தென்றலும் புயலும்.


தென்றலும் புயலும். ஈழத்துத் திரைப்படவரலாற்றில் குறிப்பிட்டுச் சொல்லத்தக்கவொரு திரைப்படம். திருகோணமலைக்கலைஞர்கள் பலரின் கூட்டுழைப்பில் உருவான ஒரு திரைப்படம். இது குறித்து நீண்ட நாட்களாகவே எழுத வேண்டும் என எண்ணியிருந்தேன். அந்த எண்ணத்திற்கான முக்கிய காரணம், இத்திரைப்படத்தில் நடித்த கலைஞர் சித்தி அமரசிங்கம்.
தென்றலும் புயலும் திரைப்படத்தின் தயாரிப்பாளர், டாக்டர் வேதநாயகம் அவர்கள். இவர் திருகோணமலையைச் சேர்ந்தவர். அவரோடு பங்குகொண்டவர், யாழ். அராலியைச் சேர்ந்த வங்கி முகாமையாளராகிய சிவபாதவிருதையர். இவர்கள் இருவருமே படத்தின் முக்கிய கதாபாத்திரங்கள். கதையின்படி, ஒரே குடும்பத்தைச் சேர்ந்த சகோதரர்கள்.
இவர்களுக்கான நாயகிகளாக, சந்திரகலாவும், ஹெலனும் நடித்தார்கள். சித்தி அமரசிங்கம் நகைச்சுவைப் பாத்திரமாகத் தொடங்கி, கதையின் நிறைவுப்பகுதியில், குணசித்திரப் பாத்திரமாக வரக்கூடிய முக்கிய பாத்திரமொன்றில் நடித்தார். இசை. திருமலை பத்மநாதன்.
இந்தப்படத்தின் படப்பிடிப்புக்கள் திருகோணமலையின் ரம்மியமான பகுதிகளில் நடந்தன. குறிப்பாக மூதூர், நிலாவெளி, உப்பாறு, ஆகிய பகுதிகளில், பாடல் காட்சிகளும், வெளிப்புறக்காட்சிகளும் படமாக்கப்பட்டன. ஈழத்துத்திரைப்படங்களில் மிகநல்ல ஒளிப்பதிவில் வந்த படங்களில் இதுவும் ஒன்று. கறுப்பு வெள்ளைப்படமாக இருந்த போதும், வெளிப்புறக்காட்சிகள் மிக அழகாகப் பதிவு செய்யபட்டிருந்தது. இசையும் மிக இதமான இசையாகவிருந்தது. பின்னர் இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தின்,
காலை ஒலிபரப்புக்களில் அடிக்கடி ஒலித்த " சந்திரவதனத்தில் இந்த நீலப்பூ.." என்ற பாடல் இந்தத்திரைப்படத்தில் வந்த பாடலென்றே நினைக்கின்றேன்.

மூதூர், உப்பாறு, பகுதியில் எடுக்கப்பட்ட இப்பாடல்காட்சியில், அந்தப்பகுதியின் இயற்கை அழகு நன்றாகவே பதிவு செய்யப்பட்டிருந்தது. திரைக்கதையைப் பொறுத்தவரையில் பெரிய மாற்றங்கள் இல்லை. தென்னிந்தியச்சினிமாவின் நகலெடுப்புத்தான். ஆனால் இதில் பங்குகொண்ட கலைஞர்கள் பலர் உயிரோட்டமான நடிப்பினால் மெருகூட்டினார்கள். அப்படியான கலைஞர்களில் சித்தி அமரசிங்கம் குறிப்பிடத்தக்கவர்.
தோற்றத்தில் நகைச்சுவை நடிகர் நாகேஸின் தோற்றத்தை ஒத்திருந்தவர், பேச்சிலும் ஏறக்குறைய அதே நகைச்சுவையுணர்வு கொண்டவர் என்பதை, நேரில் சந்திந்தபோது தெரிந்து கொண்டேன். தென்றலும் புயலும் திரைப்படத்தை, திருமலை ஜோதித்தியேட்டரில் நண்பர்களோடு பார்த்தபோது, இடைவேளை நேரத்தில் சித்தி அமரசிங்கம் முதலில் அறிமுகமானார். பார்வையாளர்களோடு அமர்ந்திருந்து, மக்கள் ரசனையை அவதானித்துக் கொண்டிருந்த அவர் வெளியே வந்திருந்தார். அட்டகாசமான கலகலப்பான மனிதரெண்டும் சொல்ல முடியாது, அதே நேரம் படு அமைதியான மனிதருமல்ல. ஆனால் அந்தக் கணத்தில் அறிமுகமாகிய எங்களோடு, எங்கள் கருத்துக்களோடு நெருக்கமாக நின்றார். நேசமாகக் கேட்டார். திரும்பவும் படம் பார்த்தோம். படத்தின் நிறைவுக்காட்சியில் அமரசிங்கம் ஏற்றிருந்த பாத்திரத்தின் தியாகமொன்றால், உணர்வு பூர்வமாக பார்வையாளர்களின் மனங்களில் நிறைந்திருந்தார். அன்றைய சந்திப்பின் காரணமாய் எங்களிலும் நிறைந்திருந்தார்.
அதற்குப்பின் பல தடவைகள் அவரோடும் பழகும் வாய்ப்புக் கிடைக்காவிட்டாலும், கிடைத்த சந்தர்ப்பங்களில் நெருங்கிப்பழகியுள்ளார். தென்றலும் புயலும் திரைப்படம் பெற்ற வரவேற்புத் தந்த உற்சாகத்தில் அமரசிங்கம் ஒரு புதிய முயற்சியை முன்னெடுத்தார். "அமரன் ஸ்கீறீன்" என்ற நிறுவனத்தை உருவாக்கி, அதன் மூலம் ஒரு திரைப்படத்தை உருவாக்கும் திட்டத்தில் இறங்கினார். இதற்காக அவர் யோசித்தவிதம் சற்று வித்தியாசமானது.
திரைப்படத்திற்கான திட்டமிட்ட பொருளாதாரத் தேவை ஒரு இலட்சம் இலங்கை ரூபாய்கள். இதை பெற்றுக்கொள்ள முதலீட்டாளர்களை அவர் நாடவில்லை. மாறாக மக்களை, ரசிகர்களை நாடினார். ஒரு பங்கு ஒரு ரூபாய் என ஒரு இலட்சம் பங்குகள் விற்கத்திட்டமிட்டார். அவரிடம் கேட்டேன், ஏன்? ஒரு ரூபாய் பங்குகள் என்று. அதற்கு அவர் சொன்ன பதில்தான் இன்றளவும் என்னுள் அவர் நினைவுகளை நிறுத்தி வைத்திருக்கிறது. "தம்பி! நூறு ரூபாய் பங்கோ ஆயிரம்ரூபாய் பங்கோ வைத்தால் கெதியாத் தொகையைச் சேர்த்திடலாம்தான். ஆனால் நான் நினைப்பது அதுவல்ல. எல்லா மக்கள் தரப்பினரும், எல்லாரசிகர்களும், அந்தப்படத்தின் முதலீட்டாளர்களாக இருக்கவேண்டும். அதற்கு ஒரு ரூபாய் பங்குதான் சரியாக இருக்கும்..." என்றார்.
அவரது எண்ணமும் செயலும் எனக்கு ஏற்புடையதாகவும் மகிழவாகவும் இருந்தது. நானும் என் நண்பர்களும் கூட சில பங்குகளை வேண்ட முடிந்தது. அதன்பின் அவரைக்கண்ட போதுகளிலெல்லாம், அவர் முயற்சியோடு முன் முனைவது கண்டிருக்கின்றேன். ஆனால் காலத்தின் சுழற்சியில் அவர்முயற்சி கை கூடாது போய்விட்டது. எங்கள் நிலத்தில் எழுந்த இனப்பிரச்சினைதான் எல்லாவற்றையும் அழித்து விட்டதே. அதற்குள் அமரசிங்கம் அவர்களின் ஆசையும் அடங்கிவிட்டது. ஆனாலும் அமரசிங்கம் அவர்களின் செயற்திறன் வேறுபல வடிவங்களில் அவரது இறுதிக்காலம் வரை நிறைவு பெற்றதாக, திருமலையைப்பிரிந்திருந்தபோதும் அறியமுடிந்தது. ஆம், முடிந்தவரை முயலும் அமரசிங்கம் போன்றவர்களால், சும்மா இருக்க முடியாது.
படம் உதவி: ரமணீதரன்

நடந்த நூலகம் நொடிந்த கதை.





திருகோணமலையின் பசுமைக்கிராமமொன்றில் வாழ்ந்த காலமது. என் கல்லூரிக் காலம் . வாசிப்பு, இசை, ஊர்சுற்றல், நண்பர்கள் என உல்லாசமாக இருந்த காலமும் கூட. வாசிப்பு முதல் விருப்பமாக அப்போதுமிருந்தது. ஆனால் வாசிப்புக்கான புத்தகங்களைப் பெறுவது என்பதுதான் கடினம். அதிலும் நல்ல புத்தகங்களை என்னது என்று உரிமை கொண்டாடும் அகமகிழ்வு அளவிடமுடியாதது. ஆனால் அதற்குத் தடையாயிருந்தது பொருளாதாரம். அதை வெற்றிகொள்ளச் சிந்தித்தபோது வந்துதித்த எண்ணத்தில் உருவானதுதான் என் நடமாடும் நூலகம்.



வாசிப்பில் யாசிப்புள்ள இருபது பேர்களைச் சேர்த்துக் கொண்டேன். ஒவ்வொருவரிடமிருந்து மாதாந்தம் ஒரு குறிப்பிட்டதொகையைப் பெற்றுக்கொள்வது. திருகோணமலை நகரிலுள்ள இரு முக்கிய புத்தகசாலைகளாகிய, சிதம்பரப்பிள்ளை புத்தகநிலையம், வாணிபுத்தகநிலையம், இரண்டிலும் இருந்து தெரிவு செய்யப்பட்ட புத்தகங்களை வாங்கிக்கொள்வேன். தெரிவு செய்யப்பட்ட உறுப்பினர்கள் இருபதுபேரில், சராசரியான வாசகர்கள், தீவிரவாசகர்கள்,எனக் கலந்திருந்ததால், வாங்கும் புத்தகங்கள் கலந்தேயிருக்கும்.

வாங்கிய புத்தகங்களுக்கு உறையிட்டு, அடையாளம் வைப்பதற்காக நூல் ஒட்டி, (வாசிக்கும் புத்தகங்களின் பக்கங்களை மடித்து அடையாளமிடுவது எனக்குப் பிடிப்பதில்லை) இலக்கமிட்டு, பெரிய பிளாஸ்டிக் கூடையொன்றில் அடுக்கி, வார இறுதிகளில், ஐந்து மைல் சுற்று வட்டத்துக்குள்ளிருந்த என் வாசக நண்பர்களின் வாசல் தேடிச் சைக்கிளில் செல்வேன். வாரத்திற்கு ஒருத்தருக்கு இரண்டு புத்தகங்கள் என, சுற்று ஒழுங்கில் பரிமாறிக்கொள்வோம். வருடமுடிவில் அவரவர் பிரியப்பட்ட புத்தகங்களைச் சம அளவில் பகிர்ந்து கொள்வோம். இப்படிப் பகிரப்படும் போது பல நண்பர்கள் தங்கள் பங்குகளை என்னிடம் தந்ததாலும், எனது விருப்பத்தின் காரணமாகவும், இரண்டான்டுகளுக்குள்ளாக சுமார் முந்நூறு புத்தகங்கள் என் நூலகத்தில் சேர்ந்திருந்தன. இந்த நகர்வில் நான் நுகர்ந்து கொண்ட சுகமான மற்றுமொரு அனுபவம், ஒவ்வொரு உறுப்பினர்களுடனும் வாசிப்பின்னான, வாசக அனுபவப் பகிர்வு. இது பலநேரங்களில் நல்ல பல கருத்தாடல்களையும் தந்தன.



வீரகேசரிபிரசுர வெளியீடாக வந்த அனைத்துப்புத்தகங்கள், அகிலன், சாண்டில்யன், தீபம் பாரத்தசாரதி, சிவசங்கரி, ஆகியோரின் படைப்புக்கள், எனத் தொடங்கி பின்னாட்களில் கார்க்கியின் தாய், வால்காவிலிருந்து கங்கை வரை எனத் தொடர்ந்தது. இந்தியக் கலைக்களஞ்சியம் என்ற தலைப்பில், இந்திய உயர்ஸ்தானிகராலயம் வெளியிட்ட இரு தொகுப்புக்கள், இந்தியக்கலை கலாச்சாரம் பற்றிய பல்வேறுவிடயங்களையும் சொல்லும் பதிப்பு. அப்போதே அதன் விலை முந்நூறு ரூபாய்களுக்கு மேலிருந்தது. நூலகத்தின் இரண்டாமாண்டு நிறைவு நினைவாக அத்தொகுதி வாங்கப்பட்டது. இதுதவிர இடசாரிச்சிந்தனையாளர்களால் வெளியிடப்பட்ட சில காலாண்டுச்சஞ்சிகைகள், சிரித்திரன் சுந்தரின் படைப்புக்கள், டொமினிக் ஜீவாவின் மல்லிகைத் தொகுப்புக்கள், வெளியீடுகள், என நிறைந்திருந்தது என் நூலகம்.



திருகோணமலையைவிட்டு நான் பிரிந்தபோதும், என்வீட்டிலிருந்த ஒரு அலுமாரியில் அவை அடுக்கிவைக்கப்பட்டேயிருந்தது. பின்னொரு நாளில் என் குடும்பத்தாரும் விடுமுறைக்காக யாழ்ப்பாணம் வந்திருந்தபோது, அந்த விபரீதம் நடந்தது. அப்போது திருகோணமலைப்பிரதேசத்தில் மீளவும் ஒரு இனக்கலவரம் நிகழ்ந்தது. தமிழ்மக்கள் பலரும், தங்கள் வீடுகளைவிட்டு வேறிடங்களில் தஞ்சம் பெற்றிருந்த தருணமொன்றில், எங்கள் வீடு சூறையாடப்பட்டது.


பெட்டி இணைக்கப்பட்ட உழவு இயந்திரமொன்றுடன் வந்த கயவர்கள், வீட்டில் உள்ள பொருட்களைச் சூறையாடத் தொடங்கினார்கள். என் நண்பனின் தந்தையிடம் சொல்லி, நான் ரசித்து, பூமுதிரைப் பலகையில் செய்து வைத்திருந்த என் நூலக அலுமாரியும் அவர்கள் கண்களில் பட, அதற்குள் இருந்த புத்தகங்களை, எடுத்தெறிந்து மகிழ்ந்தார்கள். வாசிப்பு வாசனையற்ற ஒரு கயவன், வண்ணக்காகிதங்களில் உறையிட்டிருந்த அந்தநூல்களை, வானத்தில் எறிந்து கீழேவிழுவதைப் பார்த்து மகிழ்ந்தானாம்.



வயோதிபம் காரணமாக இடம்பெயராதிருந்த பக்கத்து வீட்டு முதியவர், திரும்பிச் சென்ற என்குடும்பத்தாரிடம் சொன்ன தகவல்கள் இது. இருபத்தைந்து வருடங்களுக்கும் மேலாக அந்த மண்ணில் தான் தேடிய தேட்டங்களின் அழிவை நினைத்து என் அப்பா அழுதார். இரண்டு வருடங்களாக இரசித்துச் சேர்ந்த, என் நேசத்துக்குரிய புத்தகங்களை இழந்து,
நான் அழுதேன். நடமாடும் நூலகம் என நான் நகைப்பும், பெருமையுமாய், சொல்லி மகிழ்ந்த என் உழைப்பு, என் தேடல், இல்லாதாக்கபட்டது.


இத்தனைக்கும் எங்கள் வீடு சூறையாடப்பட்டது, சிங்களக்காடையர்களால் என்று நீங்கள் நினைத்தால் அதுதான் இல்லை. கிழக்கில் தமிழ்மக்களின் துயர்கள் பலவற்றிலும் பங்குகொண்டிருக்கும், அவர்களும் தமிழ்பேசுபவர்கள்தான். இதற்குப் பின்னரும் என் நூற்சேகரிப்புக்கள் இரண்டு தடவைகள், இந்த யுத்தத்தின் காரணமாகவே அழிந்து போயிருக்கின்றன. அதுபற்றி இன்னுமொரு தடவை சொல்கிறேன்.

ஈழத்து இசைச் சகோதரர்கள்.


எழுபதுகளில் ஒருநாள் மாலை, திருகோணமலை புனிதசூசையப்பர் கல்லூரியின் பிரமாண்டமான, மண்டபத்தில் அந்த இசைநிகழ்ச்சி நடைபெறுவதாக ஏற்பாடாகி இருந்தது. நாம் படிக்கும் கல்லூரியில் நடைபெறும் இசைநிகழ்ச்சி என்பதற்கும் மேலாக, எங்கள் நண்பர்கள் வட்டத்திற்கு பிடித்தமான கலைஞர்கள் கலந்து கொள்வதனால், நாங்களும் ஆர்வமாகவே சென்றிருந்தோம். நிகழ்ச்சி மாலை 6.00 மணிக்கு என்றிருந்தது. நாங்கள் 5.30 மணிக்குச் சென்றபோது, மண்டபம் நிரம்பியிருந்தது. எங்களுக்கோ, மண்டபம், பலகணி, எல்லாமாக, சுமார் எழுநூறுபேர் ஒரே தடவையில் அமர்ந்திருந்து நிகழ்ச்சி பார்க்கக் கூடிய அந்த மண்டபம் நிகழ்ச்சிக்கு முன்னதாக நிரம்பி விட்டதா என்று ஆச்சரியம். நிகழ்ச்சிக்கு முன்னதாக நிரம்பியிருந்ததே ஆச்சரியமன்றி, அந்தக் கலைஞர்களுக்காக கூட்டம் சேர்வது ஒன்றும் ஆச்சிரியமல்ல. தங்களின் சுய முயற்சியாலும், திறமையாலும், ஈழத்து மெல்லிசைவரலாற்றில், முதலாவது இசைதட்டை வெளியிட்டு, ஈழத்து மெல்லிசை மன்னர்கள் எனும் சிறப்பினைப் பெற்றுக்கொண்ட சகோதரர்கள் அவர்கள்.


இந்நிகழ்ச்சிக்கு முன்னரே அவர்கள் இலங்கைத்தீவின் பல பாகங்களிலும், பல மேடைநிகழ்ச்சிகளைச் செய்திருந்தனர். அப்படியான இசைக்கச்சேரிகளின் போது, அவர்கள் காட்டிய பல நுட்பங்களும், வித்தியாசங்களுமே, எம்.பி பரமேஸ், எம்.பி கோணேஸ், எனும் அந்தச் சகோதரர்களின் இசை மேல் பலரும் விருப்பமுற வைத்தது. மற்றைய இசைக்குழுக்களிடம் இல்லாத மேலதிக திறமை, இவர்கள் சொந்தமாகவே பாடல் இயற்றி, இசையமைத்துப் பாடினார்கள். அதுவே ஈழத்து மெல்லிசை வரலாற்றில், என்றும் அவர்களை விட்டு விலகிச் செல்ல முடியாவாறு அமைந்து விட்டது. சகோதர்களில் மூத்தவரான பரமேஸ் பாடலை இயற்றிப் பாடவும் செய்வார். இளையவர் அதற்கான இசைக்கோப்பினைச் செய்வார். இவர்களோடினைந்த மற்றொருவர், மகேஸ். அப்படி அவர்களின் படைப்பிலுருவான " உனக்குத் தெரியுமா..? பாடல்தான் இலங்கையில் , இசைத்தட்டில் வெளிவந்த முதலாவது தமிழ் பாட்டு.

பாடலும், இசையும் கூட, அப்போது வெளிவந்த தமிழகப் பாடல்களிலிருந்து வித்தியாசமாகத்தான் இருந்தது. இலேசான மேலைத்தேய இசைச்சாயலோடு, ஈழத்தின் தன்மையும் சேர்ந்திருக்கும். இந்த நுட்பங்களைவிடவும், இளவயதில் அவர்களது இசை நிகழ்ச்சிகளில் வேறு சில விடயங்கள் அதிகம் பிடித்திருந்தன. மற்றெந்த தமிழ் இசைக்குழுவும், றம்பெட் வாத்தியத்தை பாவிக்காத வேளையில் இவர்களது இசை நிகழ்ச்சிகளில், அது இசைக்கப்படும். இசைக்குழுவின் கலைஞர்களனைவரும் சீருடையில் வருவார்கள். நிறையத் தாளவாத்தியங்கள் இருக்கும். கோணேஸ் மேடையில், இசைக்கோப்பினை ஒருவித அழகியலுடன் கட்டமைப்பார். பரமேஸின் பாடல் வரிகளும், குரலும் அற்புதமாவிருக்கும். இவை எல்லாவற்றுக்கும் மேலாக நல்ல ஒலித்தரம் இருக்கும்.

அன்று நாங்கள் பார்க்கச் சென்றிருந்த நிகழ்ச்சி, முதற்தடவையாக ஒரு ஆர்கெஸ்ட்ரா ஒழுங்கமைப்பில் வடிவமைக்கப்பட்டிருந்து. தெரிவு செய்யப்பட்ட பதினான்கு பாடல்களை மட்டுமே பாடுவதாகவும், சொல்லப்பட்டிருந்தது, எங்கள் எதிர்பார்ப்பை அதிகப்படுத்தியிருந்தது. அறிவித்தது போன்று குறித்த நேரத்தில் அரங்கின் திரைவிலக ஒரே ஆரவாரம். அனைத்துக்கலைஞர்களும் வெள்ளைநிற கோட்சூட் ஆடை அலங்காரத்துடன், முழு ஆர்கெஸ்டாரவும் நின்றது. இசை ஆரம்பமாகியது. நான்கு றம்பேட் வாத்தியக்கலைஞர்கள், எலெக்ட்றிக் கிட்டார், றம்செற், கீபோட் என , இருபத்திமூன்று கலைஞர்களுடன் மேடையில் தங்கள் திறமைகளை காண்பித்துக் கொண்டிருந்தார்கள். திரைப்படப்பாடல்கள், அவர்களது சொந்த இசையமைப்பில் வந்த பாடல்கள் என மாறிமாறி வந்தது.


அந்தக்காலப்பகுதியில் வந்த பிரபலமான தமிழ்திரைப்படப்பாடல்களில் ஒன்று "என் தேவனே உன்னிடம் ஒன்று கேட்பேன்.." பாடலுக்கு முன்னர் கிட்டார் இசை அருமையாக வரும், அதன்பின் மற்ற வாத்தியங்களும் பாடலும் வரும். அந்தப்பாடல் குறித்த அறிவிப்பு வந்து, கிட்டார் இசையும் தொடங்கிற்று. கிட்டார் இசை முடிய முன்னரே மற்றைய வாத்திய இசை வந்து விட்டது. உடனே இசைக்கட்டமைப்புச் செய்த கோணேஸ் இசையை நிறுத்தி, திரும்பவும் முதலில் இருந்து ஆரம்பித்தார். இரண்டாவது தடவை எல்லாம் சிறப்பாகச் சேர்ந்து கொண்டன. அந்தப்பாடல் முடிந்ததும், கைதட்டல்கள் இரட்டிப்பாக இருந்தன. தாங்கள் தெரிவு செய்த பாடல்களை மட்டுமே இசைக்கும் பொழுது, அதை முழுவதும் நிறைவாக ரசிகர்களுக்குக் கொடுக்க வேண்டும் என்பதே தங்கள் விருப்பம் என கோணேஸ் சொன்னபோது, ரசிகர்கள் மகிழ்ச்சி ஆரவாரம் செய்தார்கள். நிகழ்ச்சி முடிந்து நாங்கள் வெளியே வரும்போது , அடுத்த நிகழ்ச்சிக்காக ரசிகர்கள் வெளியே காத்திருந்தார்கள், இரண்டாவது காட்சிக்காக. ஆம் அன்று இரண்டாவது தடவையாகவும் , அந்நிகழ்ச்சி நடந்தது. நான் நினைக்கின்றேன், திருமலையில், ஒரு ஆர்க்கெஸ்ட்ரா, ஒரேநாளில் ஓரே மேடையில், இரு தடவைகள் நிகழ்ச்சி செய்தது, அதுவொன்றாகத்தான் இருக்கும்.

இவ்வளவு சிறப்புக்கள் பெற்றிருந்த அக்கலைஞர்களின் ஆரம்ப காலம் ஒன்றும் அவ்வளவு இனிமையாக இருந்ததில்லை. சிரமங்களைத் தோளில் சுமந்தவாறே, வெற்றிச்சிகரத்தின் உச்சிக்குச் சென்றார்கள். எங்கும் உள்ளது போல், இந்த இசை சகோதர்களினிடையேயும் பிரிவு வந்தது. சகோதரர்கள் பிரிந்துகொண்டபின், அவர்களது நிகழ்ச்சிகள் சிறப்பாகப் பேசப்படவில்லை. அதனாலேயே ஈழத்தின் மெல்லிசைப் போக்கில் ஒரு தேக்கம் ஏற்பட்டது என்னும் சொல்லலாம். இன்னும் என்னென்னவோ சாதித்திருக்க வேண்டிய சகோதரர்களின் இணைந்த இசைப்பயனம், இடையில் நின்று போனதென்னவோ சோகம்தான்...

ஆனால் இணைந்திருந்த காலங்களில் படைத்ததென்னவோ என்றும் இளமையாக இருக்கக் கூடிய இசைக்கோலங்கள்தான்.
இன்றும் இளமையாக இருக்கும் அந்தப்பாடல்களில் சில உங்களுக்காக.....





பாடல்களும், படமும்:-நன்றி! www.tamil.fm இணையத்தளம்

சல்லி அம்மனும் கடல் அம்மாவும்


திருகோணமலையிலிருந்து நிலாவெளி நோக்கி நீளும் கடற்கரையில், சாம்பல்தீவுக்குப் பக்கத்தில் அமைந்ததுதான் சல்லி. இதன் கடற்கரையில் அழகான ஒரு அம்மன் கோவில். இந்தக்கோவிலால் அந்த இடத்திற்கு சல்லி எனப்பெயர்வந்ததா? அல்லது அந்த இடத்தில் அமைந்ததால் சல்லி அம்மன் என கோவில் பெயர்பெற்றதா என்ற வரலாற்றுக குறிப்புக்கள் எதுவும் தெரியவில்லை. தெரிந்துகொள்ளும் ஆர்வமில்லாத வயதில் சல்லிஅம்மன்கோவில் எனக்கு அறிமுகமானது, இந்தத் தெரியாமைக்கு ஒரு காரணமாகவிருக்கலாம்.

வைகாசிமாதத்தில் வரும் பெளர்ணமியிலோ அல்லது அதை அண்டியோ சல்லி அம்மன் கோவில் பொங்கல் வரும். பொங்கலுக்குப் பத்து நாட்களுக்கு முன்னரே சல்லிக்கிராம கடற்றொழிலாளர்கள், தங்கள் தொழிற்படகுகளை கரையேற்றி விடுவார்கள். அந்த பத்து நாட்களும் அவர்கள் கடலுக்குச் செல்வதில்லை. அம்மன் கோவில் பூசை வழிபாடுகளோடு ஒன்றித்து விடுவார்கள். கடைசி மூன்றுநாளும் விசேடமென்றாலும், பத்தாம் நாள் பொங்கல்தான் பிரசித்தம்.

திருகோணமலை மத்திய பேருந்து நிலையத்திலிருந்து ஒவ்வொரு பதினைந்து நிமிடத்துக்கு ஒரு பேருந்து சல்லிஅம்மன்கோயிலுக்கு மக்களை அள்ளிச் செல்லும். அன்று மதியத்திலிருந்தே தொடங்கிய இந்த அள்ளல் அழைப்பு, நள்ளிரவு தாண்டியும் தொடரும். சல்லிக்கிராமத்தின் நுழைவிலேயே பேரூந்துகள் மறிக்கப்பட்டுவிடும். அங்கிருந்து கோவிலுக்குச் செல்லும் வழியெங்கும் தற்காலிக மின்விளக்குகளும், ஒலிபெருக்கி இணைப்பும் செய்யப்பட்டிருக்கும். யாழ்ப்பாணம் ஈச்சமோட்டை “ றீகல் சவுண்ட்ஸ் “ தனது நூற்றுக்குமதிகமான ஒலிபெருக்கிகுழல்களை, உயர்ந்த தென்னை மரங்களில் கட்டி, அந்தப்பிரதேசமெங்கும் ஒலியால் அதிரவைக்கும். அதன் குழல்களில் உள்ள இலக்கங்களை வைத்து இம்முறை எத்தினை குழல்கள் கட்டியுள்ளார்கள் என்பதை அறிவதில் எமக்கு ஒரு திருப்தி. கோவிலை நெருங்க நெருங்க திருவிழாக்கடைகள் பல இருக்கும். விளையாட்ப் பொருட்கள், அலங்காரப்பொருட்கள், ஆடைகள், கச்சான் கடலைக் கடைகள், குளிர்பாணக்கடைகள், என்பதுதான் வழமையான கடைகள். ஆனால் இங்கே வித்தியாமாக இன்னுமொரு கடையும் இருக்கும். அதுதான் புட்டுக்கடை. ஆம், தமிழகத்தில் பலாப்பழத்துக்கு, பண்டிருட்டி என்பது போல, திருகோணமலைப்பகுதியில் சாம்பல்தீவுப்பகுதி. மிகச்சுவையான பலாப்பழங்கள். இந்தப்பலாப்பழங்கள் காய்க்கும் காலமும் சல்லி அம்மன் கோவில் திருவிழாக்காலமும் ஏறக்குறைய ஒரே காலப்பகுதி என்பதால், சல்லி அம்மன் கோவில் திருவிழாக்கடைகளுள், பலாப்பழமும் புட்டும் சேர்த்து விற்பனைசெய்யும் கடைகளும் இருக்கும். ஓலைப்பெட்டிகளில்,இலேசான சூட்டில் உலிர்ந்த புட்டும் பலாப்பழமும், தருவார்கள். அந்த ஓலைப்பெட்டியிலிருந்தும், பலாப்பழத்திலிருந்தும், வரும் வாசனைகளின் கலவையில் புட்டுத் தனிச்சுவை தரும். சல்லிக்குப் போய் புட்டுச்சாப்பிடாமல் வந்தால், திருப்பதி போய் லட்டுச் சாப்பிடாமல் வந்தது போலாகிவிடும்.

கோயிலுக்குப் போனா கும்பிட வேணும், இதென்ன புட்டுச் சாப்பிட்டுக்கொண்டு.. என்டு ஆர் புறுபுறுக்கிறது. கொஞ்சம் பொறுங்கோவன்...அப்பிடியே பராக்குப் பார்த்துக் கொண்டு நடந்தால் கோயில் வரும். கோயிலொன்டும் பெரிய கோயிலல்ல. அது ஒரு ஆகமவழிபாட்டுக் கோயிலுமல்ல. அந்தப்பிரதேசத்தில் வாழும் கடற்தொழிலாளர்களின் நம்பிக்கைத் தெய்வம் சல்லி அம்மன். அதீதமான நம்பிக்கையும், வைராக்கியமான பக்தியும் கொண்ட கடற்தொழிலாளர்கள், தினசரி தொழிலுக்குப் புறப்படும் போது கற்பூரம் ஏற்றிக் கும்பிட்டுவிட்டுச் செல்வார்கள். மறுநாள் காலை தொழில் முடித்துக் கடலால் வந்ததும், தாங்கள் பிடித்த மீன்களில் ஒரு பகுதியை அம்மனுக்குக் காணிக்ககையாக கோவில் முன் உள்ள தொட்டியில் இட்டுவிடுவார்களாம். அப்படிச் சேரும் மீன்களை விற்ற வருமானத்திலேயே சல்லி அம்மனின் நித்திய வாழ்வு. ஆனால் பொங்கலும், பொங்கலுக்கு முந்தைய நாட்களும், அப்பிரதேச மக்களுக்கு மிக முக்கிய தினங்கள். பொங்கல் தினத்தன்று திருகோணமலைச்சுற்றுவட்டாரமே சல்லிக்குத் திரண்டு வரும்.

கோயிலுக்கு முன்னால் பத்துமீற்றர் தூரத்துக்குள், கடலன்னை மெதுவாக அலை அசைப்பாள். கரையில் சல்லிக்கிராமக் கடற்றொழிலளர்களின், படகுகளோடு, வேறுசில படகுகள் இழுத்துக் கட்டப்பட்டிருக்கும். அவை வல்வெட்டித்துறை,பருத்தித்துறை, முல்லைத்தீவுப் பிரதேசங்களில் இருந்து வந்த கடற்தொழிலாளர்களின் படகுகள். தொழில்தொடர்புகள், உறவுநிலைத் தொடர்புகள் வழி, அவர்களும் சல்லிஅம்மன் பொங்கலுக்கு வருவார்கள். இவர்களையெல்லாம் விட, பொங்கலன்று அவர்களின் நம்பிக்கைத் தெய்வம், கடலாக வருவாளாம். இதுபற்றி எனக்கு முதலில் ஆர்வமிருக்கவில்லை.

முதன்முறை சல்லி அம்மன் கோவிலுக்குச் சென்றபோது, அந்தகடற்கரை முழுக்க நண்பர்களோடு அலைந்துவிட்டு, இரண்டு மூன்று தடவை புட்டுச்சாப்பிட்டுவிட்டுக் களைத்துப்போய் கடற்கரை மணலில் இருந்தவர்கள் அப்படியே உறங்கிவிட்டோம். திடீரென நாங்கள் உறங்கிக் கொண்டிருந்த இடமெல்லாம், கடல்நீர் சிறு அலையாய் வந்து போனது. தூக்கத்திலிருந்தவர்கள், பேசிக்கொண்டிருந்தவர்கள், எல்லோரும் நனைந்துவிட்டார்கள். ஆனால் கோவில் பகுதியில், ஒருவித ஆர்பரிப்புத் தெரிந்தது. பறைகள் அதிர்ந்தன. அப்போதூன் சொன்னார்கள், பொங்கல்பானை பொங்கித்தள்ள கடலம்மன் வந்து வாங்கிச் சென்றாவென்று. இது அங்குள்ள ஒரு வழமையாம். இதைக் கேட்ட மாத்திரத்தில் எமக்கு ஏற்றுக்கொள்ள முடியவில்லை. எங்கள் பகுத்தறிவு விடவில்லை. அடுத்த வருடம் அந்தத்தருணத்தை அக்கறையாக எதிர்கொண்டோம். அது நடந்தது. ஆச்சரியப்பட்டோம். அதற்கடுத்த வருடம் கோவிலுக்குக் கிட்டவாக நின்றெ பார்த்தோம். என்ன ஆச்சரியம், பொங்கல் பொங்கித்தள்ளும் அந்தத்தருணத்தில், அலையடித்து, பொங்கல் பானைவரை வந்து சென்றது.
இது எப்படி நடந்நது என இன்றுவரை எனக்குப் புரியவில்லை. சிலசமயங்களில் கடல் பொங்கிவருவது இயல்புதானென்றாலும், எப்படி அந்த பொங்கல் பானை பொங்கும் தருணத்தில் எழுந்து வந்தது. அந்தத் தொடர்பை ஏற்படுத்தியது யார்? அல்லது எது? தங்கள் அன்னையென நம்பும் கடற்தொழிலாளர்களின் நம்பிக்கையா? அல்லது வேறெதுவமா? அது எப்படிச் சரியாக அந்தத் தருணத்தில் மட்டும் அலையெழுந்து வருகிறது? கேட்பதற்கு ஆச்சரியமாகவிருப்பினும், நான் பார்த்த மூன்று தடவைகளிலும், இந்த நிகழ்வில் மாற்றமேதும் இருக்கவில்லை. அதன்பின்னர்தான் கடற்தொழிலாளர்களுக்கும் கடலுக்குமிடையிலான உறவை, நேசத்தை, பக்தியை சற்று உற்று நோக்கினேன். அது வித்தியாசமாகவே இருந்தது. மற்றவர்களால் இலகுவில் புரிந்து கொள்ள முடியாததாகவிருந்தது. பின் இந்தியாவிற்கு பயிற்சிக்காக சென்று வந்த போராளிகள், கடலோடிகளின் இறுக்கமான சில பழக்கவழக்கங்களைச் சொன்னபோது, அந்த உறவின் தாத்பரியம், கடல்மீதான அவர்களது நம்பிக்கைகள், மேலும், புரிந்து கொள்ள முடியாத புதிராகவே இருந்து.

இதை சென்றவருடத்திலேயே சொல்ல நினைத்திருந்த போதும், நம்பிக்கையீனத்தைத் தந்துவிடுமோ எனும் காரணத்தால், எழுதாமல் இருந்துவிட்டேன். சென்றவாரத்தில் தமிழ்நதியின் பதிவொன்றில், வசந்தன் இட்ட பின்னூட்டத்தில் கடல்பற்றிக் குறிப்பிட்டிருந்தது, இது பற்றி எழுதத்தூண்டியது. ஆனாலும் எனக்கு இவையெல்லாம் கடந்து, சல்லி என்றால் இனிப்பாய் நினைப்பது, புட்டும் பலாப்பழமும், அதைவிரும்பிய வரைக்கும் தந்து மகிழ்ந்த பள்ளித்தோழிகளும், அவர்களது பாசமிகு பெற்றோர்களும்தான்.


கல்யாணமும் முள்முருக்கும்.


நாங்கள் பெண்பார்க்கப்போவதில்லை எனச் சயந்தன் தொடங்க, வசந்தன் தொடர, சில ஊர்வழக்குகளும், தமிழகம், ஈழம் சார்ந்த ஒப்பீட்டுப்பார்வைகளும் வந்திருந்தன. பழம்பெரும் பதிவர்கள் வரிசையில் என்னையும் சேர்த்திருக்கேக்க, நானும் நாலுவரி சொல்லாட்டி மரியாதையில்லை என்டு எழுதத் தொடஙகினா அது நீண்டு போயிட்டு. பேசாம வசந்தன்ர பாணியில பதிவாப்போட்டிட வேண்டியதுதான் என்டு போட்டாச்சு. சயந்தனுக்குப் பின்னூட்டமும் போட்டாச்சு.

யாழ்ப்பாணத்துப் பெண்பார்க்கும் படலம் பற்றி விரிவாக்கதைச்சிருக்கினம். வசந்தனும் அதை நேரிலபார்த்து, அனுபவிச்சு எழுதியிருக்கிறார் ஆனாபடியால அதைவிடுவம். உந்த முருங்கை மரம் நல்லா உலைச்சிருக்குப் போல கிடக்கு ஆனாபடியால அதில இருந்து தொடங்குவம். ஆனால் ஏன் பின்நவீனத்துவமா யோசிச்சு, கல்யாணம் செய்த மாப்பிள்ளைய அரட்டி வைக்கிறதுக்காக நடுகிறதென்டு கண்டுபிடிக்கேல்ல.:) கலியாணத்துக்குப் பிறகு விளையாட்டுக்காட்டினா, மவனே முள்முருக்கில கட்டிவைச்சுத்தான் பூசை என்டிறத, சிலேடையாகச் சொல்லிச்சினமோ தெரியேல்ல..:)

கானா.பிரபா சொன்ன தேவேந்திரனுக்கு இட்ட சாபக்கதைதான் சாத்திரரீதியானகதை. ஆனால் அது கல்யாணவீட்டில் அரசாணி மரமாக வைக்கப்படும் முருங்கைக்குத்தான் பொருத்தமாக இருக்கும். ஏனெனில் அம்மி மிதித்து, அருந்ததிபார்த்து, அரசாணிசுற்றி என நீளும் சடங்கு அது.
அதற்குப் பாவிப்பது முள்முருக்கு அல்ல. கல்யாண முருங்கை. முள்முருக்குப் போன்றதுதான். ஆனால் முள்ளுக் குறைவு. இலைகளில் மஞ்சள் வண்ணத்தில், நரம்புகளும் நடுப்பகுதியும் காணப்படும். மாப்பிளையும் பெண்ணும் இணைந்திருப்பதற்கான அடையாளமாக அது சொல்லப்படும். ஆனால் அது கிடைப்பது அரிதாக இருந்ததால் அதற்குப் பதிலாக முள்முருக்கு அந்த இடத்தைப் பிடித்துக்கொண்டது.

வீட்டில் கல்யாணத்துக்கு முன்னர் நடப்படும் முள்முருக்கையை இந்தச் சாத்திரக்தைக்குள் சேர்த்துக் கொள்ள முடியாது. இது ஒரு சமுக வழக்கென்றுதான் செர்லல வேணும். இதைக் கன்னிக்கால் பேர்டுதல், பந்தல்கால் நடல் எனச் சொல்வது வழக்கம். தமிழகத்துக் கிராமத்திருவிழாவில் கொடிமரம் நடுவதாக உயரிய மரமொன்றை நடுகிறார்களே. ஏறக்குறைய அதே போன்றதுதான் இவ்வழக்கம். பந்தல் கால் போட்டுவிட்டால், கல்யயணவீட்டு வேலைகள் களைகட்டத் தொடங்கிவிடும் கோபதாபங்களுக்குள்ளாகியிருந் உறவுகள் கூட, ஒன்றுபடத் தொடங்கிவிடும். அதற்கு முருங்கை மரத்தை தெரிவு செய்தது
வேண்டுமாயின் , இந்திரன் கதையின் நீட்சியாகவோ அல்லது பழக்கமாகவோ இருக்கலாம். ஆனால் சூழலின் தன்மையோடு ஒப்பிட்டுப்பார்த்தால், யாழ்ப்பாணப்பிரதேசத்தில் மிக எளிதில் வளரும் மரங்களில் இது ஒன்றாக உள்ளது. மேலும், அதன் பாகத்தில் முட்கள் நிறைந்திருப்பதனால், வீட்டுவளர்ப்புப்பிராணிகளான ஆடு மாடு என்பவற்றில் இருந்து காப்பாற்றப்படுகிறது. அதனால் பிள்ளையின் கல்யாண நினைவு முன்னிறுத்தி நடுவதற்காக இந்த மரத்தைத் தெரிவு செய்திருக்கலாம். வசந்தன் கேட்டது போன்று, அப்படி நடப்படும் மரத்தின் வளர்ச்சியை வைத்துச் சகுனம் பார்க்கும் பழக்கமும் சில இடங்களில் இருந்தது. ஆதலால் அதற்கும் இது ஏற்புடையதாக இருக்கும். எனக்குத் தெரிந்த ஒருவருக்கு ஆறு பெண்பிள்ளைகள். அவர்களுடைய வீட்டு முன்றலில், ஆறு முள்முருக்கு மரமும் வரிசைக்கு, நன்றாகச் செழித்து வளர்ந்து நிற்கும். ஆட்டுக்குக் கூட அதில் குழை ஒடிக்க மாட்டார்கள். ஆனால் பெண்கள்வீட்டில்தான் இவ்வளவு கவனம் எடுப்பதாக நினைக்கின்றேன். மாப்பிள்ளைவீடுகளில் அவ்வளவு முக்கியத்துவம் தருவதாக இல்லை என்றே நினைக்கின்றேன். ஆனால் இரு வீடுகளிலும் நடப்படும். எனக்கென்னவோ இந்தப்பழக்கம், இந்தியப்பரப்பிலிருந்து வந்ததுபோல்தான் படுகிறது.

கால்மாறிப்போவது பற்றியும் யாரோ கேட்டிருந்தார்கள். பெண்வீட்டில் கல்யாணவீடு நடைபெற்று முடிந்ததும், மாப்பிள்ளைவீட்டுக்கு மணமக்கள் சென்று திரும்புதலைத்தான் கால் மாறிச் செல்வது என்று குறிப்பிடுவார்கள். ஈழத்தின் வடபுலக் கல்யாணவீடுகளில்தான் இந்த அமர்க்களம் எல்லாம். வன்னியிலோ, கிழக்கிலோ, இந்த வழக்குகளெல்லாம் இருக்கவில்லை என்றே நினைக்கின்றேன்.

கிழக்கில் வாழ்ந்த யாழ்ப்பாண்தார் வீட்டுக் கல்யாணங்கள் அப்படி நடந்திருக்கலாம், மற்றும்படி எல்லாம் சுயமரியாதைத்திருமணங்கள் போன்றதே. இதைப் பேச்சுவழக்கில் சோறு குடுத்தல் என்று சொல்வார்கள். மாப்பிள்ளை, பெண்ணுக்குப் புது உடுபுடவைகள், தாலிகட்டல் எல்லாம் இருக்கும். சிலவேளை கோவில்களில் பூசைநேரங்களிலும், பலவேளைகளில் வீடுகளிலும், குறிப்பாக மாலைகளிலும் நடைபெறும். தாலிகட்டி முடிந்து, மாப்பிள்ளைக்கு பெண் உணவு பரிமாறி, சேர்ந்து உண்பதில் நிறைவுறும். இக்கொண்டாட்டங்களில் முக்கிய இடம்பெறும் இரு விடயம், வெடிகொழுத்தலும், குடிவகை பாவிப்பதும். இவையில்லாத கல்யாணங்கள் களைகட்டாது. பின்னாட்களில் ஒலிபெருக்கியும் இணைந்து கொண்டது. இவ்வளவுதான் தற்போதைக்கு எழுத முடிந்தது. யாரும் வினாத் தொடுத்தால் விடையில் மற்றவற்றைத் தர முனைகின்றேன்.

இன்று மகளிர்தினம். இத்தினத்தில் இத்தாலியர்கள், பெண்களுக்குப் பரிசாக வழங்கும் பூவின் பெயர் Mimose மிமோசே. அதுதான் பதிவின் முதலில் உள்ள படம். இதற்கான சிறப்புக்காரணம் ஏதும் உண்டா எனத்தெரிந்த இத்தாலியபெண்களிடம் விசாரித்தேன். யாரும் சரியான காரணம் தெரியவில்லை என்றார்கள். யாருக்காவது இதன் காரணம் தெரியுமா? ஐரோப்பா எங்கனும் இப்பழக்கம் உண்டா? அல்லது இத்தாலியர்கள் மட்டும்தானா? தெரிந்தவர்கள் வந்து சொல்லுங்களேன்...

தோழியரே உங்கள் குரல்களை உயர்த்திச்சொல்ல இன்னும் ஒரு தினம். வாழ்த்துக்கள்!


 

நன்றி, வணக்கம்.