என்னத்தைச் சொல்ல... வசதிக்கேற்றவாறு வரலாறு எழுதப்படும் தேசம் எங்கள் தேசமாயிற்று. இதை இணையத்திலும் உறுதிப்படுத்துவது போல தேசம் இணையத்தளத்தில், எம். ஆர். ஸ்ராலினின் செவ்வியிலும் சில செய்திகள் வந்துள்ளது. படித்த போது வேடிக்கையாகவும், வேதனையாகவும் இருந்தது.




ஒரு வரலாற்றுக் குறிப்பை உங்களுக்கு ஞாபகப்படுத்த விரும்புகின்றேன். 27-04-1977 ஆண்டு கனவான் எஸ்.ஜே.வி.செல்வநாயகம் அவர்களுடைய சாம்பல் கிழக்கு மாகாணத்திற்கு கொண்டுவரப்பட்ட அன்றுதான் முதன் முதலாக வரலாற்றுப் பெருமைமிக்க கிழக்கு மாகாணத்தின் அமைதி குலைத்தெறியப்பட்டது. மூவினங்களும் சேர்ந்துவாழும் அற்புதமான எங்கள் திருகோணமலை இனக்கலவரத்தை அன்றுதான் கண்டது. அன்று தொடங்கிய இரத்தத் துளிகள் இன்றுவரை தொடர்கிறது.

அப்படியானால் அதற்கு முன் தமிழர்கள் மீது தாக்குதலே நடக்கவில்லையா?

பன்குளம் எனும் தமிழ்கிராமத்தின் மீது, கந்தளாய் தமிழ்மக்கள் மீது, முள்ளிப் பொத்தானை குடியேற்றத்திட்டத்தில், என ஆங்காங்கே, உதிரியாகத் தமிழர்கள் மீது நடந்த தாக்குதல்கள் என்னவாம்.

புதிதாக உருவாக்கப்பட்ட குடியேற்றத்திட்டங்களில், தமிழருக்காக ஒதுக்கப்படும் நிலங்களில், தமிழர்கள் நிரந்தரக் குடிகளாக வாழமுடியாமல் செய்ய, அதற்கான அச்சநிலையைத் தோற்றுவிக்க, பேரினவாதம் இப்படியான தாக்குதல்களை அப்பகுதிகளில் செய்ததை, வசதியாக மறைத்துவிடுகிறீர்களே?. உதாரணத்துக்கு ஒன்று..

பாலம்போட்டாறு குடியேற்றத்திட்டத்தில் குடியேறிய ஒடுக்கப்பட்ட தமிழ்மக்களை அச்சப்படுத்தி வெளியேற்ற வைப்பதற்காக, பேரினவாதிகளின் கைக்ககூலிகள் பலிகொண்ட தமிழ் இளைஞனின் பெயர் சுந்தரம் திருநாவுக்கரசு. கூட்டுறவுத்திணைக்களத்தின் களஞ்சியப்பொறுப்பாளனாக இருந்தவனை, அவனது பணிநேரத்திலே பலியெடுத்த பாவிகள், நாற்பது வருடங்களுக்கு மேலாக தமிழ்மக்களுடன் ஒன்றாக வாழ்ந்த ஒரு சிங்களக்குடும்பத்தைச் சார்ந்தவர்களே என்ற உண்மையைக் கூட அன்றை தமிழ்இளைஞர்கள் ஒரளவு அறிந்திருந்தார்களே.

இப்படியான குடியேற்றத்திட்டங்களில், கொடுப்பது போல கொடுத்து, பறிக்கும் வகையில் பறித்துக் கொள்ளும் இத்தகைய சூழ்ச்சிகளுக்கு பலியாகிய தமிழரக்ள் குந்தியிருக்க நிலமற்ற ஏழைப்பாட்டாளிகள் என்பது கூட நீங்கள் மறந்துபோனதா?

இப்படி எத்தனை வேதனைக்கதைகள் உண்மையாக நடந்திருக்கும் போது, அதைத் தெரிந்து கொண்டு மறைக்கிறீர்களா? அல்லது தேவைக்காக மறுக்கிறீர்களா?



இன்னும் விரிவாகப் பார்க்க

திருகோணமலை ஒரு பார்வை

எனும் தலைப்பில் நான் முன்னர் எழுதியவை.

மட்டக்களப்புத் தயிர், சுவிஸ் லசி.




முன்பொருமுறை மதியோடு பேசும் போது, பேச்சிடையே இந்த மட்டக்களப்புத் தயிர் பற்றிப் பேசியபோது இதைப்பற்றி எழுத வேண்டும் எனக் கேட்டிருந்தார். சென்ற சில வாரங்களுக்கு முன், முத்துலெட்சுமியின் அமிர்த்தசரஸ் பற்றிய பதிவில் தயிர் பற்றி வாசித்த போது மீண்டும் ஞாபகத்துக்கு வந்தது.


யாழ்ப்பாணத்தில் தயிர் எனச் சாப்பாட்டில் சேர்ப்பது சற்றுக் குறைவென்றே நினைக்கின்றேன். ஆனாலும் மோர் அங்கு தாராளமாகப் பாவிக்கப்படும். இதில் சில நன்மைகளும் உண்டு. தயிரைக்கடைந்து மோராக்கும் போது வெண்ணெய் பெறப்பட்டு, நெய்யாக்கப்படுவதால், கொழுப்புச்சத்துக்குறைவான மோர்உடல்நலத்துக்கு உகந்தவாறு கிடைக்கிறது. மோராக்கப்படுவதால், நிறையப்பேருக்கு கொடுக்க முடிகிறது. யாழிலுள்ள வெக்கையான காலநிலைக்கு மோரின் தண்ணீர்த்தன்மை உகந்தது. இதற்குள் ஒரு பொருளாதாரச்சிக்கனமும் மறைந்திருக்கிறது. இப்படியான நன்மைகளைக் கொள்ள முடியும்.


வெயில்காலத்தில் யாழ். நகரத்துக்கு மிதிவண்டியில் சென்று வரும் போதெல்லாம், எந்த வழியாகப் பயனித்தாலும், நாச்சிமார் கோவிலடிவரைக்கும் கே.கே.எஸ் வீதிவழியாகத்தான் பயணம் செய்வேன். காரணம், நாச்சிமார் கோவிலுக்கு முன்னாலிருக்கும் மோர்க்கடை. ஒரு பெட்டிக்கடைதான். ஆனாலும் அந்த மோர் பக்குவம் அருமையாக இருக்கும். ஆனால் அதில் போய் மோர்குடிப்பதற்குள் நான் படும்பாடு பெரும்பாடாகிப் போய்விடும். எந்த நேரமும், நிறைந்த சனப் புழக்கம் உள்ள கே. கே. எஸ். வீதியில், வாகனத்தில் போய்வருவோரில், யாராவது நம்மை அடையாளங் கண்டு, வீட்டில் சொல்லிவிட, விழப்போகும் திட்டுக்களின் நினைப்பு, மோரின் சுவையை அனுபவிக்க விடாது. மோர் குடிக்கக்கூடாதென்பதல்ல வீட்டின் கண்டிப்புக்குக் காரணம். அதற்குள் ஒளிந்திருப்பது யாழ்ப்பாணத்துச் சாதீயம்.


கிழக்கில் தயிர், தயிராகவே உணவில் சேர்க்கப்படும். அதற்கு முக்கிய காரணம், கிழக்கின் கால்நடைவளம். குறிப்பாக மட்டக்களப்புத் தயிர், முழு இலங்கைக்கும் பிரசித்தம் என்றும் சொல்லலாம். மண்சட்டியில் சுண்டக்காச்சிய எருமைப்பாலுறைந்து, பாலின் நீர்த்தன்மையை மண்சட்டி இழுத்துவிட, கெட்டித்தயிராக வரும் . அந்தச் சட்டிகளைத் தனியாகஅல்லது, சோடிகளாக தென்னோலை உறிகளில் இணைத்துக்கட்டி, விற்பனைக்காக வெளிமாநிலங்களுக்கு அனுப்புவார்கள்.


மட்டக்களப்பில் சாப்பாட்டுடன் தயிரைச் சேர்த்துக்கொள்ளாது, சாப்பிட்டு முடிந்ததும், கண்ணாடிக்குவளைகளில் தயிரை இட்டு, அதற்கு மேல் சீனி அல்லது கித்துள்பாணி விட்டுத் தருவார்கள். இனிப்பும் புளிப்பும் கலந்த ஒரு இன்சுவை. சாப்பாட்டில் தயிர் கலந்து சாப்பிடுவதனால் கூட அதனுடன் சற்றுச் சீனிசேர்த்துக் கொள்வதையும் கண்டிருக்கிறேன். என்கென்னவோ விருந்தோம்பலில் மட்டக்களப்புத் தமிழர்களை விஞ்ச முடியாதென்றே எண்ணத் தோன்றுகிறது. அவ்வளவு நேசமாக விருந்து படைப்பார்கள். விழிக்கும் மொழியில் புதியவர்களைக் கூட "மகன்" "மகள்" சுட்டி அழைப்பதிலிருந்து, அனைத்து விசாரிப்புக்களிலும் அந்த நேசத்தைக் காணலாம்.


இந்திய உணவகங்களிலும், இங்குள்ள ஹரேகிருஸ்ணா ஆலய விருந்துகளிலும் நான் விரும்பிப் பெற்றுக்கொள்வது லசி. மாம்பழமும், தயிரும் சேர்ந்த அந்த லசிகளிலும், வித்தியாசமான இனிப்பும் புளிப்பும் கலந்த சுவையும் இருக்கும். இவ்வகை லசிக்கள் தற்போது பல்வேறு சுவைகளில் இங்குள்ள பல்பொருள் அங்காடிகளில் கிடைக்கிறது. இஞ்சி, கறுவா, கராம்பு என்பன சேர்ந்த லசி மிகஅருமை. இதைவிட சுவிஸின் புகழ்மிகு பாற்பொருள் உற்பத்தி நிறுவனங்களில் ஒன்றான Emmi தயாரிக்கும் யோக்கட் வகைகளில் ஒன்றில் மட்டக்களப்புத் தயிரின் சுவையை ஒரளவு பெறமுடிகிறது.


மட்டக்களப்புப் பகுதிகளில் இஸ்லாமிய நண்பர்கள் சிலர் விருந்துகளின் முடிவில் பழப்பாகினை உணவுத்தட்டுகளில் இட்டு வழங்குவதைக் கண்டிருக்கின்றேன். இந்தியாவில் சிலரது விருந்துகளில் சிறிது தேன் வழங்குவதாகக் கேள்விப்பட்டதுண்டு. இவை விருந்துண்ணல் இனிப்பாக நிறைவுறுவதன் அடையாளம் எனச் சொல்லப்படுவதும் உண்டு. எதுவாயினும், உட்கொண்ட உணவு சேமிபாடடையும் வழிமுறைகள்தான் இவையென நான் சொல்ல, சாப்பிட்டதன் பின், " கோக்ககோலா" கூடி சீக்கிரம் செமிக்கும் என்கிறான் என் நண்பன்.






தென்றலும் புயலும்.


தென்றலும் புயலும். ஈழத்துத் திரைப்படவரலாற்றில் குறிப்பிட்டுச் சொல்லத்தக்கவொரு திரைப்படம். திருகோணமலைக்கலைஞர்கள் பலரின் கூட்டுழைப்பில் உருவான ஒரு திரைப்படம். இது குறித்து நீண்ட நாட்களாகவே எழுத வேண்டும் என எண்ணியிருந்தேன். அந்த எண்ணத்திற்கான முக்கிய காரணம், இத்திரைப்படத்தில் நடித்த கலைஞர் சித்தி அமரசிங்கம்.
தென்றலும் புயலும் திரைப்படத்தின் தயாரிப்பாளர், டாக்டர் வேதநாயகம் அவர்கள். இவர் திருகோணமலையைச் சேர்ந்தவர். அவரோடு பங்குகொண்டவர், யாழ். அராலியைச் சேர்ந்த வங்கி முகாமையாளராகிய சிவபாதவிருதையர். இவர்கள் இருவருமே படத்தின் முக்கிய கதாபாத்திரங்கள். கதையின்படி, ஒரே குடும்பத்தைச் சேர்ந்த சகோதரர்கள்.
இவர்களுக்கான நாயகிகளாக, சந்திரகலாவும், ஹெலனும் நடித்தார்கள். சித்தி அமரசிங்கம் நகைச்சுவைப் பாத்திரமாகத் தொடங்கி, கதையின் நிறைவுப்பகுதியில், குணசித்திரப் பாத்திரமாக வரக்கூடிய முக்கிய பாத்திரமொன்றில் நடித்தார். இசை. திருமலை பத்மநாதன்.
இந்தப்படத்தின் படப்பிடிப்புக்கள் திருகோணமலையின் ரம்மியமான பகுதிகளில் நடந்தன. குறிப்பாக மூதூர், நிலாவெளி, உப்பாறு, ஆகிய பகுதிகளில், பாடல் காட்சிகளும், வெளிப்புறக்காட்சிகளும் படமாக்கப்பட்டன. ஈழத்துத்திரைப்படங்களில் மிகநல்ல ஒளிப்பதிவில் வந்த படங்களில் இதுவும் ஒன்று. கறுப்பு வெள்ளைப்படமாக இருந்த போதும், வெளிப்புறக்காட்சிகள் மிக அழகாகப் பதிவு செய்யபட்டிருந்தது. இசையும் மிக இதமான இசையாகவிருந்தது. பின்னர் இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தின்,
காலை ஒலிபரப்புக்களில் அடிக்கடி ஒலித்த " சந்திரவதனத்தில் இந்த நீலப்பூ.." என்ற பாடல் இந்தத்திரைப்படத்தில் வந்த பாடலென்றே நினைக்கின்றேன்.

மூதூர், உப்பாறு, பகுதியில் எடுக்கப்பட்ட இப்பாடல்காட்சியில், அந்தப்பகுதியின் இயற்கை அழகு நன்றாகவே பதிவு செய்யப்பட்டிருந்தது. திரைக்கதையைப் பொறுத்தவரையில் பெரிய மாற்றங்கள் இல்லை. தென்னிந்தியச்சினிமாவின் நகலெடுப்புத்தான். ஆனால் இதில் பங்குகொண்ட கலைஞர்கள் பலர் உயிரோட்டமான நடிப்பினால் மெருகூட்டினார்கள். அப்படியான கலைஞர்களில் சித்தி அமரசிங்கம் குறிப்பிடத்தக்கவர்.
தோற்றத்தில் நகைச்சுவை நடிகர் நாகேஸின் தோற்றத்தை ஒத்திருந்தவர், பேச்சிலும் ஏறக்குறைய அதே நகைச்சுவையுணர்வு கொண்டவர் என்பதை, நேரில் சந்திந்தபோது தெரிந்து கொண்டேன். தென்றலும் புயலும் திரைப்படத்தை, திருமலை ஜோதித்தியேட்டரில் நண்பர்களோடு பார்த்தபோது, இடைவேளை நேரத்தில் சித்தி அமரசிங்கம் முதலில் அறிமுகமானார். பார்வையாளர்களோடு அமர்ந்திருந்து, மக்கள் ரசனையை அவதானித்துக் கொண்டிருந்த அவர் வெளியே வந்திருந்தார். அட்டகாசமான கலகலப்பான மனிதரெண்டும் சொல்ல முடியாது, அதே நேரம் படு அமைதியான மனிதருமல்ல. ஆனால் அந்தக் கணத்தில் அறிமுகமாகிய எங்களோடு, எங்கள் கருத்துக்களோடு நெருக்கமாக நின்றார். நேசமாகக் கேட்டார். திரும்பவும் படம் பார்த்தோம். படத்தின் நிறைவுக்காட்சியில் அமரசிங்கம் ஏற்றிருந்த பாத்திரத்தின் தியாகமொன்றால், உணர்வு பூர்வமாக பார்வையாளர்களின் மனங்களில் நிறைந்திருந்தார். அன்றைய சந்திப்பின் காரணமாய் எங்களிலும் நிறைந்திருந்தார்.
அதற்குப்பின் பல தடவைகள் அவரோடும் பழகும் வாய்ப்புக் கிடைக்காவிட்டாலும், கிடைத்த சந்தர்ப்பங்களில் நெருங்கிப்பழகியுள்ளார். தென்றலும் புயலும் திரைப்படம் பெற்ற வரவேற்புத் தந்த உற்சாகத்தில் அமரசிங்கம் ஒரு புதிய முயற்சியை முன்னெடுத்தார். "அமரன் ஸ்கீறீன்" என்ற நிறுவனத்தை உருவாக்கி, அதன் மூலம் ஒரு திரைப்படத்தை உருவாக்கும் திட்டத்தில் இறங்கினார். இதற்காக அவர் யோசித்தவிதம் சற்று வித்தியாசமானது.
திரைப்படத்திற்கான திட்டமிட்ட பொருளாதாரத் தேவை ஒரு இலட்சம் இலங்கை ரூபாய்கள். இதை பெற்றுக்கொள்ள முதலீட்டாளர்களை அவர் நாடவில்லை. மாறாக மக்களை, ரசிகர்களை நாடினார். ஒரு பங்கு ஒரு ரூபாய் என ஒரு இலட்சம் பங்குகள் விற்கத்திட்டமிட்டார். அவரிடம் கேட்டேன், ஏன்? ஒரு ரூபாய் பங்குகள் என்று. அதற்கு அவர் சொன்ன பதில்தான் இன்றளவும் என்னுள் அவர் நினைவுகளை நிறுத்தி வைத்திருக்கிறது. "தம்பி! நூறு ரூபாய் பங்கோ ஆயிரம்ரூபாய் பங்கோ வைத்தால் கெதியாத் தொகையைச் சேர்த்திடலாம்தான். ஆனால் நான் நினைப்பது அதுவல்ல. எல்லா மக்கள் தரப்பினரும், எல்லாரசிகர்களும், அந்தப்படத்தின் முதலீட்டாளர்களாக இருக்கவேண்டும். அதற்கு ஒரு ரூபாய் பங்குதான் சரியாக இருக்கும்..." என்றார்.
அவரது எண்ணமும் செயலும் எனக்கு ஏற்புடையதாகவும் மகிழவாகவும் இருந்தது. நானும் என் நண்பர்களும் கூட சில பங்குகளை வேண்ட முடிந்தது. அதன்பின் அவரைக்கண்ட போதுகளிலெல்லாம், அவர் முயற்சியோடு முன் முனைவது கண்டிருக்கின்றேன். ஆனால் காலத்தின் சுழற்சியில் அவர்முயற்சி கை கூடாது போய்விட்டது. எங்கள் நிலத்தில் எழுந்த இனப்பிரச்சினைதான் எல்லாவற்றையும் அழித்து விட்டதே. அதற்குள் அமரசிங்கம் அவர்களின் ஆசையும் அடங்கிவிட்டது. ஆனாலும் அமரசிங்கம் அவர்களின் செயற்திறன் வேறுபல வடிவங்களில் அவரது இறுதிக்காலம் வரை நிறைவு பெற்றதாக, திருமலையைப்பிரிந்திருந்தபோதும் அறியமுடிந்தது. ஆம், முடிந்தவரை முயலும் அமரசிங்கம் போன்றவர்களால், சும்மா இருக்க முடியாது.
படம் உதவி: ரமணீதரன்

நடந்த நூலகம் நொடிந்த கதை.





திருகோணமலையின் பசுமைக்கிராமமொன்றில் வாழ்ந்த காலமது. என் கல்லூரிக் காலம் . வாசிப்பு, இசை, ஊர்சுற்றல், நண்பர்கள் என உல்லாசமாக இருந்த காலமும் கூட. வாசிப்பு முதல் விருப்பமாக அப்போதுமிருந்தது. ஆனால் வாசிப்புக்கான புத்தகங்களைப் பெறுவது என்பதுதான் கடினம். அதிலும் நல்ல புத்தகங்களை என்னது என்று உரிமை கொண்டாடும் அகமகிழ்வு அளவிடமுடியாதது. ஆனால் அதற்குத் தடையாயிருந்தது பொருளாதாரம். அதை வெற்றிகொள்ளச் சிந்தித்தபோது வந்துதித்த எண்ணத்தில் உருவானதுதான் என் நடமாடும் நூலகம்.



வாசிப்பில் யாசிப்புள்ள இருபது பேர்களைச் சேர்த்துக் கொண்டேன். ஒவ்வொருவரிடமிருந்து மாதாந்தம் ஒரு குறிப்பிட்டதொகையைப் பெற்றுக்கொள்வது. திருகோணமலை நகரிலுள்ள இரு முக்கிய புத்தகசாலைகளாகிய, சிதம்பரப்பிள்ளை புத்தகநிலையம், வாணிபுத்தகநிலையம், இரண்டிலும் இருந்து தெரிவு செய்யப்பட்ட புத்தகங்களை வாங்கிக்கொள்வேன். தெரிவு செய்யப்பட்ட உறுப்பினர்கள் இருபதுபேரில், சராசரியான வாசகர்கள், தீவிரவாசகர்கள்,எனக் கலந்திருந்ததால், வாங்கும் புத்தகங்கள் கலந்தேயிருக்கும்.

வாங்கிய புத்தகங்களுக்கு உறையிட்டு, அடையாளம் வைப்பதற்காக நூல் ஒட்டி, (வாசிக்கும் புத்தகங்களின் பக்கங்களை மடித்து அடையாளமிடுவது எனக்குப் பிடிப்பதில்லை) இலக்கமிட்டு, பெரிய பிளாஸ்டிக் கூடையொன்றில் அடுக்கி, வார இறுதிகளில், ஐந்து மைல் சுற்று வட்டத்துக்குள்ளிருந்த என் வாசக நண்பர்களின் வாசல் தேடிச் சைக்கிளில் செல்வேன். வாரத்திற்கு ஒருத்தருக்கு இரண்டு புத்தகங்கள் என, சுற்று ஒழுங்கில் பரிமாறிக்கொள்வோம். வருடமுடிவில் அவரவர் பிரியப்பட்ட புத்தகங்களைச் சம அளவில் பகிர்ந்து கொள்வோம். இப்படிப் பகிரப்படும் போது பல நண்பர்கள் தங்கள் பங்குகளை என்னிடம் தந்ததாலும், எனது விருப்பத்தின் காரணமாகவும், இரண்டான்டுகளுக்குள்ளாக சுமார் முந்நூறு புத்தகங்கள் என் நூலகத்தில் சேர்ந்திருந்தன. இந்த நகர்வில் நான் நுகர்ந்து கொண்ட சுகமான மற்றுமொரு அனுபவம், ஒவ்வொரு உறுப்பினர்களுடனும் வாசிப்பின்னான, வாசக அனுபவப் பகிர்வு. இது பலநேரங்களில் நல்ல பல கருத்தாடல்களையும் தந்தன.



வீரகேசரிபிரசுர வெளியீடாக வந்த அனைத்துப்புத்தகங்கள், அகிலன், சாண்டில்யன், தீபம் பாரத்தசாரதி, சிவசங்கரி, ஆகியோரின் படைப்புக்கள், எனத் தொடங்கி பின்னாட்களில் கார்க்கியின் தாய், வால்காவிலிருந்து கங்கை வரை எனத் தொடர்ந்தது. இந்தியக் கலைக்களஞ்சியம் என்ற தலைப்பில், இந்திய உயர்ஸ்தானிகராலயம் வெளியிட்ட இரு தொகுப்புக்கள், இந்தியக்கலை கலாச்சாரம் பற்றிய பல்வேறுவிடயங்களையும் சொல்லும் பதிப்பு. அப்போதே அதன் விலை முந்நூறு ரூபாய்களுக்கு மேலிருந்தது. நூலகத்தின் இரண்டாமாண்டு நிறைவு நினைவாக அத்தொகுதி வாங்கப்பட்டது. இதுதவிர இடசாரிச்சிந்தனையாளர்களால் வெளியிடப்பட்ட சில காலாண்டுச்சஞ்சிகைகள், சிரித்திரன் சுந்தரின் படைப்புக்கள், டொமினிக் ஜீவாவின் மல்லிகைத் தொகுப்புக்கள், வெளியீடுகள், என நிறைந்திருந்தது என் நூலகம்.



திருகோணமலையைவிட்டு நான் பிரிந்தபோதும், என்வீட்டிலிருந்த ஒரு அலுமாரியில் அவை அடுக்கிவைக்கப்பட்டேயிருந்தது. பின்னொரு நாளில் என் குடும்பத்தாரும் விடுமுறைக்காக யாழ்ப்பாணம் வந்திருந்தபோது, அந்த விபரீதம் நடந்தது. அப்போது திருகோணமலைப்பிரதேசத்தில் மீளவும் ஒரு இனக்கலவரம் நிகழ்ந்தது. தமிழ்மக்கள் பலரும், தங்கள் வீடுகளைவிட்டு வேறிடங்களில் தஞ்சம் பெற்றிருந்த தருணமொன்றில், எங்கள் வீடு சூறையாடப்பட்டது.


பெட்டி இணைக்கப்பட்ட உழவு இயந்திரமொன்றுடன் வந்த கயவர்கள், வீட்டில் உள்ள பொருட்களைச் சூறையாடத் தொடங்கினார்கள். என் நண்பனின் தந்தையிடம் சொல்லி, நான் ரசித்து, பூமுதிரைப் பலகையில் செய்து வைத்திருந்த என் நூலக அலுமாரியும் அவர்கள் கண்களில் பட, அதற்குள் இருந்த புத்தகங்களை, எடுத்தெறிந்து மகிழ்ந்தார்கள். வாசிப்பு வாசனையற்ற ஒரு கயவன், வண்ணக்காகிதங்களில் உறையிட்டிருந்த அந்தநூல்களை, வானத்தில் எறிந்து கீழேவிழுவதைப் பார்த்து மகிழ்ந்தானாம்.



வயோதிபம் காரணமாக இடம்பெயராதிருந்த பக்கத்து வீட்டு முதியவர், திரும்பிச் சென்ற என்குடும்பத்தாரிடம் சொன்ன தகவல்கள் இது. இருபத்தைந்து வருடங்களுக்கும் மேலாக அந்த மண்ணில் தான் தேடிய தேட்டங்களின் அழிவை நினைத்து என் அப்பா அழுதார். இரண்டு வருடங்களாக இரசித்துச் சேர்ந்த, என் நேசத்துக்குரிய புத்தகங்களை இழந்து,
நான் அழுதேன். நடமாடும் நூலகம் என நான் நகைப்பும், பெருமையுமாய், சொல்லி மகிழ்ந்த என் உழைப்பு, என் தேடல், இல்லாதாக்கபட்டது.


இத்தனைக்கும் எங்கள் வீடு சூறையாடப்பட்டது, சிங்களக்காடையர்களால் என்று நீங்கள் நினைத்தால் அதுதான் இல்லை. கிழக்கில் தமிழ்மக்களின் துயர்கள் பலவற்றிலும் பங்குகொண்டிருக்கும், அவர்களும் தமிழ்பேசுபவர்கள்தான். இதற்குப் பின்னரும் என் நூற்சேகரிப்புக்கள் இரண்டு தடவைகள், இந்த யுத்தத்தின் காரணமாகவே அழிந்து போயிருக்கின்றன. அதுபற்றி இன்னுமொரு தடவை சொல்கிறேன்.

ஈழத்து இசைச் சகோதரர்கள்.


எழுபதுகளில் ஒருநாள் மாலை, திருகோணமலை புனிதசூசையப்பர் கல்லூரியின் பிரமாண்டமான, மண்டபத்தில் அந்த இசைநிகழ்ச்சி நடைபெறுவதாக ஏற்பாடாகி இருந்தது. நாம் படிக்கும் கல்லூரியில் நடைபெறும் இசைநிகழ்ச்சி என்பதற்கும் மேலாக, எங்கள் நண்பர்கள் வட்டத்திற்கு பிடித்தமான கலைஞர்கள் கலந்து கொள்வதனால், நாங்களும் ஆர்வமாகவே சென்றிருந்தோம். நிகழ்ச்சி மாலை 6.00 மணிக்கு என்றிருந்தது. நாங்கள் 5.30 மணிக்குச் சென்றபோது, மண்டபம் நிரம்பியிருந்தது. எங்களுக்கோ, மண்டபம், பலகணி, எல்லாமாக, சுமார் எழுநூறுபேர் ஒரே தடவையில் அமர்ந்திருந்து நிகழ்ச்சி பார்க்கக் கூடிய அந்த மண்டபம் நிகழ்ச்சிக்கு முன்னதாக நிரம்பி விட்டதா என்று ஆச்சரியம். நிகழ்ச்சிக்கு முன்னதாக நிரம்பியிருந்ததே ஆச்சரியமன்றி, அந்தக் கலைஞர்களுக்காக கூட்டம் சேர்வது ஒன்றும் ஆச்சிரியமல்ல. தங்களின் சுய முயற்சியாலும், திறமையாலும், ஈழத்து மெல்லிசைவரலாற்றில், முதலாவது இசைதட்டை வெளியிட்டு, ஈழத்து மெல்லிசை மன்னர்கள் எனும் சிறப்பினைப் பெற்றுக்கொண்ட சகோதரர்கள் அவர்கள்.


இந்நிகழ்ச்சிக்கு முன்னரே அவர்கள் இலங்கைத்தீவின் பல பாகங்களிலும், பல மேடைநிகழ்ச்சிகளைச் செய்திருந்தனர். அப்படியான இசைக்கச்சேரிகளின் போது, அவர்கள் காட்டிய பல நுட்பங்களும், வித்தியாசங்களுமே, எம்.பி பரமேஸ், எம்.பி கோணேஸ், எனும் அந்தச் சகோதரர்களின் இசை மேல் பலரும் விருப்பமுற வைத்தது. மற்றைய இசைக்குழுக்களிடம் இல்லாத மேலதிக திறமை, இவர்கள் சொந்தமாகவே பாடல் இயற்றி, இசையமைத்துப் பாடினார்கள். அதுவே ஈழத்து மெல்லிசை வரலாற்றில், என்றும் அவர்களை விட்டு விலகிச் செல்ல முடியாவாறு அமைந்து விட்டது. சகோதர்களில் மூத்தவரான பரமேஸ் பாடலை இயற்றிப் பாடவும் செய்வார். இளையவர் அதற்கான இசைக்கோப்பினைச் செய்வார். இவர்களோடினைந்த மற்றொருவர், மகேஸ். அப்படி அவர்களின் படைப்பிலுருவான " உனக்குத் தெரியுமா..? பாடல்தான் இலங்கையில் , இசைத்தட்டில் வெளிவந்த முதலாவது தமிழ் பாட்டு.

பாடலும், இசையும் கூட, அப்போது வெளிவந்த தமிழகப் பாடல்களிலிருந்து வித்தியாசமாகத்தான் இருந்தது. இலேசான மேலைத்தேய இசைச்சாயலோடு, ஈழத்தின் தன்மையும் சேர்ந்திருக்கும். இந்த நுட்பங்களைவிடவும், இளவயதில் அவர்களது இசை நிகழ்ச்சிகளில் வேறு சில விடயங்கள் அதிகம் பிடித்திருந்தன. மற்றெந்த தமிழ் இசைக்குழுவும், றம்பெட் வாத்தியத்தை பாவிக்காத வேளையில் இவர்களது இசை நிகழ்ச்சிகளில், அது இசைக்கப்படும். இசைக்குழுவின் கலைஞர்களனைவரும் சீருடையில் வருவார்கள். நிறையத் தாளவாத்தியங்கள் இருக்கும். கோணேஸ் மேடையில், இசைக்கோப்பினை ஒருவித அழகியலுடன் கட்டமைப்பார். பரமேஸின் பாடல் வரிகளும், குரலும் அற்புதமாவிருக்கும். இவை எல்லாவற்றுக்கும் மேலாக நல்ல ஒலித்தரம் இருக்கும்.

அன்று நாங்கள் பார்க்கச் சென்றிருந்த நிகழ்ச்சி, முதற்தடவையாக ஒரு ஆர்கெஸ்ட்ரா ஒழுங்கமைப்பில் வடிவமைக்கப்பட்டிருந்து. தெரிவு செய்யப்பட்ட பதினான்கு பாடல்களை மட்டுமே பாடுவதாகவும், சொல்லப்பட்டிருந்தது, எங்கள் எதிர்பார்ப்பை அதிகப்படுத்தியிருந்தது. அறிவித்தது போன்று குறித்த நேரத்தில் அரங்கின் திரைவிலக ஒரே ஆரவாரம். அனைத்துக்கலைஞர்களும் வெள்ளைநிற கோட்சூட் ஆடை அலங்காரத்துடன், முழு ஆர்கெஸ்டாரவும் நின்றது. இசை ஆரம்பமாகியது. நான்கு றம்பேட் வாத்தியக்கலைஞர்கள், எலெக்ட்றிக் கிட்டார், றம்செற், கீபோட் என , இருபத்திமூன்று கலைஞர்களுடன் மேடையில் தங்கள் திறமைகளை காண்பித்துக் கொண்டிருந்தார்கள். திரைப்படப்பாடல்கள், அவர்களது சொந்த இசையமைப்பில் வந்த பாடல்கள் என மாறிமாறி வந்தது.


அந்தக்காலப்பகுதியில் வந்த பிரபலமான தமிழ்திரைப்படப்பாடல்களில் ஒன்று "என் தேவனே உன்னிடம் ஒன்று கேட்பேன்.." பாடலுக்கு முன்னர் கிட்டார் இசை அருமையாக வரும், அதன்பின் மற்ற வாத்தியங்களும் பாடலும் வரும். அந்தப்பாடல் குறித்த அறிவிப்பு வந்து, கிட்டார் இசையும் தொடங்கிற்று. கிட்டார் இசை முடிய முன்னரே மற்றைய வாத்திய இசை வந்து விட்டது. உடனே இசைக்கட்டமைப்புச் செய்த கோணேஸ் இசையை நிறுத்தி, திரும்பவும் முதலில் இருந்து ஆரம்பித்தார். இரண்டாவது தடவை எல்லாம் சிறப்பாகச் சேர்ந்து கொண்டன. அந்தப்பாடல் முடிந்ததும், கைதட்டல்கள் இரட்டிப்பாக இருந்தன. தாங்கள் தெரிவு செய்த பாடல்களை மட்டுமே இசைக்கும் பொழுது, அதை முழுவதும் நிறைவாக ரசிகர்களுக்குக் கொடுக்க வேண்டும் என்பதே தங்கள் விருப்பம் என கோணேஸ் சொன்னபோது, ரசிகர்கள் மகிழ்ச்சி ஆரவாரம் செய்தார்கள். நிகழ்ச்சி முடிந்து நாங்கள் வெளியே வரும்போது , அடுத்த நிகழ்ச்சிக்காக ரசிகர்கள் வெளியே காத்திருந்தார்கள், இரண்டாவது காட்சிக்காக. ஆம் அன்று இரண்டாவது தடவையாகவும் , அந்நிகழ்ச்சி நடந்தது. நான் நினைக்கின்றேன், திருமலையில், ஒரு ஆர்க்கெஸ்ட்ரா, ஒரேநாளில் ஓரே மேடையில், இரு தடவைகள் நிகழ்ச்சி செய்தது, அதுவொன்றாகத்தான் இருக்கும்.

இவ்வளவு சிறப்புக்கள் பெற்றிருந்த அக்கலைஞர்களின் ஆரம்ப காலம் ஒன்றும் அவ்வளவு இனிமையாக இருந்ததில்லை. சிரமங்களைத் தோளில் சுமந்தவாறே, வெற்றிச்சிகரத்தின் உச்சிக்குச் சென்றார்கள். எங்கும் உள்ளது போல், இந்த இசை சகோதர்களினிடையேயும் பிரிவு வந்தது. சகோதரர்கள் பிரிந்துகொண்டபின், அவர்களது நிகழ்ச்சிகள் சிறப்பாகப் பேசப்படவில்லை. அதனாலேயே ஈழத்தின் மெல்லிசைப் போக்கில் ஒரு தேக்கம் ஏற்பட்டது என்னும் சொல்லலாம். இன்னும் என்னென்னவோ சாதித்திருக்க வேண்டிய சகோதரர்களின் இணைந்த இசைப்பயனம், இடையில் நின்று போனதென்னவோ சோகம்தான்...

ஆனால் இணைந்திருந்த காலங்களில் படைத்ததென்னவோ என்றும் இளமையாக இருக்கக் கூடிய இசைக்கோலங்கள்தான்.
இன்றும் இளமையாக இருக்கும் அந்தப்பாடல்களில் சில உங்களுக்காக.....





பாடல்களும், படமும்:-நன்றி! www.tamil.fm இணையத்தளம்

சல்லி அம்மனும் கடல் அம்மாவும்


திருகோணமலையிலிருந்து நிலாவெளி நோக்கி நீளும் கடற்கரையில், சாம்பல்தீவுக்குப் பக்கத்தில் அமைந்ததுதான் சல்லி. இதன் கடற்கரையில் அழகான ஒரு அம்மன் கோவில். இந்தக்கோவிலால் அந்த இடத்திற்கு சல்லி எனப்பெயர்வந்ததா? அல்லது அந்த இடத்தில் அமைந்ததால் சல்லி அம்மன் என கோவில் பெயர்பெற்றதா என்ற வரலாற்றுக குறிப்புக்கள் எதுவும் தெரியவில்லை. தெரிந்துகொள்ளும் ஆர்வமில்லாத வயதில் சல்லிஅம்மன்கோவில் எனக்கு அறிமுகமானது, இந்தத் தெரியாமைக்கு ஒரு காரணமாகவிருக்கலாம்.

வைகாசிமாதத்தில் வரும் பெளர்ணமியிலோ அல்லது அதை அண்டியோ சல்லி அம்மன் கோவில் பொங்கல் வரும். பொங்கலுக்குப் பத்து நாட்களுக்கு முன்னரே சல்லிக்கிராம கடற்றொழிலாளர்கள், தங்கள் தொழிற்படகுகளை கரையேற்றி விடுவார்கள். அந்த பத்து நாட்களும் அவர்கள் கடலுக்குச் செல்வதில்லை. அம்மன் கோவில் பூசை வழிபாடுகளோடு ஒன்றித்து விடுவார்கள். கடைசி மூன்றுநாளும் விசேடமென்றாலும், பத்தாம் நாள் பொங்கல்தான் பிரசித்தம்.

திருகோணமலை மத்திய பேருந்து நிலையத்திலிருந்து ஒவ்வொரு பதினைந்து நிமிடத்துக்கு ஒரு பேருந்து சல்லிஅம்மன்கோயிலுக்கு மக்களை அள்ளிச் செல்லும். அன்று மதியத்திலிருந்தே தொடங்கிய இந்த அள்ளல் அழைப்பு, நள்ளிரவு தாண்டியும் தொடரும். சல்லிக்கிராமத்தின் நுழைவிலேயே பேரூந்துகள் மறிக்கப்பட்டுவிடும். அங்கிருந்து கோவிலுக்குச் செல்லும் வழியெங்கும் தற்காலிக மின்விளக்குகளும், ஒலிபெருக்கி இணைப்பும் செய்யப்பட்டிருக்கும். யாழ்ப்பாணம் ஈச்சமோட்டை “ றீகல் சவுண்ட்ஸ் “ தனது நூற்றுக்குமதிகமான ஒலிபெருக்கிகுழல்களை, உயர்ந்த தென்னை மரங்களில் கட்டி, அந்தப்பிரதேசமெங்கும் ஒலியால் அதிரவைக்கும். அதன் குழல்களில் உள்ள இலக்கங்களை வைத்து இம்முறை எத்தினை குழல்கள் கட்டியுள்ளார்கள் என்பதை அறிவதில் எமக்கு ஒரு திருப்தி. கோவிலை நெருங்க நெருங்க திருவிழாக்கடைகள் பல இருக்கும். விளையாட்ப் பொருட்கள், அலங்காரப்பொருட்கள், ஆடைகள், கச்சான் கடலைக் கடைகள், குளிர்பாணக்கடைகள், என்பதுதான் வழமையான கடைகள். ஆனால் இங்கே வித்தியாமாக இன்னுமொரு கடையும் இருக்கும். அதுதான் புட்டுக்கடை. ஆம், தமிழகத்தில் பலாப்பழத்துக்கு, பண்டிருட்டி என்பது போல, திருகோணமலைப்பகுதியில் சாம்பல்தீவுப்பகுதி. மிகச்சுவையான பலாப்பழங்கள். இந்தப்பலாப்பழங்கள் காய்க்கும் காலமும் சல்லி அம்மன் கோவில் திருவிழாக்காலமும் ஏறக்குறைய ஒரே காலப்பகுதி என்பதால், சல்லி அம்மன் கோவில் திருவிழாக்கடைகளுள், பலாப்பழமும் புட்டும் சேர்த்து விற்பனைசெய்யும் கடைகளும் இருக்கும். ஓலைப்பெட்டிகளில்,இலேசான சூட்டில் உலிர்ந்த புட்டும் பலாப்பழமும், தருவார்கள். அந்த ஓலைப்பெட்டியிலிருந்தும், பலாப்பழத்திலிருந்தும், வரும் வாசனைகளின் கலவையில் புட்டுத் தனிச்சுவை தரும். சல்லிக்குப் போய் புட்டுச்சாப்பிடாமல் வந்தால், திருப்பதி போய் லட்டுச் சாப்பிடாமல் வந்தது போலாகிவிடும்.

கோயிலுக்குப் போனா கும்பிட வேணும், இதென்ன புட்டுச் சாப்பிட்டுக்கொண்டு.. என்டு ஆர் புறுபுறுக்கிறது. கொஞ்சம் பொறுங்கோவன்...அப்பிடியே பராக்குப் பார்த்துக் கொண்டு நடந்தால் கோயில் வரும். கோயிலொன்டும் பெரிய கோயிலல்ல. அது ஒரு ஆகமவழிபாட்டுக் கோயிலுமல்ல. அந்தப்பிரதேசத்தில் வாழும் கடற்தொழிலாளர்களின் நம்பிக்கைத் தெய்வம் சல்லி அம்மன். அதீதமான நம்பிக்கையும், வைராக்கியமான பக்தியும் கொண்ட கடற்தொழிலாளர்கள், தினசரி தொழிலுக்குப் புறப்படும் போது கற்பூரம் ஏற்றிக் கும்பிட்டுவிட்டுச் செல்வார்கள். மறுநாள் காலை தொழில் முடித்துக் கடலால் வந்ததும், தாங்கள் பிடித்த மீன்களில் ஒரு பகுதியை அம்மனுக்குக் காணிக்ககையாக கோவில் முன் உள்ள தொட்டியில் இட்டுவிடுவார்களாம். அப்படிச் சேரும் மீன்களை விற்ற வருமானத்திலேயே சல்லி அம்மனின் நித்திய வாழ்வு. ஆனால் பொங்கலும், பொங்கலுக்கு முந்தைய நாட்களும், அப்பிரதேச மக்களுக்கு மிக முக்கிய தினங்கள். பொங்கல் தினத்தன்று திருகோணமலைச்சுற்றுவட்டாரமே சல்லிக்குத் திரண்டு வரும்.

கோயிலுக்கு முன்னால் பத்துமீற்றர் தூரத்துக்குள், கடலன்னை மெதுவாக அலை அசைப்பாள். கரையில் சல்லிக்கிராமக் கடற்றொழிலளர்களின், படகுகளோடு, வேறுசில படகுகள் இழுத்துக் கட்டப்பட்டிருக்கும். அவை வல்வெட்டித்துறை,பருத்தித்துறை, முல்லைத்தீவுப் பிரதேசங்களில் இருந்து வந்த கடற்தொழிலாளர்களின் படகுகள். தொழில்தொடர்புகள், உறவுநிலைத் தொடர்புகள் வழி, அவர்களும் சல்லிஅம்மன் பொங்கலுக்கு வருவார்கள். இவர்களையெல்லாம் விட, பொங்கலன்று அவர்களின் நம்பிக்கைத் தெய்வம், கடலாக வருவாளாம். இதுபற்றி எனக்கு முதலில் ஆர்வமிருக்கவில்லை.

முதன்முறை சல்லி அம்மன் கோவிலுக்குச் சென்றபோது, அந்தகடற்கரை முழுக்க நண்பர்களோடு அலைந்துவிட்டு, இரண்டு மூன்று தடவை புட்டுச்சாப்பிட்டுவிட்டுக் களைத்துப்போய் கடற்கரை மணலில் இருந்தவர்கள் அப்படியே உறங்கிவிட்டோம். திடீரென நாங்கள் உறங்கிக் கொண்டிருந்த இடமெல்லாம், கடல்நீர் சிறு அலையாய் வந்து போனது. தூக்கத்திலிருந்தவர்கள், பேசிக்கொண்டிருந்தவர்கள், எல்லோரும் நனைந்துவிட்டார்கள். ஆனால் கோவில் பகுதியில், ஒருவித ஆர்பரிப்புத் தெரிந்தது. பறைகள் அதிர்ந்தன. அப்போதூன் சொன்னார்கள், பொங்கல்பானை பொங்கித்தள்ள கடலம்மன் வந்து வாங்கிச் சென்றாவென்று. இது அங்குள்ள ஒரு வழமையாம். இதைக் கேட்ட மாத்திரத்தில் எமக்கு ஏற்றுக்கொள்ள முடியவில்லை. எங்கள் பகுத்தறிவு விடவில்லை. அடுத்த வருடம் அந்தத்தருணத்தை அக்கறையாக எதிர்கொண்டோம். அது நடந்தது. ஆச்சரியப்பட்டோம். அதற்கடுத்த வருடம் கோவிலுக்குக் கிட்டவாக நின்றெ பார்த்தோம். என்ன ஆச்சரியம், பொங்கல் பொங்கித்தள்ளும் அந்தத்தருணத்தில், அலையடித்து, பொங்கல் பானைவரை வந்து சென்றது.
இது எப்படி நடந்நது என இன்றுவரை எனக்குப் புரியவில்லை. சிலசமயங்களில் கடல் பொங்கிவருவது இயல்புதானென்றாலும், எப்படி அந்த பொங்கல் பானை பொங்கும் தருணத்தில் எழுந்து வந்தது. அந்தத் தொடர்பை ஏற்படுத்தியது யார்? அல்லது எது? தங்கள் அன்னையென நம்பும் கடற்தொழிலாளர்களின் நம்பிக்கையா? அல்லது வேறெதுவமா? அது எப்படிச் சரியாக அந்தத் தருணத்தில் மட்டும் அலையெழுந்து வருகிறது? கேட்பதற்கு ஆச்சரியமாகவிருப்பினும், நான் பார்த்த மூன்று தடவைகளிலும், இந்த நிகழ்வில் மாற்றமேதும் இருக்கவில்லை. அதன்பின்னர்தான் கடற்தொழிலாளர்களுக்கும் கடலுக்குமிடையிலான உறவை, நேசத்தை, பக்தியை சற்று உற்று நோக்கினேன். அது வித்தியாசமாகவே இருந்தது. மற்றவர்களால் இலகுவில் புரிந்து கொள்ள முடியாததாகவிருந்தது. பின் இந்தியாவிற்கு பயிற்சிக்காக சென்று வந்த போராளிகள், கடலோடிகளின் இறுக்கமான சில பழக்கவழக்கங்களைச் சொன்னபோது, அந்த உறவின் தாத்பரியம், கடல்மீதான அவர்களது நம்பிக்கைகள், மேலும், புரிந்து கொள்ள முடியாத புதிராகவே இருந்து.

இதை சென்றவருடத்திலேயே சொல்ல நினைத்திருந்த போதும், நம்பிக்கையீனத்தைத் தந்துவிடுமோ எனும் காரணத்தால், எழுதாமல் இருந்துவிட்டேன். சென்றவாரத்தில் தமிழ்நதியின் பதிவொன்றில், வசந்தன் இட்ட பின்னூட்டத்தில் கடல்பற்றிக் குறிப்பிட்டிருந்தது, இது பற்றி எழுதத்தூண்டியது. ஆனாலும் எனக்கு இவையெல்லாம் கடந்து, சல்லி என்றால் இனிப்பாய் நினைப்பது, புட்டும் பலாப்பழமும், அதைவிரும்பிய வரைக்கும் தந்து மகிழ்ந்த பள்ளித்தோழிகளும், அவர்களது பாசமிகு பெற்றோர்களும்தான்.


கல்யாணமும் முள்முருக்கும்.


நாங்கள் பெண்பார்க்கப்போவதில்லை எனச் சயந்தன் தொடங்க, வசந்தன் தொடர, சில ஊர்வழக்குகளும், தமிழகம், ஈழம் சார்ந்த ஒப்பீட்டுப்பார்வைகளும் வந்திருந்தன. பழம்பெரும் பதிவர்கள் வரிசையில் என்னையும் சேர்த்திருக்கேக்க, நானும் நாலுவரி சொல்லாட்டி மரியாதையில்லை என்டு எழுதத் தொடஙகினா அது நீண்டு போயிட்டு. பேசாம வசந்தன்ர பாணியில பதிவாப்போட்டிட வேண்டியதுதான் என்டு போட்டாச்சு. சயந்தனுக்குப் பின்னூட்டமும் போட்டாச்சு.

யாழ்ப்பாணத்துப் பெண்பார்க்கும் படலம் பற்றி விரிவாக்கதைச்சிருக்கினம். வசந்தனும் அதை நேரிலபார்த்து, அனுபவிச்சு எழுதியிருக்கிறார் ஆனாபடியால அதைவிடுவம். உந்த முருங்கை மரம் நல்லா உலைச்சிருக்குப் போல கிடக்கு ஆனாபடியால அதில இருந்து தொடங்குவம். ஆனால் ஏன் பின்நவீனத்துவமா யோசிச்சு, கல்யாணம் செய்த மாப்பிள்ளைய அரட்டி வைக்கிறதுக்காக நடுகிறதென்டு கண்டுபிடிக்கேல்ல.:) கலியாணத்துக்குப் பிறகு விளையாட்டுக்காட்டினா, மவனே முள்முருக்கில கட்டிவைச்சுத்தான் பூசை என்டிறத, சிலேடையாகச் சொல்லிச்சினமோ தெரியேல்ல..:)

கானா.பிரபா சொன்ன தேவேந்திரனுக்கு இட்ட சாபக்கதைதான் சாத்திரரீதியானகதை. ஆனால் அது கல்யாணவீட்டில் அரசாணி மரமாக வைக்கப்படும் முருங்கைக்குத்தான் பொருத்தமாக இருக்கும். ஏனெனில் அம்மி மிதித்து, அருந்ததிபார்த்து, அரசாணிசுற்றி என நீளும் சடங்கு அது.
அதற்குப் பாவிப்பது முள்முருக்கு அல்ல. கல்யாண முருங்கை. முள்முருக்குப் போன்றதுதான். ஆனால் முள்ளுக் குறைவு. இலைகளில் மஞ்சள் வண்ணத்தில், நரம்புகளும் நடுப்பகுதியும் காணப்படும். மாப்பிளையும் பெண்ணும் இணைந்திருப்பதற்கான அடையாளமாக அது சொல்லப்படும். ஆனால் அது கிடைப்பது அரிதாக இருந்ததால் அதற்குப் பதிலாக முள்முருக்கு அந்த இடத்தைப் பிடித்துக்கொண்டது.

வீட்டில் கல்யாணத்துக்கு முன்னர் நடப்படும் முள்முருக்கையை இந்தச் சாத்திரக்தைக்குள் சேர்த்துக் கொள்ள முடியாது. இது ஒரு சமுக வழக்கென்றுதான் செர்லல வேணும். இதைக் கன்னிக்கால் பேர்டுதல், பந்தல்கால் நடல் எனச் சொல்வது வழக்கம். தமிழகத்துக் கிராமத்திருவிழாவில் கொடிமரம் நடுவதாக உயரிய மரமொன்றை நடுகிறார்களே. ஏறக்குறைய அதே போன்றதுதான் இவ்வழக்கம். பந்தல் கால் போட்டுவிட்டால், கல்யயணவீட்டு வேலைகள் களைகட்டத் தொடங்கிவிடும் கோபதாபங்களுக்குள்ளாகியிருந் உறவுகள் கூட, ஒன்றுபடத் தொடங்கிவிடும். அதற்கு முருங்கை மரத்தை தெரிவு செய்தது
வேண்டுமாயின் , இந்திரன் கதையின் நீட்சியாகவோ அல்லது பழக்கமாகவோ இருக்கலாம். ஆனால் சூழலின் தன்மையோடு ஒப்பிட்டுப்பார்த்தால், யாழ்ப்பாணப்பிரதேசத்தில் மிக எளிதில் வளரும் மரங்களில் இது ஒன்றாக உள்ளது. மேலும், அதன் பாகத்தில் முட்கள் நிறைந்திருப்பதனால், வீட்டுவளர்ப்புப்பிராணிகளான ஆடு மாடு என்பவற்றில் இருந்து காப்பாற்றப்படுகிறது. அதனால் பிள்ளையின் கல்யாண நினைவு முன்னிறுத்தி நடுவதற்காக இந்த மரத்தைத் தெரிவு செய்திருக்கலாம். வசந்தன் கேட்டது போன்று, அப்படி நடப்படும் மரத்தின் வளர்ச்சியை வைத்துச் சகுனம் பார்க்கும் பழக்கமும் சில இடங்களில் இருந்தது. ஆதலால் அதற்கும் இது ஏற்புடையதாக இருக்கும். எனக்குத் தெரிந்த ஒருவருக்கு ஆறு பெண்பிள்ளைகள். அவர்களுடைய வீட்டு முன்றலில், ஆறு முள்முருக்கு மரமும் வரிசைக்கு, நன்றாகச் செழித்து வளர்ந்து நிற்கும். ஆட்டுக்குக் கூட அதில் குழை ஒடிக்க மாட்டார்கள். ஆனால் பெண்கள்வீட்டில்தான் இவ்வளவு கவனம் எடுப்பதாக நினைக்கின்றேன். மாப்பிள்ளைவீடுகளில் அவ்வளவு முக்கியத்துவம் தருவதாக இல்லை என்றே நினைக்கின்றேன். ஆனால் இரு வீடுகளிலும் நடப்படும். எனக்கென்னவோ இந்தப்பழக்கம், இந்தியப்பரப்பிலிருந்து வந்ததுபோல்தான் படுகிறது.

கால்மாறிப்போவது பற்றியும் யாரோ கேட்டிருந்தார்கள். பெண்வீட்டில் கல்யாணவீடு நடைபெற்று முடிந்ததும், மாப்பிள்ளைவீட்டுக்கு மணமக்கள் சென்று திரும்புதலைத்தான் கால் மாறிச் செல்வது என்று குறிப்பிடுவார்கள். ஈழத்தின் வடபுலக் கல்யாணவீடுகளில்தான் இந்த அமர்க்களம் எல்லாம். வன்னியிலோ, கிழக்கிலோ, இந்த வழக்குகளெல்லாம் இருக்கவில்லை என்றே நினைக்கின்றேன்.

கிழக்கில் வாழ்ந்த யாழ்ப்பாண்தார் வீட்டுக் கல்யாணங்கள் அப்படி நடந்திருக்கலாம், மற்றும்படி எல்லாம் சுயமரியாதைத்திருமணங்கள் போன்றதே. இதைப் பேச்சுவழக்கில் சோறு குடுத்தல் என்று சொல்வார்கள். மாப்பிள்ளை, பெண்ணுக்குப் புது உடுபுடவைகள், தாலிகட்டல் எல்லாம் இருக்கும். சிலவேளை கோவில்களில் பூசைநேரங்களிலும், பலவேளைகளில் வீடுகளிலும், குறிப்பாக மாலைகளிலும் நடைபெறும். தாலிகட்டி முடிந்து, மாப்பிள்ளைக்கு பெண் உணவு பரிமாறி, சேர்ந்து உண்பதில் நிறைவுறும். இக்கொண்டாட்டங்களில் முக்கிய இடம்பெறும் இரு விடயம், வெடிகொழுத்தலும், குடிவகை பாவிப்பதும். இவையில்லாத கல்யாணங்கள் களைகட்டாது. பின்னாட்களில் ஒலிபெருக்கியும் இணைந்து கொண்டது. இவ்வளவுதான் தற்போதைக்கு எழுத முடிந்தது. யாரும் வினாத் தொடுத்தால் விடையில் மற்றவற்றைத் தர முனைகின்றேன்.

இன்று மகளிர்தினம். இத்தினத்தில் இத்தாலியர்கள், பெண்களுக்குப் பரிசாக வழங்கும் பூவின் பெயர் Mimose மிமோசே. அதுதான் பதிவின் முதலில் உள்ள படம். இதற்கான சிறப்புக்காரணம் ஏதும் உண்டா எனத்தெரிந்த இத்தாலியபெண்களிடம் விசாரித்தேன். யாரும் சரியான காரணம் தெரியவில்லை என்றார்கள். யாருக்காவது இதன் காரணம் தெரியுமா? ஐரோப்பா எங்கனும் இப்பழக்கம் உண்டா? அல்லது இத்தாலியர்கள் மட்டும்தானா? தெரிந்தவர்கள் வந்து சொல்லுங்களேன்...

தோழியரே உங்கள் குரல்களை உயர்த்திச்சொல்ல இன்னும் ஒரு தினம். வாழ்த்துக்கள்!

பாலையூற்று

மணம் முடித்து மகிழ்வாகக் கழிந்த ஓராண்டில், மனம் ஓப்பிய வாழ்க்கைகுப் பரிசாக ஒரு குழந்தை. எதிர்காலம் நோக்கிய தேடலில், மணாளன் திரைகடலோடப் புறப்படுகின்றான். அவன் போன பொழுதுகளில், உறைநிலத்தில் போர் வெடிக்கிறது. போரின் வெம்மையால் யாவரும் இடம் பெயர்கிறார்கள். ஆனால் அந்தப் பெண் மட்டும், முகவரியைத் தான் தொலைத்தால், கடல்கடந்த கண்ணாளன் தொடர்பு கொள்ள முடியாது போய்விடுமே எனக் காத்திருக்கின்றாள்.

கடல் கடந்து சென்ற கணவன், தான் புறப்பட்ட பொழுதுகளில் போர் வெடித்ததையும், மக்கள் இடம்பெயர்ந்ததையும் செய்தியாக அறிகின்றான். செய்வதறியாது தவிக்கின்றான். அவளும் பிள்ளையும் இருக்கின்றார்களா? இறந்துவிட்டார்களா? இடம்பெயர்ந்துவிட்டார்களா? எதுவும் தெரியாமல், திணறுகின்றான். தொடர்புகொள்ள வழியேதும் கிடைக்கவில்லை. காத்திருப்பும் தேடலும் தொடர்கிறது. காலம் கழிகின்றது. ஒரு நாளல்ல இருநாளல்ல, ஒன்றல்ல, ஒன்பதல்ல. பதினைந்து வருடங்கள்.

நாட்டில் ஏற்பட்ட தற்காலிக சமாதானம் தந்த தைரியத்தில், தாய் நாட்டிற்குத் திரும்பி வரும் அவன், தாரத்தையும், தன்வாரிசையும், கண்டுகொள்கின்றான். கட்டியணைத்துக்கொள்கின்றான். கொண்டவள் குமுறுகின்றாள், குழந்தையாய் விட்டுச்சென்ற பிள்ளை, இளைஞனாய் எட்ட நிற்கின்றான்.

கேட்கக் கேட்க, என் கண்களில் கண்ணீர் தாரை தாரையாக வழிகிறது. என்ன கேட்டக்க கேட்டகவா என்கிறீர்களா?. ஆம் அப்படித்தான். ஏனெனில் இந்தக்கதை ஏதோ சினிமாவில் பார்த்ததல்ல, பத்திரிகையில் படித்ததல்ல. கதையும், கதைமாந்தர்களும், களமும் கூட, கற்பனையல்ல. இவ்வளவும் உண்மை. என் தேசத்தில், நானிழந்த மருதத்தில், என்னோடு படித்த என் பள்ளித் தோழியின் வாழ்க்கைச்சோகமிது. சென்று, பார்த்து, வந்து சொன்னவன் என் சக நண்பன். சொன்னவனும் அழுதான், கேட்டவனும் அழுதேன். இருக்காத பின்ன..

இருபத்தைந்து ஆண்டுகளுக்கு முன், மறுநாள் பண்டதரிப்பு பஸ்நிலையத்தில் சந்திப்பதாகச் சொல்லிப் பிரிந்திருந்தோம். அந்த மறுநாள், இருபத்தைந்து ஆண்டுகளின் பின், புலத்தில் தொலைபேசி வழியாக சென்ற வாரத்தில் வந்தது. தொலைபேசியைக் கண்டுபிடித்த கிரகாம் பெல் லுக்கு நன்றி.

இரவு ஒன்பது மணிக்குத் தொடங்கிய உரையாடல் அதிகாலை நான்கு மணிவரை நீண்டது. தொடக்கத்தில் ஆச்சரியமாகப் பார்த்துக் கொண்டிருந்த மனைவியும், பிள்ளைகளும், தூக்கக் கலக்கத்தில் எழுந்து சென்றுவிடவும் , எங்கள் கதை, வெளிநாட்டு, வேகவீதியென நீண்டு விரிந்தது.

சென்ற சில வருடத்தின் முன், தாயகம் சென்ற நினைவுகளையும் மீட்டியபடியே, ஒவ்வொன்றாக, ஒவ்வொன்றாக, பலதும் சொன்னான். எத்தனை நினைவுகள்... எததனை நினைவுகள். பதினைந்து ஆண்டுகள் காத்திருந்து கணவனைக் கண்டுகொண்ட தோழி, பதினெட்டாண்டுகளாகியும், கைதான கணவன் வராத சோகத்தை, மறைத்தபடி வாழும் மற்றொரு சகோதரி. மணவாழ்க்கை துவண்டு மரித்துக்கொண்ட நண்பன், திசைமாறிப்போன மற்றுமொரு நண்பன், என எத்தனை கதைகள். அத்தனை மணிகளிலும் சோகம், சுகம், ஆச்சரியம், என எத்தனை அனுபவிப்புக்கள்.எல்லாவற்றிலும் நிரம்பிய சோகமாய் என்னை வருத்தியது, இன்னமும் வருத்துவது, பாலையூற்றுக்குப் போனாயா எனக் கேட்ட போது, அவன் சொன்னது.

பாலையூற்று என்ற அழகிய கிராமத்தில், சின்னஞ்சிறியதாய் ஒரு கிறீஸ்தவ தேவாலயம். அழகான அச்சூழலில், பின்புறத்தே கல்வாரி மலைக்காட்சி கவித்துமாய் காட்சிதரும். நான் கிறிஸ்தவனாக இல்லாத போதும், அந்த ஆலயமும், சூழலும், என்னுள் நிறைந்துபோயிருந்தது. போகும் வேளையெல்லாம் அந்தப்புற்தரையில் புரண்டு மகிழ்ந்திருக்கின்றோம். பாடிப்பரவசப்பட்டிருக்கின்றோம். உரையாடி உளம் மகிழ்ந்திருக்கின்றோம்.

சோலையென இருந்த அந்தச் சூழலிலே, காடளந்து வரும் இனிய காற்றினிலே, எமை மறந்து நண்பர்கள் நாம் இருந்து மகிழ்ந்த அந்த நிலத்தினிலே, போர் மூண்ட இதுவரை காலத்திலும், ஒன்றாக, இரண்டாக, நானுறுபேரை வெட்டிச் சாய்திருக்கிறார்கள். ஆண், பெண், இளைஞன், யுவதி, குஞ்சு, குருமான், என்ற பேதம் எதுவுமில்லாது கொன்றிருக்கின்றார்கள். அத்தனை பேரும் தமிழர்கள் ....

நண்பர்களாய் நாம் நடந்து திரிந்த இடங்களையெல்லாம், நினைவுகள் சுமந்து திரிந்திருக்கின்றான். வேவுக் கண்களும், காவுக்கருவிகளும், கண்காணித்த போதும், ஏதோ ஒருவித வேகத்திலே, எல்லாவிடமும் பயணித்திருக்கிறான். பயணப்பின் வழிபோதலில், பாலையூற்றும் வந்தபோது, பயங்கரம் தரும் இக்கதைகளைக் கேள்விப்பட்டிருக்கின்றான். தெரிந்தவர், தெரியாதவர் எனப் பலரும், அழிந்துபோன அவ்விடத்தில், முன்னைய பசுமையைக் காணமுடியுமா என எண்ணியபடியே, ஏக்கமுடன் திரும்பி விட்டானாம். காடளந்துவரும் காற்றில், குருதியின் வாடை குமட்டுமே என்று திரும்பிவிட்டானாம்.

பாவிகளே! பாலையூற்று என்ற அந்தப் பசும்பூமியை, எழிலோடு, என் பிள்ளைக்குக் காட்ட இயலாது செய்துவிட்டீர்களே......

இவ்வார வானொலி நிகழ்ச்சி

நண்பர்களே !

இணையத்தில் இன்பத்தமிழ் எனும் பெயரில், ஐரோப்பியத்தமிழ்வானொலியில் ஒலிபரப்பாகிய இவ்வார நிகழ்ச்சியினைக் கேட்க இங்கே

வாருங்கள்.
நன்றி!

Photobucket - Video and Image Hosting




சென்ற வாரத்தில் ஒரு நாள் , தொலைக்காட்சி நிகழ்ச்சியொன்றில் பேராசிரியர் ஞானசம்பந்தன் அவர்கள் பாலைப்பழம்பற்றிக்குறிப்பிட்டார். சங்ககாலத்தையப் பாடல்கள் முதற்கொண்டு, சாமிநாத ஐயர்வரை, தொடர்புபடுத்தி அழகாகச் சொன்னார். அப்படி அவர் சொல்லிய அந்தச் சொல்லழகு ரசிக்கத்தக்கதாக இருந்தபோதும், பாலைப்பழம் குறித்து அவர் சொன்ன தகவல்தான் சற்றுக் குழப்பமாவுள்ளது.
பாலைநிலத்தில் உள்ள ஒரு மரத்திலிருந்து பெறப்படும் பழமிது. அதனால்தான் அதற்குப் பாலைப்பழம் எனும் பெயர் வந்ததாகச் சொன்னார். ஆனால், இந்தப்பழத்தினை திருகோணமலையில் கோடைகாலத்தில், வீதிஓரப் பழக்கடைகளிலும், சந்தைகளிலும் வாங்கக் கூடியதாகவிருக்கும். பார்வைக்கு, வேப்பங்காயைவிடச் சற்றுப் பெரிதாக, இளமஞ்சள் நிறத்திலிருக்கும். இனிப்பென்றால், அப்படியொரு இனிப்பு. உள்ளே பால்போன்ற திரவம் இருக்கும். அதனாலே அதனைப் பாலைப்ழம் என்று அழைப்பதாகச் சொல்வார்கள். பாலைப்பழத்தை சற்று அதிகமாகச் சாப்பிட்டால், உதடுகள் ஒட்டத் தொடங்கிவிடும். பாலைப்பழத்தை வைத்திருக்கும் பெட்டிகள், கூடைகள் கூட ஒட்டிக்கொண்டிருக்கும். பழம் மட்டுமே சுவையாக இருக்கும்.
திருகோணமலைக் காடுகளிலிருந்து இப்பாலைப்பழம் சேகரிக்கப்பட்டுச் சந்தைக்கு வரும். இந்தப்பாலைப்பழத்தைத் தரும் மரத்திலேயிருந்து நேரடியாகப் பறித்துச் சாப்பிட்டவன் நான். அதனால்தான் பாலைப்பழம் பாலைவனத்து மரமொன்றிலிருந்து பெறப்படுவது எனச் சொல்லும்போது, என்னால் ஏற்றுக் கொள்ளமுடியாமல் இருந்தது. ஏனெனில் அந்த மரம் அடர்ந்த காட்டுப்பிரதேசத்து மரம். மிக உயரமாகவும், வைரம்பாய்ந்ததாகவும், வளரக் கூடியது. அப்படிப்பார்த்தால் அது முல்லைநிலத்துக்குச் சொந்தமாக இருக்க வேண்டும். அப்படியென்றால், பாலைப்பழம் என்று வேறு பழங்களேதும் உண்டா.? பாலை நிலத்தில் பேரீந்து தவிர வேறு சுவையான பழங்கள் கிடைக்கின்றனவா? தெரியவில்லை. நண்பர்கள் தெரிந்திருந்தால் சற்றுச் சொல்லுங்கள் கேட்போம்.

சரி, சரி. பாலைமரம்பற்றிக் கதைக்கத் தொடங்கியதில் வேறு சில மரங்கள் பற்றிய நினைவுகளும் வந்தன. அவைபற்றியும் சற்றுப் பார்ப்போம். ஏறக்குறைய பாலைப்பழம் கிடைக்கும் காலங்களில் கிடைக்கும் மற்றுமொரு பழம், வீரப்பழம். இது சற்று உருண்டை வடிவிலிருக்கும். சிகப்பு நிறம். சாடையான புளிப்புத்தன்மையும் இருக்கும். சாப்பிட்டால் பற்களில் காவி படியும். ஆனால் இந்த இரு பழங்களையும் தரும் மரங்களான பாலைமரமும், வீரை மரமும். நல்ல வைரமான மரங்கள். பாலைமரக்குத்தி வீடுகளுக்கு கப்பாகவும்( தூணாகவும்), வளையாகவும், பாவிக்கப்படும். வீரை மரம் வைரமான மரமாயிருப்பினும், அதன் உள்ளமைப்பு, நார்த்தன்மையானதால், அநேகமாக உதிரி உபயோகங்களுக்கும், வேலிக்கு கம்பிக்கட்டையாகவும், விறகுக்குமே பாவிப்பார்கள். வீரைமரம் பெயருக்கேற்ற மாதிரித்தான் இருக்கும். காய்ந்த வீரைமரங்களில் ஆணி அடிப்தே சிரமம்மென்றால், அந்த மரத்தின் வைரத்தை ஊகித்துக் கொள்ளுங்களேன். இந்த மரங்களின் சுவையான பழங்களுக்குப் பிரியமானவர்கள் மனிதர்கள் மட்டுமல்ல. யானையும், கரடியும், மிகவும் ருசித்துச் சாப்பிடும்.

எங்கள் நண்பர் வட்டம் இப்பழங்களைச் ச்ந்தையிலோ தெருவிலோ வாங்குவதில்லை. நேரடியாகக் காட்டுக்குள்ளிருந்து எடுத்து வருவோம். ஒரு தடவை காட்டுக்குள் போனால், எங்கள் வீடுகளுக்கும், சுற்று வட்ட வீடுகளுக்கும் தேவையானளவு கொண்டு வருவோம். காட்டுக்குள்ளே போய் எந்த மரத்தின் பழம் அதிக சுவை என்பதை அறியவும் ஒரு உத்தி இருக்கிறது. எந்த மரத்துக்குக் கீழே யானையின் விட்டைக் கழிவோ அல்லது கரடிகள் சுவைத்துத் துப்பிய எச்சங்களை வைத்தும், அந்த மரத்தின் பழங்கள் அதிக சுவையாக இருக்மெனத் தீர்மானித்துக் கொள்வோம்.

இருவர் மரத்திலேறி, ஒருவர் கொப்புக்களை வெட்டிவிட, மற்றவர் யானை அல்லது கரடி ஏதும் வருகிறதா எனப் பார்த்துக் கொள்வார். கீழேநிற்பவர்கள் விழுந்த கொப்புக்களில் உள்ள பழங்களைச் சேகரிப்பார்கள். பாலைப்பழமும், வீரைப்பழமும், தந்த சுவையென்பது மறக்கமுடியாதது. அந்த மரங்களையும், அவற்றுடன் இணைந்த நினைவுகளையும்தான்...

பொங்கலும் போர்த்தேங்காயும்.


ஈழத்தில் எங்கள் பொங்கலின் முதற்பகுதியை வாசித்துவிட்டுத் தொடருங்கள்.

தென் தமிழீழக் கிராமத்துப் பொங்கல்.

பொங்கலுக்கு சில தினங்களுக்கு முன்னரே வீட்டின் முன், ஆற்றுநீர் அடித்துக் கரைசேர்த்த வெள்ளைக்குருமணல் வண்டில்களில் ஏற்றி வந்து பறிக்கப்படும். வடபகுதியில் முற்றங்களை சாணகத்தால் மெழுகி, கோலம்போட்டு பொங்குமிடத்தை தயார் செய்வார்கள். ஆனால் தென் தமிழீழத்தில் இந்தக் குருமணலினைக் கொண்டு சிறிய மேடையொன்று அமைத்து, அதிலே கோலம் போட்டு, சுற்றிவரத் தோரணம் கட்டி அழகு செய்வார்கள். பொங்கல் பானைகள் பெரும்பாலும் மண்பாணைகளாகவே இருக்கும். மண்பானையில் பொங்கல் செய்வதென்பது, சுவையை மிகுதியாக்கும். ஆயினும் அதிலே பொங்குவது சற்று நுட்பமான காரியம்தான். பொங்கல், படையல் எல்லாம் ஏறக்குறைய வடபகுதிபோலவே இருக்கும்.

காலையில் படையலும் வழிபாடுமாக இருக்கும் பொங்கல் கொண்டாட்டங்கள் மதியப்பொழுதுகளில் வேறுவகை மனமகிழ்வுக் கொண்டாட்டங்களாக மாறிவிடும். சின்ன வயதில் அம்மா மதியத்துக்குப் பிறகு வெளியில் போகவிடமாட்டா. போட்டிகளும், விளையாட்டுக்களும், நடைபெறுமிடங்களில், போதையும் இருக்கும். அதனால் சண்டைகள் வந்துவிடும் என்கின்ற பயம்தான். ஆனால் எனக்கு அந்த வேளைகளில் நடைபெறும் போட்டிகளைப் பார்க்க மிகுந்த ஆசை. அதிலும் போர்த் தேங்காய் அடித்தல் என்றொரு விளையாட்டு மிகவும் பிடிக்கும். இந்த விளையாட்டைப்பற்றி நீங்கள் கேள்விப் பட்டிருக்கின்றீர்களோ தெரியாது. மிகுந்த சுவாரசியமான விளையாட்டு அது.

சற்றேறக்குறைய கிறினைட் எனும் கைக்குண்டளவில்,( பாருங்கள் கைக்குண்டு எங்கள் தலைமுறைக்கு எவ்வளவு பரிச்சமாகப் போய்விட்டது) இருக்கும் சிறிய வகைத் தேங்காய் அது. யாழ்ப்பாணப் பக்கம் நாள்தேங்காய் மரமென சில மரத்தினைத் தெரிவு செய்து, அதன் தேங்காய்களை கோவில் தேவைகளுக்கும், மங்கள வைபவங்களும் பாவிப்பார்கள். அதுபோல் போர்த் தேங்காய் மரங்களும் தெரிவு செய்து பாவிக்கப்படும். இந்தத் தேங்காய்களின் மேலோடாகிய சிரட்டை(கொட்டாங்குச்சி) மிகவும் தடிப்பானது.

போர்த்தேங்காய் விளையாட்டில் ஒரே சமயத்தில், இருவர் ஈடுபடுவார்கள். தமிழகத்துக் கிராமங்களில் நடைபெறும் சேவற்சண்டைகளுக்கு இணையான சுவாரசியத்துடன் இவ்விளையாட்டு நடைபெறும். முதலில் ஒருவர் தன்தேங்காயை நிலத்தில் குத்தி நிறுத்துவார். மற்றவர் அதன் மேல் தன் தேங்காயைக்கொண்டு அடிப்பார். வைத்த தேங்காய் உடையாவிட்டால், முறைமாறி அடித்ததேங்காய் அடிவாங்கத்தயாராகும். சிலவேளைகளில் சிரடடைகள் வெடித்துச் சிதறுவதனால், போட்டியாளர்களின் முகம் கைகள் மட்டுமல்ல, பார்வையாளர்களது உறுப்புக்களும் ஊறுபடுவதுண்டு. போட்டியில் பணப்பந்தயம் முதல் தண்ணிப்பந்தயம் வரை இருக்கும். பல தேங்காய்களை சிதறடித்த தேங்காயை வைத்திருக்கும் நபர் அன்றைய பொழுதில் கதாநாயகன்தான். ஏனென்றால் அவர் எங்கெங்கு போட்டிக்குச் செல்கின்றாரோ, அங்கெல்லாம் அவர் பின்னே ஒரு கூட்டம் வேடிக்கை பார்க்கச் செல்லும். அவரும் ராசநடை நடந்து செல்வார்.

மாட்டுப்பொங்கல், பட்டிப்பொங்கலாக நடைபெறுவதும் இங்குதான் சிறப்பாக இருக்கும். தைப்பொங்கலின் மறுநாள் காலைமுதலே பட்டிகள் களைகட்டத் தொடங்கிவிடும். எருதுகளின் கொம்புகள் அழகாகச்சீவப்பட்டு வர்ணம் தீட்டப்படும். பசுக்கள் குளிக்கவார்க்கப்பட்டு, கழுத்தைச் சுற்றி மாலை அலங்காரங்கள் செய்யப்படும். . எருமையினப்பசுக்கள் நீராட்டபடுவதோடு சரி. பெரும்பாலும் நெற்றியில் ஒரு சந்தனப்பொட்டுடன் சமாதானம் கண்டுவிடும். ஏன் எனும் கேள்ளவி என்னுள் எழும்போதெல்லாம், என்னைப்போல் கறுப்பு என்பதாலோ அல்லது சோம்பேறித்தனமாக இருப்பதாலோதான் அவை பெரிதாகக் கவனிக்கப்படுவதில்லை போலும் எனச் சமாதானம் கண்டுகொள்வேன். வடபகுதி போலல்லாது, காலையிலேயே பட்டிப்பொங்கல் நடைபெறும்.

பொங்கல் முடித்துப் படைத்த பின் பட்டிகள் திறக்கப்படும் அந்த்ததருணங்களுக்கான ஆயத்தங்கள் சில தினங்களுக்கு முன்னமே சிறுவர்களாகவிருந்த எங்கள் மத்தியில் ஆரம்பமாகிவிடும். நீளமான தடிகளில் கொழுவி ( வேனாம் வில்லங்கம்) கொழுக்கி போன்றதொரு கம்பியை வைத்துக் கட்டி, ஒரு தற்காலிக ஆயுதம் தயார் செய்து மறைத்து வைத்திருப்போம். பட்டிகள் திறந்து பசுக்களும் காளைகளும் திறக்கப்பட்டதும், சிறுவர்குழாம்கள் கவனிப்பது, அக்கால் நடைகளின் கழுத்துக்களைத்தான். அவற்றின் கழுத்தில் கோர்த்துக்கட்டப்பட்டிருக்கும் வடை மாலைகளும், அந்த மாலைகளில் சேர்த்துக்கட்டப்பட்ட பணநோட்டுக்கள் சிலதும் தான் எங்கள் எதிர்பார்ப்பின் இலக்கு. ஒவ்வொரு குழுவும் ஒவ்வொரு கால்நடையைக் கலைத்தவாறே விரையும். அவற்றின் கழுத்திலே உள்ள மாலைகளைக் குறிவைத்து எங்கள் தற்காலிக ஆயுதம் நீளும். மாலைகள் அறுக்கபட்ட காளைகளையோ, பசுக்களையோ, பின்னர் யாரும் கலைக்க மாட்டார்கள். ஆனால் சில கால்நடைகள் இலகுவில் அகப்படமாட்டாது. தமிழகத்து ஜல்லிக்கட்டுக்குச் சமமான விறுவிறுப்போடு இந்த விரட்டும் நடக்கும்.

பெரும்பாலும் இந்த விளையாட்டில் இளைஞர்களும், சிறுவர்களுமே ஈடுபடுவார்கள். அறுத்தெடுக்கப்பட்ட மாலைகளில் உள்ள வடைகள் உடனடி உணவாகும். கிடைத்த பணம் அன்றிரவுச்சினிமாவுக்கு கட்டணமாகும். நீங்கள் எருமைப்பாலில் பொங்கிய பொங்கல் சாப்பிட்டிருக்கிறீர்களா? அமிர்தம் அமிர்தம் என்று என்னவோ சொல்கிறார்களே, அது அதுதான். ஆனா அந்த அமிர்தத்தை இப்போது நீங்கள் சாப்பிட முடியாது. ஏனென்றால் இன்று அந்த மண்ணில்தான் போரின் ஆழமான வடுக்கள், அவலங்களை ஏற்படுத்தி, எங்கள் சகோதரர்கள் எல்லாவற்றையும் இழந்த ஏதிலிகளாக, மரங்களின் கீழும், முகாம்களிலுமாக, உண்பதற்குச் சீரான உணவின்றிச் சிதைந்து போயுள்ளார்கள். போர்தேங்காய் விளையாடி உறவுகள், போரினால் சிதறுகாயாக அடிக்கப்படுகிறார்கள். ஆனாலும்..

எங்கள் நிலம் எங்களுக்கென்றாகும். அன்றையபொழுதுகளில் இன்பப் பொங்கல் நிறைவாய் பொங்கும் எனும் நம்பிக்கையோடு...

எனது முன் பனிக் காலங்கள்.

திருவெம்பாவை பூசையும்
திருப்பள்ளியெழுச்சிப் பஜனையுமாய்
சுகமான ஒரு முன்பனிக்காலம்
எழுபதுகளில் எனக்கிருந்தது.

பின்வந்த எண்பதுகளில்
காவலும் கடமையுமாய்
கடலிலும் கரையிலும்
என் முன்பனிக்காலம் கழிந்தது.

தொன்னூறுகளின் தொடக்கத்திலோ
நெஞ்சு கனக்கும் நினைவுகளோடு
வெண்பனியுறையும் துருவக்
கரையின் தெருக்களில் நான்..

நன்றி - ' திசை'


 

நன்றி, வணக்கம்.