பட்ட ஒரு அமைப்பு இந்தச் சங்கப்பலகை.
தலைவர் முதலாய பதவிகள் எதுவுமில்லாது, ஒருசில நண்பர்களின் உழைப்பில், பலரும் பயனடைந்தனர் இச் சங்கப்பலகையால்.

மாதந்தோறும் பெளர்ணமி தினங்களில்( பெளர்ணமி நாட்கள் சிறிலங்காவில் அரசவிடுமுறை தினங்கள்) மாலை ஆறுமணிக்கு, திருகோணமலை நகரி மத்தியை ஊடறுத்துச் செல்லும் மத்தியவீதியில். அமைந்திருக்கும் சென் சேவியர் பாடசாலை மண்டபத்தில் கணிசமான இளைஞர்கள் கூடுவார்கள்.

தெரிவுசெய்யபட்டிருக்கும் நிகழ்ச்சி வழங்குநரை. ஒரு நண்பர் அறிமுகஞ்செய்துவைப்பார். அத்துடன் நிகழ்ச்சி ஆரம்பமாகும். நிகழ்ச்சி கட்டுரை வாசித்தலாக அல்லது ஆய்வுரையாக, அல்லது அறிவியல் சம்பந்மான விளக்கவுரையாக, என பல்கலை சார்ந்திருக்கும். ஆனால் அநேகமாக ஒரு நிகழ்ச்சிதான் நடைபெறும். நிகழ்ச்சி வழங்குபவர் குறைந்தது 45 நிமிடங்கள் எடுத்துக்கொள்வார். அதன்பின் அந்நிகழ்வு குறித்த கருத்துப்பரிமாற்றங்கள் தொடர்நிகழ்வாக அமையும். நிகழ்ச்சி வழங்கியவர் பிரதானமாக எழுப்படும் கேள்விகளுக்கு விளக்கமளிப்பார். குறைந்தது ஒரு மணிநேரம் இது நடைபெறும். பின்னர் அனைவரும் கலைந்து செல்வர்.

இன்றைய கையடக்கப் பொருட்கள் வழங்கும், பல்வகைப்பயன்பாடுகள் போல், அன்றையபொழுதில் கையடக்கமாக நடந்த இப்பெளர்ணமி மாலை சங்கப்பலகை வழங்கிய பயன் மேலானாது. திருகோணமலையில், சமூகஅக்கறையும், தேடலும்மிக்க இளைஞர்கள் பலரை உருவாக்கியது. பரந்துபட்ட நல்ல வாசகர்களை உருவாக்கியது. இவற்றின் தொடர்ச்சியாக அரசியலார்வமிக்க இளைஞர்களையும், பின்னாளில் பல விடுதலைப்போராளிகளையும், உருவாக்கியது சங்கப்பலகை. இதில் முன்னின்று செயற்பட்ட இளைஞர்கள் சிலர் பின்னாட்களில் பேராதனைப் பல்கலைக்கழக மாணவர்களாக இருந்தபோது, ஏரிக்கரை எனும் காலாண்டுச் சஞ்சிகை வெளியிட்டார்கள். நானறிந்தவரைக்கும், ஈழத்தின் இலக்கியப்பரப்பில் தரமான ஆக்கங்களுடனும், அழகான வடிவமைப்புடனும், வெளிவந்த சிற்றிதழ் இதுவாகும். ஆனால் என்ன சிற்றிதழ்களின் ஆயுட்காலக் குறைவுக்கு அதுவும் விதிவிலக்காகவில்லை.

அப்போது அதன் பெறுமானம் அவ்வளவு தெரியாவிடினும், இப்போது நினைக்கையில் பெறுமானம் புரிகிறது. இன்று இங்கு எழுதுவதில் ஏதேனும் நன்றாகத் தெரிந்தால் (தெரிந்தால்...?) திருமலையின் சங்கப்பலகைச் சந்திப்புக்களும் காரணமெனலாம். இதுபோன்ற நிகழ்வுகள் இப்போதுள்ள இளைஞர்களுக்கு இருப்பதாயும் தெரியவில்லை...... இருந்தாலும் இராணுவம் இட்டுக்கட்டி இழுத்துச் சென்றுவிடுமே....


 

நன்றி, வணக்கம்.