அபியும் நானும் மாதுமையும்


நீண்ட நாட்களாகத் திரைப்படங்கள் எதுவும் பார்க்கவில்லை. பார்க்கும் சூழல் இல்லெயென்பதிலும் பார்க்க மனநிலை வாய்த்திருக்கவில்லை என்தே உண்மை. குடும்பமாய் அமர்ந்திருந்து படம் பார்த்துக் கன நாளாயிற்று எனப் பிள்ளைகள் விரும்பியழைக்க, சென்றவாரத்தில் நண்பரொருவர் விதந்தெழுயிருந்த " அபியும் நானும் " திரைப்படத்தைப் பரிந்துரைத்தேன். ஏற்கனவே தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிய, அத் திரைப்படத்தின் பாடல் ஒன்றால் கவரப்பட்ட பிள்ளைகளும் விரும்பிச் சம்மதிக்க, ஒன்றாய் அமர்ந்தோம்.
தொலைக்காட்சித் திரையில் 'அபியும் நானும் '
அப்பா மகளுக்கான உறவை அற்புதமாய் சொல்லியிருக்கின்றார்கள். இரத்தம் தெறிக்கும் இன்றைய சினிமாக்களின் மத்தியில், பச்சைப் பசேலெனும் பின்னணியில், ஒரு பாசப்பிணைப்புக் கதையை பக்குவமாகச் சொல்லியிருக்கின்றார்கள். ரசிக்கவும், இன்னும் ஒரு படி மேலாகச் சுகிக்கவும் முடிகிறது.
திரைப்படம் பார்த்து எப்போதும் அழமாட்டாத நான் இப்போது அழுகின்றேன்.
ஏனென்றால் காரணம் திரைப்படத்தின் காட்சிகளும், கதையும் மீட்டித்தந்த நினைவுகளின் நீட்சியிலே அழுகின்றேன்.
எங்கள் நிலத்தின் நிறமும், ஒரு காலத்தில் பச்சைதான். எங்களிடமும் பாசஉறவுகளும், அவை பேசுங் கதைகளும் பலவிருந்தன.
ஆனால் இன்று எங்கள் நிலம், எங்கள் இரத்தங்களினாலேயே சிவப்பாகிப் போனது. எங்கள் குரலும், மொழியும் ஒப்பாரியொன்றைத் தவிர வேறு செப்பாது போய்விட்டது.

எங்கள் வாழ்வின் பசுமையையும் , இனிமையையும் பறித்தெடுத்தவர்களிடம் உறவுகொள்ளச் சொல்கின்றீர்கள். பாதகமில்லை பழகலாம் வாருங்களென்றால், நீட்டிய கைகளின் பின்னால் நெடுவாள் கொண்டுவருகின்றார்களே; கண்டுகொள்ளீரோ அல்லது கண்டுங் காணாதிருப்பதே உங்களி்ன் மானுடப் பேச்சின் மகிமை என்பீரோ? கொடிகளிலும், கோஷங்களிலும், உங்கள் கொள்கைகள் மறைந்து போனதுவோ, மறந்து போனதுவோ?
எத்தனை கதைகள் சொல்ல? எத்தனை சோகம் சொல்ல? எத்தனை முறை சொல்லியாயிற்று.

மாதுமை!

கோணமாமலையில் கோயில் கொண்டவனின் தேவி பெயர். என் தங்கை தவமாய் தவமிருந்து பெற்றெடுத்த பெண்ணுக்கு இட்ட பெயரும் அதுவே. தங்கை குழந்தையாய் இருந்த போது பிரிந்த நான், ஒரு குழந்தைக்கு அவள் ஏங்கிய வயதிலேயே மீளவும் சந்திக்க முடிந்தது. ஆச்சரியமாய் இருந்தது காலத்தின் வேகம். என் கைபிடித்து நடை பழகித் திரிந்த பெண், கல்யாணமாகிக் கணவனோடு வந்திருந்தாள். மணவாழ்வின் மகிழ்வில் திளைத்திருந்தாலும், மகவொன்றில்லாத மனக் குறையில் துவண்டிருந்தாள்.

பின் வந்த சில காலத்தில் பெண்மகவுக்குத் தாயானாள். பெருமிதமுற்றாள். எழுதிய கடிதத்தில் இவ்வுலகின் மகிழ்ச்சியையெல்லாம் எண்ணத்தில் குவித்து, எழுத்து மலர்களாய் சொரிந்திருந்தாள். இறைமீது கொண்ட பற்றுதலால் மாதுமை எனப் பெயர் சூட்டியிருந்தாள். இன்றவள் வன்னி வனத்திடையில்....
இறுதியாய் பேசிய போது 'வன்னி மண் மட்டுமே எமக்குப் பாதுகாப்பானது ' என இறுமாந்து சொன்னாள்...

இன்று..

தினமும் செய்திகள் சுமந்து வரும் மடல்களைத் திறக்கையில் மனம் பதைபதைக்கிறது. படபடத்துத் திறந்ததும், தெரிகின்ற எழுத்துக்களின் மீது தேடுகையில், தெரிந்து விடக் கூடாது அவர்கள் பெயர் என, வெட்கம் விட்டுப் பிரார்த்திக்கின்றேன்.
நித்திரை வரா முன்னிரவுகள் கழிந்துபோக, பின்னிரவுக் கனவுகளில், குண்டு வெடிப்புச் சத்தங்களின் பின்னணியில், மாதுமை அழுத படியே மாமாவென்றழைத்து நித்திரை கலைத்துச் செல்கின்றாள்.....

குருவி குருவியல்ல 2

குருவி குருவியல்ல முற்பகுதியில், அப்படி நடந்த ஒரு சம்பவத்துக்கு சாட்சியாக தன் வலது கை ஆட்காட்டிவிரலை காட்டுவார் சின்னராசா. ஒருமுறை காட்டில் வேட்டைக்கு சின்னராசாவும், அவரது நண்பரும் சென்றிருக்கின்றார்கள். வழியில் இரு கரடிகள் எதிர்பட்டிருக்கின்றன. ஒன்று ஆண் மற்றது பெண். சின்னராசாவுக்குப் பின்னால் நண்பர். சற்றுப் பயந்தவர். கரடிகள் நேராகச் சந்தித்து விட்டன. நண்பரிடம் தன் துப்பாக்கியைக் கொடுத்துவிட்டு, சின்னராசா கரடிகளை, நேருக்கு நேராக உற்றுப் பார்த்த வண்ணம் மந்திரக்கட்டுச் சொல்லத் தொடங்கினார்...

இவ்விதமாக மந்திரக்கட்டுச் சொல்லும் போது கவனம் முழுக்கவும் எதிரே நிற்கும் மிருகத்தின் கண்களை உற்றுப் பார்ப்பதிலேயே இருக்க வேண்டுமாம். அதனால், பின்னால் நின்ற நண்பர் மெல்ல நகர்ந்து , மரத்திலேற ஓடியதை இவர் கவனிக்கவில்லை. ஆனால் எதிரே நிற்கும் எதிராளிகளின் அசைவிவ் கவனம் வைத்திருக்கும் மிருகங்களைப் போலவே அவர் முன் நின்ற கரடியும் நண்பரின் அசைவைக்கண்டதும் இவர்கள் மேல் பாய்ந்திருக்கிறது. சின்னராசா கலங்கவில்லை. மந்திரக்கட்டைச் சொல்லிக் கொண்டே, பாய்ந்து வந்த கரடியை நோக்கி முன்னகர்ந்து, கையால் தள்ளி இருக்கிறார். மந்திரக்கட்டுச் சொல்லி முடிந்ததும், எதிர்படும் மிருகத்தை நோக்கி, தூவெனத் துப்ப வேண்டுமாம். அப்போது அந்த மிருகம் வாய் மூடிவிடுமாம். பின்னர் தங்களைச் சுதாகரித்ததின் பின்னர் மந்திரக்கட்டின் மாற்றுப் பகுதியைச் சொன்னால் மிருகம் பழைய நிலைக்கு வந்துவிடுமாம். இதன்படி மந்திரக்கட்டு முடிந்து அவர் தூவெனத்துப்பிய போது, கரடியின் வாய் இறுகிக்கொண்டதாம். ஆனால் எதிர்பாரா விதமாக கரடியைத் தள்ளிய அவரது வலதுகை ஆட்காட்டிவிரல், கரடியின் வாய்க்குள் அகப்பட்டுக் கொண்டதாம். வாய்இறுகிக்கொண்டதாலும், இவர் தள்ளியதாலும் நிலைகுலைந்த கரடி சரிந்துவிழ, பின்னால் நின்ற கரடி, கோபத்துடன் இவர்மீது பாய எத்தனிதிருக்கிறது. நிலமை விபரீதமாய் போனதையுணர்ந்து, துப்பாக்கியை எடுத்துக் தாக்கவரும் கரடியை நோக்கிக் குறிவைத்து, பொறிவில்லை அழுத்தினால் அழுத்துபடுகிதில்லை. அப்போதுதான் தன் ஆட்காட்டிவிரலின் முக்கால் பகுதியைக் காணவில்லை என்பதும், அறுபட்ட விரலில் இருந்து இரத்தம் சொட்டுவதும் தெரிந்திருக்கிறது. நண்பரைத் திரும்பிப் பார்த்தால் காணவில்லை. கணமும் தாமதிக்காமல் நடுவிரலால் வில்லை அழுத்தி, வெடிவைத்ததும் தாக்க வந்த கரடி திரும்பியோட மற்றைய கரடியும் திரும்பி ஓடத்தோடங்கியதாம். பின்னர் அறுந்துபோன கைவிரலுக்குப் பச்சிலை வைத்துக் கட்டிக்கொண்டாராம். அன்றிலிருந்து துப்பாக்கிச் சூட்டிற்கு மிக அவசியமான ஆட்காட்டிவிரல் அல்லாமல் நடுவிரலாலே சுடப் பழகிக்கொண்டாராம். சின்னராசாவின் காட்டுவாழ்க்கை அனுபவக் கதைகள் கேட்பதற்கு மிகச் சுவாரிசயமானவை.

மற்றொருமுறை காட்டுக்குச் சென்றபோது, காட்டில் மிருகங்களுக்காக, மறைத்துக் கட்டப்பட்டிருந்த பொறிவெடியில் சிக்கியதனால், அவரது தொடைப்பகுதியில் பொறி வெடியின், துப்பாக்கிச் சன்னங்கள் பாய்ந்துவிட, காயத்துடனும், சிந்திய குருதியுடனும் காட்டிலிருந்து மீண்டு, வைத்தியசாலை சென்று, காயத்திற்கு வைத்தியம் பார்த்தாராம். அப்படி வைத்தியம் செய்தபோதும், தன் தொடைப்பகுதியில் நிரந்தரமாகத் தங்கிவிட்ட இரு துப்பாகிச் சன்னங்கள், அசைவதை, இச்சம்பவத்தின் சாட்சியாகக் காட்டுவார்.

இப்படியான காட்டுவாழ்க்கை, வேட்டை அனுபவங்கள், பலவற்றைத் தன்னகத்தேயும், தானே சாட்சியாகவும் இருந்த சின்னராசா, வெடிமருந்துகளைக் கையாள்வதிலும், பழைய வெற்றுத் துப்பாக்கி ரவைக் கூடுகளைப் புதிய ரவைகளாக மாற்றவும் தெரிந்துவைத்திருந்தார்.

அந்தக்கால வாழ்வியலில், அவரொரு கதைநாயகன்தான் . அவரிடமிருந்து தெரிந்து கொண்ட பலவிடயங்கள் சில, சந்தர்பங்களில் எமக்கும் கைகொடுத்திருக்கிறது. மிகச் சாதாரண மனிதனாகிலும், குருவிச் சின்னராசா திறமை, தன்னம்பிக்கை, துணிவு என்பதன் சொந்தக்காரர் என்பேன்.

குருவி குருவியல்ல





குருவி உண்மையில் அசத்தலான பேர்வழிதான். கடுகு சிறிதென்றாலும் காரம் பெரிதென்பது போல், மூர்த்தி சிறிதென்றாலம் கீர்த்தி பெரிதென்பது போல், குருவியின் கீர்த்தியும் பெரிதுதான். வலைப்பதிவெழுத வந்த காலங்களிலே இந்தக் குருவி பற்றி எழுதவேண்டுமென எண்ணியிருந்ததுதான். சாதாரண வாழ்வு வாழ்ந்த மிகச்சராசரியான மனிதன். ஒரு காலத்தில் தன் பெயர் இணையத்தில் இவ்வாறு பதிவு செய்யப்படுமென்றோ அல்லது பதிவு செய்யப்பட்டதை அறிந்து கொள்ளக் கூடிய சூழலிலோ இருக்கக் கூடியவரில்லை. இன்னமும் இருக்கின்றாரோ என்பதும் தெரியவில்லை. தான் சொல்லும் கதைகளின் சாட்சியமாகவே வாழ்ந்த அந்தச் சராசரி மனிதனைப் பற்றிய பதிவிது. ஒருசில புதிய விடயங்களைத் தெரிந்து கொள்ளும் வாசிப்பினை இது தரலாம்.


காடு பற்றி அறிய, காடுகளில் சுற்றித்திரிந்து வர ஆவல் கொண்டிருந்த காலத்தில், என்னைக் கந்தளாய் காடுகளுக்குள் தன்னுடன் கூட்டிச்சென்றவர்தான் குருவி. குருவி அவரது பட்டப்பெயர் அல்லது சிறப்புப் பெயர். காரணப்பெயரும் கூட. அடர்ந்து வளர்ந்து, இருள் கவ்விய காடுகளுக்குள் அநாயசமாக விரைந்து செல்லும் நடைவேகத்தாலும், குட்டைத் தோன்றத்தாலும், வந்ததுதான் குருவி எனும் பட்டப்பெயர். நிஜத்தில் சின்னராசா. குருவிச்சின்னராசா என்றால் தம்பலகாமப் பகுதியில் ரொம்பவும் பரிச்சயப் பட்டிருந்தவர். அந்த பரந்த அறிமுகத்துக்குக் காரணம், அவரிடமிருந்த சில அதிதமான திறமைகள் அல்லது செயல்கள்.


அந்தக்காலத்து இரட்டைக்குழல் துப்பாக்கியை நிமிர்த்திப்பிடித்தால் அதன் உயரத்தில் சற்றே கூடிய அந்த மனிதன் ஒரு வேட்டைப்பிரியன். ஆனால் வேட்டையாடுவதற்கென அவர்களுக்குள்ளிருந்த மரபுகள் அல்லது சட்டங்கள் மீறாத வேட்டைக்காரன். இதைவிடவும் சின்னராசாவுக்கு மேலும் சில தகமைகள். அதில் எனக்குப் பிடித்தது அவரது கம்பு விளையாட்டு. அவரைவிட நீளமான கம்பை அநாயசமாகச் சுற்றி விளையாடுவார். அதன் பால் ஈர்ப்புக்கொண்டு நானும் எனது மாமா ஒருவரும், அவரிடம் கம்பு விளையாட்டுப் பயிற்சி பெற விரும்பினோம்.


ஒரு அமாவாசை இரவில் கோணேசர் கோவில் மேற்குவீதியில் வகுப்பு ஆரம்பமாகியது. கம்பு விளையாட்டுக்கு உகந்த கம்பாக துவரைத்தடியினைப் பாவிப்பார்கள். நார்த்தன்மை கொண்ட நல்ல வைரமான, நேரான துவரந்தடிகளை வெட்டிப் பாடனம் செய்து பாவிப்பார்கள். கடினமான மேற்தோலை உடைய எருமைகளை அடித்து மேய்க்கவும், இந்தத் துவரந்தடிகளையே பாவிப்பார்கள். அதனைத் துவரங்கேட்டி எனச் சொல்வார்கள். பாடனம் செய்து, அவர் கொண்டு வந்திருந்த கம்புகளை வைத்து, குருவணக்கஞ் செய்வது எப்படி என்று முதல்வகுப்பில் காட்டித்தரப்பட்டது. அமாவாசை முதல் பூரணை வரை முதலாம் பாடம் எனவும் வரையறுத்துச் சொல்லியிருந்தார். ஆனால் எமது துரதிஷ்டமும் பலரது அதிர்ஷ்டமும் சேர்ந்துகொள்ள அப்பாவுக்கு முதல்நாளிலே செய்தி கசிந்துவிட, துவரங்கேட்டியால் என்னை மேய்த்து, சின்னராசாவைக் கடிந்துவிட, என் கம்பு விளையாட்டுப் பயிற்சி, வணக்கவகுப்புடனே வணக்கம் போடப்பட்டுவிட்டது.


சின்னராசா, கிழக்குக்கேயுரிய மந்திரவிளையாட்டுக்களிலும் கெட்டிக்காறார். ஆனாலும் அவர் எல்லாரிடத்திலும் வெளிப்படையாக அதைச் சொல்லிவிடும் வெள்ளந்திக்காறர். அதனால் அவரது மந்திர வேலைகள் பலிக்காது எனச் சொல்வார்கள். மந்திர விளையாட்டு என நான் சொன்னதுக்குக் காரணம், அதை ஒரு பழிவாங்கு செயலாக அவர்கள் பாவித்ததில்லை. கும்பத்து மால்களில் ஒரு வித்தை விளையாட்டாகப் பாவித்ததனாலே. அதைத் தவறாகச் செய்பவர்களையும் சின்னராசா கடிந்து கொள்வார்.


இந்த மந்திர வேலைகளில் சிலவற்றை அவர் தன் காடுசார் வாழ்வில் பாதுகாப்புக்குப் பாவித்துக் கொள்வார். சிலவற்றைக் கண்டிருக்கின்றேன். சில கதைகளை அவர் சொல்லக் கேட்டிருக்கின்றேன். வேட்டையாடலுக்கென அவர்கள் தீர்மானித்துள்ள சில மிருகங்கள் பறவைகளைத் தவிர, ஏனையவற்றை வேட்டையாடுவதில்லை எனும் ஒரு கொள்கை அவர்களிடம் எழுதப்படாத சட்டமாகவிருந்தது. அப்படி அவர்கள் வேட்டையாட எத்தனிக்காத மிருகங்களிடமிருந்து தங்களைத் தற்காத்துக்கொள்ள அந்த மந்திர அறிவைப் பாவித்துக் கொண்டார்கள். இதை கட்டு மந்திரம் எனச் சொல்லிக்கொள்வார்கள். இது மிருகங்களின் வகைக்குத் தக்கவாறு சொல்வார்களென நினைக்கின்றேன். இதைச்சொல்லி உச்சரிப்பதின் மூலம், அமமிருகங்களின் வாய்களைக் குறிப்பிட சில நிமிடங்களுக்கு திறக்கவிடாது செய்ய முடியும், அல்லது அவை செல்லும் பாதையினைத் திருப்பிவிட முடியும் என வெகுவாக நம்பினார்கள். ஆனால் இதற்கெல்லாம் ஒரு நேரக்கட்டளவும் அவர்களிடமிருந்தது. நேரக்கட்டும், நம்பிக்கையும், தவறினால் மிருகங்கள் கடுமையாகத் தாக்கிவிடும் என்று சொல்வார்கள்.


அப்படி நடந்த ஒரு சம்பவத்துக்கு சாட்சியாக தன் வலது கை ஆட்காட்டிவிரலை காட்டுவார் சின்னராசா. ஒருமுறை காட்டில் வேட்டைக்கு சின்னராசாவும், அவரது நண்பரும் சென்றிருக்கின்றார்கள். வழியில் இரு கரடிகள் எதிர்பட்டிருக்கின்றன. ஒன்று ஆண் மற்றது பெண். சின்னராசாவுக்குப் பின்னால் நண்பர். சற்றுப் பயந்தவர். கரடிகள் நேராகச் சந்தித்து விட்டன. நண்பரிடம் தன் துப்பாக்கியைக் கொடுத்துவிட்டு, சின்னராசா கரடிகளை, நேருக்கு நேராக உற்றுப் பார்த்த வண்ணம் மந்திரக்கட்டுச் சொல்லத் தொடங்கினார்...

மிகுதியை நாளை சொல்கின்றேனே :)

ஏப்ரல் 1 முட்டாள்கள் தினமாமே




பாடசாலைக் காலத்தில், ஏப்ரல் முதலாம் நாள் ஒரு பகிடிவதை நாளாக எமக்கிருந்தது. முதல் நாளே யார் யார் எனத்திட்டமிட்டதன்படி, காலையில், பகிடிவதை தொடங்கும். வெள்ளைச்சீருடையில், பேனா மையைத் தெளிப்பதுதான் அது. குறித்த நபருக்கு தெளித்தபின் அதைப்பார்த்து கேலிசெய்து சிரிப்பதுதான் 'ஏப்ரல் பூல்' விளையாட்டாக இருந்தது. பெரிதாக ஒன்றுமில்லையென அப்போது தெரிந்தாலும், அறுவடை முடிந்த வயல்களில், கொட்டிக்கிடக்கும் நெற்கதிர் பொறுக்கி, நெல்லாக்கி விற்று வரும் பணத்தில் பள்ளிச்சீருடை ஒன்றை வாங்கியணிந்துவரும் ஏழை மாணவனுக்கு இது எவ்வளவு வலியைத் தந்திருக்கும் என இப்போது புரிகிறது.

ஒரு காலத்தில், ஏப்ரல் மாதத்தை வருடத்தொடக்கமாகக் கொண்டிருந்த, ஐரோப்பிய சமூகத்தில், ஜனவரியை வருடத்தொடக்கமாகக் கொள்ளும் புதிய நாட்காட்டிமுறை அறிமுகமாகியபோது, புதிய முறைக்கு மாறாதிருந்த பழமை வாதிகள் ஏப்ரல் முதல்நாளை வருடத்தொடக்கமாகக் கொண்டாட, அதைப் புதிய மாற்றம் கண்டவர்கள், முட்டாள்கள் தினம் என எள்ளி நகையாடியதன் நீட்சி, காலனியாதிக்கத்தால் எங்களிடமும் தொற்றிக்கொண்டது. தொடங்கியவர்கள் அதை விட்டுவிலகிச் செல்ல, நாம் தொடர்கிறோம்...


ஏப்ரல் ஒன்று முட்டாள்கள் தினம் என என்னளவில் நினைவு கொள்ள 1987 ஏப்ரல் முதலாந்திகதிக்குச் செல்ல வேண்டும். அந்தக்காலப்பகுதி, எங்கள் நிலத்தில் அமைதி நிலவியதாகச் சொல்லப்பட்டகாலம். அமைதிகாக்க வந்தவர்கள் எங்கள் தெருக்களில் காலையும் மாலையும் நடைபயின்றதால், அகிலத்தில் அவ்விதம் கற்பிதம் செய்யப்பட்டிருக்கலாம்.


எங்கள் வீட்டினருகே ஒருசிறு மளிகைக்கடை. கடையோடு சேர்ந்தே அதை நடத்துபவர்களின் வீடு. அவர்களுடைய பிள்ளைகளில் ஒரு பெண், சற்று மனவளர்ச்சி குன்றியவள். ஆனாலும் அந்தக்குடும்பத்தில், அயல்களில், அனைவராலும் நேசிக்கபட்ட சிறுபெண். வீட்டோடு சேர்ந்தே கடையுமிருந்ததால், அப்பெண்ணையும் சிலவேளைகளில் கடைகளில் காணலாம். அன்றும் அவள் நின்றிருந்தாள்.




வீதியில் வந்த வீ(ண/ர)ர்களில் ஒருவனுக்கு பீடி குடிக்கும் எண்ணம் வரவே, வீதியருகேயிருந்த கடைக்குச் சென்றான். கடையின் முகப்பில் தாயோடு அப் பெண்ணும் . பீடிகேட்டவனுக்கு, தாய் பீடியெடுத்துக் கொடுத்தாள். பற்றவைக்க தீப்பெட்டி கேட்டான். கடையில் தீப்பெட்டி முடிந்துவிட்டதைச் சொல்லி வீட்டினுள்ளிருந்து எடுத்துவர உள்ளே சென்ற தாயையும், வீதியிலும், கடைமுகப்பிலும், நின்ற கர்ம வீரர்களையும் மாறி மாறிப் பார்த்து விகல்பமின்றி சிரித்தபடியே இருந்தாள் சிறுபெண்.




பீடி வாங்கியபின் கிடைத்த மீதிச் சில்லறையை வைப்பதற்காகவோ என்னவோ, கையிலிருந்த துப்பாக்கியைக் கடை மேசையில் வைத்தான் அவன். சிறுகுழந்தையாய் சிரித்தபடி, " இது சுடுமா..? " எனக்கேட்டாள். என்ன நினைத்தானோ?. துப்பாக்கியைக் கையிலெடுத்துச் சுட்டுக்காட்டினான். துப்பாக்கிச் சத்தம் கேட்டு உள்ளே சென்ற தாய் ஓடிவந்தாள். உணவருந்திக்கொண்டிருந்த தந்தை ஓடிவந்தார். அண்டைவீட்டுக்காறர் ஓடிவந்தனர். ஆனால்... சுடுமா எனக்கேட்ட பேதை மட்டும் பேசவில்லை. வீழந்து கிடந்த அவளின் தலையினடியிலிருந்து செங்குருதி வெளிவரத் தொடங்கிற்று.




வீதியிலிறங்கிய வீனர்கள் வரிசை, நடக்கத் தொடங்க, புகைந்த துப்பாக்கியினைத் துடைத்த பின் திரும்பி அவனும் நடந்தான். என்ன நடந்ததென்று வினவிய சகபாடிக்குச் சிரித்தபடி சொன்னான்..




" ஏப்ரல் பூல்.."




இங்கும் வாசிக்க உண்டு

பிரான்ஸ் அரசியலில், ஈழத்தமிழர்கள்.


தமது சொந்த மண்ணின் அரசியல் இன்னல்களால், புலம்பெயர்ந்த ஈழத்தமிழர்கள், இப்போ தாம் வதியும் நாடுகளிலுள்ள அரசியல் செயற்பாடுகளில் இணைந்துவருவது தெரிந்ததே. அன்மையில் பிரான்ஸில் நடைபெற்று முடிந்துள்ள உள்ளுர் தேர்தலில் 12 தமிழர்கள் தெரிவாகியுள்ளனர். இவர்கள் பாரிஸ் மற்றும் அதன் சுற்றுப்புற உள்ளுராட்சி மன்றங்களுக்கு தெரிவுசெய்யப்பட்டுள்ளனர்.

இதில் 7 பேர் ஈழத் தமிழர்களாவர். மூவர் பாண்டிச்சேரியை சேர்ந்தவர்களாவர். இதேவேளை ஈழத் தமிழர்கள் பிரான்ஸின் தேர்தலின் மூலம் தெரிவாகியுள்ளமை அங்குள்ள ஈழத் தமிழர்கள் மத்தியில் புத்துணர்வை ஏற்படுத்தியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

பிரான்ஸில் சுமார் 125 ஆயிரம் தமிழர்கள் வாழ்கின்றனர். இதில் 50 ஆயிரம் பேர் ஈழத்தமிழர்களாவர். பிரான்ஸின் உள்ளுராட்சி தேர்தலில் 14 ஈழத்தமிழர்கள் போட்டியிட்டனர்.

தேர்தலில் வெற்றி பெற்ற ஈழத் தமிழர்கள் அனைவரும் இடதுசாரி கட்சிகளை பிரதி நிதித்துவப்படுத்தி போட்டியிட்டவர்களாவர். இதே வேளை இந்த தெரிவுகளின் மூலம் பிரான்ஸின் தமிழர்கள் வலதுசாரி கட்சியான தற்போது அரசாங்கத்தின் மீது தமது வெறுப்பை வெளிப்படுத்தியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. வெற்றிபெற்றவர்களுக்கும், வெற்றிபெறச் செய்தவர்களுக்கும் பாராட்டுக்களும் வாழ்த்துக்களும்.

கடந்த வருடத்தில் நோர்வேயில் இடம்பெற்ற உள்ளுர் தேர்தலில் ஈழத் தமிழர்கள் ஐவர் தெரிவு செய்யப்பட்டனர். இந்த தேர்தலில் நோர்வேயில் உள்ள 70 வீத ஈழத் தமிழ் பெண்கள் தமது வாக்குகளை செலுத்தியதாக புள்ளிவிபரங்கள் தெரிவித்திருந்தன..

சுவிற்சர்லாந்து தேசிய அரசுத் தேர்தலில் போட்டியிட்ட ஈழத்துப் பெண் குறித்த செய்திகளை இங்கு படிக்கலாம்.


இதுவும் பிடிக்கும், படிக்கலாம்.


 

நன்றி, வணக்கம்.