குருவி குருவியல்ல முற்பகுதியில், அப்படி நடந்த ஒரு சம்பவத்துக்கு சாட்சியாக தன் வலது கை ஆட்காட்டிவிரலை காட்டுவார் சின்னராசா. ஒருமுறை காட்டில் வேட்டைக்கு சின்னராசாவும், அவரது நண்பரும் சென்றிருக்கின்றார்கள். வழியில் இரு கரடிகள் எதிர்பட்டிருக்கின்றன. ஒன்று ஆண் மற்றது பெண். சின்னராசாவுக்குப் பின்னால் நண்பர். சற்றுப் பயந்தவர். கரடிகள் நேராகச் சந்தித்து விட்டன. நண்பரிடம் தன் துப்பாக்கியைக் கொடுத்துவிட்டு, சின்னராசா கரடிகளை, நேருக்கு நேராக உற்றுப் பார்த்த வண்ணம் மந்திரக்கட்டுச் சொல்லத் தொடங்கினார்...
இவ்விதமாக மந்திரக்கட்டுச் சொல்லும் போது கவனம் முழுக்கவும் எதிரே நிற்கும் மிருகத்தின் கண்களை உற்றுப் பார்ப்பதிலேயே இருக்க வேண்டுமாம். அதனால், பின்னால் நின்ற நண்பர் மெல்ல நகர்ந்து , மரத்திலேற ஓடியதை இவர் கவனிக்கவில்லை. ஆனால் எதிரே நிற்கும் எதிராளிகளின் அசைவிவ் கவனம் வைத்திருக்கும் மிருகங்களைப் போலவே அவர் முன் நின்ற கரடியும் நண்பரின் அசைவைக்கண்டதும் இவர்கள் மேல் பாய்ந்திருக்கிறது. சின்னராசா கலங்கவில்லை. மந்திரக்கட்டைச் சொல்லிக் கொண்டே, பாய்ந்து வந்த கரடியை நோக்கி முன்னகர்ந்து, கையால் தள்ளி இருக்கிறார். மந்திரக்கட்டுச் சொல்லி முடிந்ததும், எதிர்படும் மிருகத்தை நோக்கி, தூவெனத் துப்ப வேண்டுமாம். அப்போது அந்த மிருகம் வாய் மூடிவிடுமாம். பின்னர் தங்களைச் சுதாகரித்ததின் பின்னர் மந்திரக்கட்டின் மாற்றுப் பகுதியைச் சொன்னால் மிருகம் பழைய நிலைக்கு வந்துவிடுமாம். இதன்படி மந்திரக்கட்டு முடிந்து அவர் தூவெனத்துப்பிய போது, கரடியின் வாய் இறுகிக்கொண்டதாம். ஆனால் எதிர்பாரா விதமாக கரடியைத் தள்ளிய அவரது வலதுகை ஆட்காட்டிவிரல், கரடியின் வாய்க்குள் அகப்பட்டுக் கொண்டதாம். வாய்இறுகிக்கொண்டதாலும், இவர் தள்ளியதாலும் நிலைகுலைந்த கரடி சரிந்துவிழ, பின்னால் நின்ற கரடி, கோபத்துடன் இவர்மீது பாய எத்தனிதிருக்கிறது. நிலமை விபரீதமாய் போனதையுணர்ந்து, துப்பாக்கியை எடுத்துக் தாக்கவரும் கரடியை நோக்கிக் குறிவைத்து, பொறிவில்லை அழுத்தினால் அழுத்துபடுகிதில்லை. அப்போதுதான் தன் ஆட்காட்டிவிரலின் முக்கால் பகுதியைக் காணவில்லை என்பதும், அறுபட்ட விரலில் இருந்து இரத்தம் சொட்டுவதும் தெரிந்திருக்கிறது. நண்பரைத் திரும்பிப் பார்த்தால் காணவில்லை. கணமும் தாமதிக்காமல் நடுவிரலால் வில்லை அழுத்தி, வெடிவைத்ததும் தாக்க வந்த கரடி திரும்பியோட மற்றைய கரடியும் திரும்பி ஓடத்தோடங்கியதாம். பின்னர் அறுந்துபோன கைவிரலுக்குப் பச்சிலை வைத்துக் கட்டிக்கொண்டாராம். அன்றிலிருந்து துப்பாக்கிச் சூட்டிற்கு மிக அவசியமான ஆட்காட்டிவிரல் அல்லாமல் நடுவிரலாலே சுடப் பழகிக்கொண்டாராம். சின்னராசாவின் காட்டுவாழ்க்கை அனுபவக் கதைகள் கேட்பதற்கு மிகச் சுவாரிசயமானவை.
மற்றொருமுறை காட்டுக்குச் சென்றபோது, காட்டில் மிருகங்களுக்காக, மறைத்துக் கட்டப்பட்டிருந்த பொறிவெடியில் சிக்கியதனால், அவரது தொடைப்பகுதியில் பொறி வெடியின், துப்பாக்கிச் சன்னங்கள் பாய்ந்துவிட, காயத்துடனும், சிந்திய குருதியுடனும் காட்டிலிருந்து மீண்டு, வைத்தியசாலை சென்று, காயத்திற்கு வைத்தியம் பார்த்தாராம். அப்படி வைத்தியம் செய்தபோதும், தன் தொடைப்பகுதியில் நிரந்தரமாகத் தங்கிவிட்ட இரு துப்பாகிச் சன்னங்கள், அசைவதை, இச்சம்பவத்தின் சாட்சியாகக் காட்டுவார்.
இப்படியான காட்டுவாழ்க்கை, வேட்டை அனுபவங்கள், பலவற்றைத் தன்னகத்தேயும், தானே சாட்சியாகவும் இருந்த சின்னராசா, வெடிமருந்துகளைக் கையாள்வதிலும், பழைய வெற்றுத் துப்பாக்கி ரவைக் கூடுகளைப் புதிய ரவைகளாக மாற்றவும் தெரிந்துவைத்திருந்தார்.
அந்தக்கால வாழ்வியலில், அவரொரு கதைநாயகன்தான் . அவரிடமிருந்து தெரிந்து கொண்ட பலவிடயங்கள் சில, சந்தர்பங்களில் எமக்கும் கைகொடுத்திருக்கிறது. மிகச் சாதாரண மனிதனாகிலும், குருவிச் சின்னராசா திறமை, தன்னம்பிக்கை, துணிவு என்பதன் சொந்தக்காரர் என்பேன்.
Labels: அனுபவம், என்னரும் மருதம், சமூகம்.
Labels: அனுபவம், என்னரும் மருதம், சமூகம்.
ஏப்ரல் 1 முட்டாள்கள் தினமாமே
3 comments Published by மலைநாடான் on Tuesday, April 01, 2008 at 8:04 AMஇங்கும் வாசிக்க உண்டு
பிரான்ஸ் அரசியலில், ஈழத்தமிழர்கள்.
3 comments Published by மலைநாடான் on Tuesday, March 18, 2008 at 10:40 PMஇதில் 7 பேர் ஈழத் தமிழர்களாவர். மூவர் பாண்டிச்சேரியை சேர்ந்தவர்களாவர். இதேவேளை ஈழத் தமிழர்கள் பிரான்ஸின் தேர்தலின் மூலம் தெரிவாகியுள்ளமை அங்குள்ள ஈழத் தமிழர்கள் மத்தியில் புத்துணர்வை ஏற்படுத்தியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
பிரான்ஸில் சுமார் 125 ஆயிரம் தமிழர்கள் வாழ்கின்றனர். இதில் 50 ஆயிரம் பேர் ஈழத்தமிழர்களாவர். பிரான்ஸின் உள்ளுராட்சி தேர்தலில் 14 ஈழத்தமிழர்கள் போட்டியிட்டனர்.
தேர்தலில் வெற்றி பெற்ற ஈழத் தமிழர்கள் அனைவரும் இடதுசாரி கட்சிகளை பிரதி நிதித்துவப்படுத்தி போட்டியிட்டவர்களாவர். இதே வேளை இந்த தெரிவுகளின் மூலம் பிரான்ஸின் தமிழர்கள் வலதுசாரி கட்சியான தற்போது அரசாங்கத்தின் மீது தமது வெறுப்பை வெளிப்படுத்தியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. வெற்றிபெற்றவர்களுக்கும், வெற்றிபெறச் செய்தவர்களுக்கும் பாராட்டுக்களும் வாழ்த்துக்களும்.
கடந்த வருடத்தில் நோர்வேயில் இடம்பெற்ற உள்ளுர் தேர்தலில் ஈழத் தமிழர்கள் ஐவர் தெரிவு செய்யப்பட்டனர். இந்த தேர்தலில் நோர்வேயில் உள்ள 70 வீத ஈழத் தமிழ் பெண்கள் தமது வாக்குகளை செலுத்தியதாக புள்ளிவிபரங்கள் தெரிவித்திருந்தன..
சுவிற்சர்லாந்து தேசிய அரசுத் தேர்தலில் போட்டியிட்ட ஈழத்துப் பெண் குறித்த செய்திகளை இங்கு படிக்கலாம்.
கல்லூரி, நிஜங்கள், நினைவுகள்.
8 comments Published by மலைநாடான் on Thursday, January 03, 2008 at 8:34 PMதிருகோணமலை புனிதசூசையப்பர் கல்லூரியின் மதியபோசன இடைவேளையில், எங்கள் வகுப்பறையைக் கடந்து செல்லும் எல்லோர்க்கும், எங்கள் சாப்பாட்டு முறைமை வியப்பும் வேடிக்கையும் தருவது. எல்லோருடைய உணவுப் பொதிகளையும் விரித்து வைத்துக்கொண்டு, பொதுவாக கலந்து உண்பது எங்கள் நட்பு வட்டத்தின் பழக்கம். சிறுவயது முதலே சைவ உணவுப் பழக்கம் உள்ள நான், அந்த ஒரு காரணத்தினால் அந்த வேளையில் விலகிவிட்டக் கூடாது எனும் அக்கறையில், மதியபோசனத்தைச் தாங்களும் சைவ உணவாக மாற்றிக்கொண்ட அற்புதமான நண்பர் வட்டம் என்னது.
கல்லூரி ஆண்களுக்கு மட்டுமேயானதால், கல்லூரி நண்பர் வட்டம் ஆண்களோடு மட்டுமே அமைந்துவிடும். கல்லூரிக்கப்பால் உள்ள நண்பர்வட்டம் மிகப்பெரிது. அது தோழிகளையும் கொண்டது. திருகோணமலை ஒரு பல் சமூகக்குழுமங்கள் இனைந்து வாழும் மாநிலம் ஆனதால், ஈழத்தின் ஏனைய பகுதிகளைவிட இங்கு வாழ்நிலை சற்று வித்தியாசமானது. அதிலும் குறிப்பாகத் திருமலை நகரப் பகுதியும், அதன் அன்மித்த கிராமங்களும், பழகியல்பு மிக யதார்த்தமும் நேசமும் நிறைந்தது.
சிவராத்திரி நகர்வலம், வெசாக் பண்டிகைக்காலம், சல்லியம்மன் பொங்கல், கோணேஸ்வரர் கோவில் தெப்பத்திருவிழா, போன்ற கொண்டாட்ட நாட்களில் நள்ளிரவு தாண்டி அதிகாலைவரை எங்கள் சுற்றல் தொடரும்.

திருகோணமலைக் கடற்கரை, இலங்கையின் அழகான கடற்கரைகள் பலவற்றிலொன்று. தெப்பத்திருவிழாக்கலாங்களில் விடியும்வரை அந்த கரையின் மணற்படுக்கைகளில் கிடந்து நாம் பேசி மகிழ்ந்த கதைகள்தாம் எத்தனை. ஏன் ஞாயிறு மாலைகளில்...?. கோணேஸ்வரர் கோவில் மாலைப்பூசைக்கு நின்றுவிட்டு, குன்றிருந்திறங்கி வரும் போது, புத்தரையும் பார்த்து, புத்தரின் புத்திரிகளையும் பார்த்த மகிழ்வோடு கடற்கரைக்கு நாம் வரவும், கதிரவன் தனக்கினி வேலையில்லையென கடலுள் விழவும் சரியாக இருக்கும். கரையிலிருந்து கடலைப்பார்த்து, கடலை கொறித்து, இடையிடையே கடலை எறிந்து, கதையும் எறிந்த மகிழ்ந்திருந்தோம். அலையின் இரைச்சலில் இசை சேர்த்துப் பாடிக்களித்திருந்தோம். துட்டிருந்தால், எட்டுமணிக்கு நெல்சன் தியேட்டரில் ஆங்கிலப்படம். அல்லாவிட்டால் பிரியமனமில்லாமல் பத்துமணிக்கு கடற்கரையில் பிரிவோம். எங்கள் கதைகளும், பாடல்களும், மகிழ்வுகளும் மட்டுமே நிறைந்து கிடந்த அந்தக் கடற்கரையில் நாங்கள் மட்டுமல்ல, எங்களுக்கு முன்னவர்களும் பின்னவர்களும் அப்படித்தான் இருந்தார்கள். ஏனெனில், எப்போதும் மனதுக்கு மகிழ்ச்சியை மட்டுமே வாரித்தந்தது அந்தக் கடற்கரை.
அந்த நம்பிக்கையில்தான், 2006 ஜனவரி மாதம் இரண்டாம் நாளில் எங்களைப்போலவே இருந்த இளையவர் சிலர் அந்தக் கடற்கரையில் களிப்புறச் சென்றனர். சிரிப்பும், மகிழ்வும், மட்டுமே கொண்டு சென்ற அந்த மாணக்கர்களைக் குண்டு கொண்டு வந்தார்கள் என்று சொல்லி, வேட்டையாடி விருந்து கொண்டாடிற்று பேரினவாதம். விடுமுறைக்குக் கூடிக் குதுகலித்திருந்த பள்ளித் தோழர்கள், பட்டாம்பூச்சிகளாய் வட்டமடித்து வந்தபோது, துப்பாக்கியால் சுட்டுத் துவம்சம் செய்தது அரச பயங்கரவாதம்.

ரஜிகர் மனோகர் 1985-02.01.2006

லோகிததாசன் றோகாந் 07.04.1985 - 02.01.2006
யோகராஜா ஹேமச்சந்திரன் 04.03.1985 - 02.01.2006

சஜேந்திரன் சண்முகநாதன் - 02.01.2006

சிவானந்த தங்கவடிவேல் -02.02.2006
லோகிதாசன் றோகாந், யோகராஜா ஹேமச்சந்திரன், ரஜிகர் மனோகரன், சஜேந்திரன் சண்முகநாதன், சிவானந்தா தங்கவடிவேல் என்னும் ஐந்து பட்டாம்பூச்சிகள் சிறகொடிந்து விழுந்து போயின. தங்கள் கண்முன்னே தோழர்களைப் பறிகொடுத்த ஏனையோர், காயம் பட்டவர்ளையும் மீட்டுக்கொண்டு கதறியழுது ஓடினர். கல்வித்தகமையிலும், விளையாட்டுத்துறைகளிலும், பொதுப்பணிகளிலும், ஓர்மமாய் ஒன்றித்திருந்தவர்களை ஒருகணத்தில் உயிர்பறித்தழித்தன, பேயாளும் தேசத்தின் பிணந்தின்னிக் கழுகுகள். பெற்றவயிறுகள் பற்றியெரிய, உற்ற உறவுகள் விம்மிநிற்க, பிணங்களை வைத்துப் பேரம் பேசின வெறிநாய்கள். மறுத்துநின்ற மற்றவர்கள் உயிர் பறிக்கப்படும் என அச்சமூட்டி அரசு ஆண்டது. எல்லாமிருந்தும், இறைமை மட்டும் இல்லாக்காரணத்தால் ஏதிலிகளாக எம்மவர் மரணமும், வாழ்வும்.
எங்கள் கிள்ளைக் கதைகளாலும், கிளர்ந்த சிரிப்பு மகிழ்வுகளாலும், விரிந்த எங்கள் கடற்கரை இன்று எமக்கில்லை. இனி என்றும் எமக்கு இல்லை என்பதும் இல்லை. ஆதலினால், இன்னமும் காதல்செய்வோம் எங்கள் கடற்கரையை.
Labels: என்னரும் மருதம், சமூகம்., திருமலை
மாக்சீயப் பேராளர்களே, மக்களை மறந்தது ஏன்?
3 comments Published by மலைநாடான் on Saturday, December 01, 2007 at 8:17 PM
ஒரு வரலாற்றுக் குறிப்பை உங்களுக்கு ஞாபகப்படுத்த விரும்புகின்றேன். 27-04-1977 ஆண்டு கனவான் எஸ்.ஜே.வி.செல்வநாயகம் அவர்களுடைய சாம்பல் கிழக்கு மாகாணத்திற்கு கொண்டுவரப்பட்ட அன்றுதான் முதன் முதலாக வரலாற்றுப் பெருமைமிக்க கிழக்கு மாகாணத்தின் அமைதி குலைத்தெறியப்பட்டது. மூவினங்களும் சேர்ந்துவாழும் அற்புதமான எங்கள் திருகோணமலை இனக்கலவரத்தை அன்றுதான் கண்டது. அன்று தொடங்கிய இரத்தத் துளிகள் இன்றுவரை தொடர்கிறது.
அப்படியானால் அதற்கு முன் தமிழர்கள் மீது தாக்குதலே நடக்கவில்லையா?
பன்குளம் எனும் தமிழ்கிராமத்தின் மீது, கந்தளாய் தமிழ்மக்கள் மீது, முள்ளிப் பொத்தானை குடியேற்றத்திட்டத்தில், என ஆங்காங்கே, உதிரியாகத் தமிழர்கள் மீது நடந்த தாக்குதல்கள் என்னவாம்.
புதிதாக உருவாக்கப்பட்ட குடியேற்றத்திட்டங்களில், தமிழருக்காக ஒதுக்கப்படும் நிலங்களில், தமிழர்கள் நிரந்தரக் குடிகளாக வாழமுடியாமல் செய்ய, அதற்கான அச்சநிலையைத் தோற்றுவிக்க, பேரினவாதம் இப்படியான தாக்குதல்களை அப்பகுதிகளில் செய்ததை, வசதியாக மறைத்துவிடுகிறீர்களே?. உதாரணத்துக்கு ஒன்று..
பாலம்போட்டாறு குடியேற்றத்திட்டத்தில் குடியேறிய ஒடுக்கப்பட்ட தமிழ்மக்களை அச்சப்படுத்தி வெளியேற்ற வைப்பதற்காக, பேரினவாதிகளின் கைக்ககூலிகள் பலிகொண்ட தமிழ் இளைஞனின் பெயர் சுந்தரம் திருநாவுக்கரசு. கூட்டுறவுத்திணைக்களத்தின் களஞ்சியப்பொறுப்பாளனாக இருந்தவனை, அவனது பணிநேரத்திலே பலியெடுத்த பாவிகள், நாற்பது வருடங்களுக்கு மேலாக தமிழ்மக்களுடன் ஒன்றாக வாழ்ந்த ஒரு சிங்களக்குடும்பத்தைச் சார்ந்தவர்களே என்ற உண்மையைக் கூட அன்றை தமிழ்இளைஞர்கள் ஒரளவு அறிந்திருந்தார்களே.
இப்படியான குடியேற்றத்திட்டங்களில், கொடுப்பது போல கொடுத்து, பறிக்கும் வகையில் பறித்துக் கொள்ளும் இத்தகைய சூழ்ச்சிகளுக்கு பலியாகிய தமிழரக்ள் குந்தியிருக்க நிலமற்ற ஏழைப்பாட்டாளிகள் என்பது கூட நீங்கள் மறந்துபோனதா?
இப்படி எத்தனை வேதனைக்கதைகள் உண்மையாக நடந்திருக்கும் போது, அதைத் தெரிந்து கொண்டு மறைக்கிறீர்களா? அல்லது தேவைக்காக மறுக்கிறீர்களா?
இன்னும் விரிவாகப் பார்க்க எனும் தலைப்பில் நான் முன்னர் எழுதியவை.
Labels: அரசியல், என்னரும் மருதம், சமூகம்.
மட்டக்களப்புத் தயிர், சுவிஸ் லசி.
13 comments Published by மலைநாடான் on Thursday, November 15, 2007 at 11:03 AM

Labels: சமூகம்., தயிர், மட்டக்களப்பு, லசி.சுவிஸ்

திருகோணமலையின் பசுமைக்கிராமமொன்றில் வாழ்ந்த காலமது. என் கல்லூரிக் காலம் . வாசிப்பு, இசை, ஊர்சுற்றல், நண்பர்கள் என உல்லாசமாக இருந்த காலமும் கூட. வாசிப்பு முதல் விருப்பமாக அப்போதுமிருந்தது. ஆனால் வாசிப்புக்கான புத்தகங்களைப் பெறுவது என்பதுதான் கடினம். அதிலும் நல்ல புத்தகங்களை என்னது என்று உரிமை கொண்டாடும் அகமகிழ்வு அளவிடமுடியாதது. ஆனால் அதற்குத் தடையாயிருந்தது பொருளாதாரம். அதை வெற்றிகொள்ளச் சிந்தித்தபோது வந்துதித்த எண்ணத்தில் உருவானதுதான் என் நடமாடும் நூலகம்.
வாசிப்பில் யாசிப்புள்ள இருபது பேர்களைச் சேர்த்துக் கொண்டேன். ஒவ்வொருவரிடமிருந்து மாதாந்தம் ஒரு குறிப்பிட்டதொகையைப் பெற்றுக்கொள்வது. திருகோணமலை நகரிலுள்ள இரு முக்கிய புத்தகசாலைகளாகிய, சிதம்பரப்பிள்ளை புத்தகநிலையம், வாணிபுத்தகநிலையம், இரண்டிலும் இருந்து தெரிவு செய்யப்பட்ட புத்தகங்களை வாங்கிக்கொள்வேன். தெரிவு செய்யப்பட்ட உறுப்பினர்கள் இருபதுபேரில், சராசரியான வாசகர்கள், தீவிரவாசகர்கள்,எனக் கலந்திருந்ததால், வாங்கும் புத்தகங்கள் கலந்தேயிருக்கும்.
வாங்கிய புத்தகங்களுக்கு உறையிட்டு, அடையாளம் வைப்பதற்காக நூல் ஒட்டி, (வாசிக்கும் புத்தகங்களின் பக்கங்களை மடித்து அடையாளமிடுவது எனக்குப் பிடிப்பதில்லை) இலக்கமிட்டு, பெரிய பிளாஸ்டிக் கூடையொன்றில் அடுக்கி, வார இறுதிகளில், ஐந்து மைல் சுற்று வட்டத்துக்குள்ளிருந்த என் வாசக நண்பர்களின் வாசல் தேடிச் சைக்கிளில் செல்வேன். வாரத்திற்கு ஒருத்தருக்கு இரண்டு புத்தகங்கள் என, சுற்று ஒழுங்கில் பரிமாறிக்கொள்வோம். வருடமுடிவில் அவரவர் பிரியப்பட்ட புத்தகங்களைச் சம அளவில் பகிர்ந்து கொள்வோம். இப்படிப் பகிரப்படும் போது பல நண்பர்கள் தங்கள் பங்குகளை என்னிடம் தந்ததாலும், எனது விருப்பத்தின் காரணமாகவும், இரண்டான்டுகளுக்குள்ளாக சுமார் முந்நூறு புத்தகங்கள் என் நூலகத்தில் சேர்ந்திருந்தன. இந்த நகர்வில் நான் நுகர்ந்து கொண்ட சுகமான மற்றுமொரு அனுபவம், ஒவ்வொரு உறுப்பினர்களுடனும் வாசிப்பின்னான, வாசக அனுபவப் பகிர்வு. இது பலநேரங்களில் நல்ல பல கருத்தாடல்களையும் தந்தன.
வீரகேசரிபிரசுர வெளியீடாக வந்த அனைத்துப்புத்தகங்கள், அகிலன், சாண்டில்யன், தீபம் பாரத்தசாரதி, சிவசங்கரி, ஆகியோரின் படைப்புக்கள், எனத் தொடங்கி பின்னாட்களில் கார்க்கியின் தாய், வால்காவிலிருந்து கங்கை வரை எனத் தொடர்ந்தது. இந்தியக் கலைக்களஞ்சியம் என்ற தலைப்பில், இந்திய உயர்ஸ்தானிகராலயம் வெளியிட்ட இரு தொகுப்புக்கள், இந்தியக்கலை கலாச்சாரம் பற்றிய பல்வேறுவிடயங்களையும் சொல்லும் பதிப்பு. அப்போதே அதன் விலை முந்நூறு ரூபாய்களுக்கு மேலிருந்தது. நூலகத்தின் இரண்டாமாண்டு நிறைவு நினைவாக அத்தொகுதி வாங்கப்பட்டது. இதுதவிர இடசாரிச்சிந்தனையாளர்களால் வெளியிடப்பட்ட சில காலாண்டுச்சஞ்சிகைகள், சிரித்திரன் சுந்தரின் படைப்புக்கள், டொமினிக் ஜீவாவின் மல்லிகைத் தொகுப்புக்கள், வெளியீடுகள், என நிறைந்திருந்தது என் நூலகம்.
திருகோணமலையைவிட்டு நான் பிரிந்தபோதும், என்வீட்டிலிருந்த ஒரு அலுமாரியில் அவை அடுக்கிவைக்கப்பட்டேயிருந்தது. பின்னொரு நாளில் என் குடும்பத்தாரும் விடுமுறைக்காக யாழ்ப்பாணம் வந்திருந்தபோது, அந்த விபரீதம் நடந்தது. அப்போது திருகோணமலைப்பிரதேசத்தில் மீளவும் ஒரு இனக்கலவரம் நிகழ்ந்தது. தமிழ்மக்கள் பலரும், தங்கள் வீடுகளைவிட்டு வேறிடங்களில் தஞ்சம் பெற்றிருந்த தருணமொன்றில், எங்கள் வீடு சூறையாடப்பட்டது.
பெட்டி இணைக்கப்பட்ட உழவு இயந்திரமொன்றுடன் வந்த கயவர்கள், வீட்டில் உள்ள பொருட்களைச் சூறையாடத் தொடங்கினார்கள். என் நண்பனின் தந்தையிடம் சொல்லி, நான் ரசித்து, பூமுதிரைப் பலகையில் செய்து வைத்திருந்த என் நூலக அலுமாரியும் அவர்கள் கண்களில் பட, அதற்குள் இருந்த புத்தகங்களை, எடுத்தெறிந்து மகிழ்ந்தார்கள். வாசிப்பு வாசனையற்ற ஒரு கயவன், வண்ணக்காகிதங்களில் உறையிட்டிருந்த அந்தநூல்களை, வானத்தில் எறிந்து கீழேவிழுவதைப் பார்த்து மகிழ்ந்தானாம்.
வயோதிபம் காரணமாக இடம்பெயராதிருந்த பக்கத்து வீட்டு முதியவர், திரும்பிச் சென்ற என்குடும்பத்தாரிடம் சொன்ன தகவல்கள் இது. இருபத்தைந்து வருடங்களுக்கும் மேலாக அந்த மண்ணில் தான் தேடிய தேட்டங்களின் அழிவை நினைத்து என் அப்பா அழுதார். இரண்டு வருடங்களாக இரசித்துச் சேர்ந்த, என் நேசத்துக்குரிய புத்தகங்களை இழந்து,
நான் அழுதேன். நடமாடும் நூலகம் என நான் நகைப்பும், பெருமையுமாய், சொல்லி மகிழ்ந்த என் உழைப்பு, என் தேடல், இல்லாதாக்கபட்டது.
இத்தனைக்கும் எங்கள் வீடு சூறையாடப்பட்டது, சிங்களக்காடையர்களால் என்று நீங்கள் நினைத்தால் அதுதான் இல்லை. கிழக்கில் தமிழ்மக்களின் துயர்கள் பலவற்றிலும் பங்குகொண்டிருக்கும், அவர்களும் தமிழ்பேசுபவர்கள்தான். இதற்குப் பின்னரும் என் நூற்சேகரிப்புக்கள் இரண்டு தடவைகள், இந்த யுத்தத்தின் காரணமாகவே அழிந்து போயிருக்கின்றன. அதுபற்றி இன்னுமொரு தடவை சொல்கிறேன்.
Labels: என்னரும் மருதம், சமூகம்.
கல்யாணமும் முள்முருக்கும்.
12 comments Published by மலைநாடான் on Thursday, March 08, 2007 at 11:13 AM
நாங்கள் பெண்பார்க்கப்போவதில்லை எனச் சயந்தன் தொடங்க, வசந்தன் தொடர, சில ஊர்வழக்குகளும், தமிழகம், ஈழம் சார்ந்த ஒப்பீட்டுப்பார்வைகளும் வந்திருந்தன. பழம்பெரும் பதிவர்கள் வரிசையில் என்னையும் சேர்த்திருக்கேக்க, நானும் நாலுவரி சொல்லாட்டி மரியாதையில்லை என்டு எழுதத் தொடஙகினா அது நீண்டு போயிட்டு. பேசாம வசந்தன்ர பாணியில பதிவாப்போட்டிட வேண்டியதுதான் என்டு போட்டாச்சு. சயந்தனுக்குப் பின்னூட்டமும் போட்டாச்சு.
யாழ்ப்பாணத்துப் பெண்பார்க்கும் படலம் பற்றி விரிவாக்கதைச்சிருக்கினம். வசந்தனும் அதை நேரிலபார்த்து, அனுபவிச்சு எழுதியிருக்கிறார் ஆனாபடியால அதைவிடுவம். உந்த முருங்கை மரம் நல்லா உலைச்சிருக்குப் போல கிடக்கு ஆனாபடியால அதில இருந்து தொடங்குவம். ஆனால் ஏன் பின்நவீனத்துவமா யோசிச்சு, கல்யாணம் செய்த மாப்பிள்ளைய அரட்டி வைக்கிறதுக்காக நடுகிறதென்டு கண்டுபிடிக்கேல்ல.:) கலியாணத்துக்குப் பிறகு விளையாட்டுக்காட்டினா, மவனே முள்முருக்கில கட்டிவைச்சுத்தான் பூசை என்டிறத, சிலேடையாகச் சொல்லிச்சினமோ தெரியேல்ல..:)
கானா.பிரபா சொன்ன தேவேந்திரனுக்கு இட்ட சாபக்கதைதான் சாத்திரரீதியானகதை. ஆனால் அது கல்யாணவீட்டில் அரசாணி மரமாக வைக்கப்படும் முருங்கைக்குத்தான் பொருத்தமாக இருக்கும். ஏனெனில் அம்மி மிதித்து, அருந்ததிபார்த்து, அரசாணிசுற்றி என நீளும் சடங்கு அது.
அதற்குப் பாவிப்பது முள்முருக்கு அல்ல. கல்யாண முருங்கை. முள்முருக்குப் போன்றதுதான். ஆனால் முள்ளுக் குறைவு. இலைகளில் மஞ்சள் வண்ணத்தில், நரம்புகளும் நடுப்பகுதியும் காணப்படும். மாப்பிளையும் பெண்ணும் இணைந்திருப்பதற்கான அடையாளமாக அது சொல்லப்படும். ஆனால் அது கிடைப்பது அரிதாக இருந்ததால் அதற்குப் பதிலாக முள்முருக்கு அந்த இடத்தைப் பிடித்துக்கொண்டது.
வீட்டில் கல்யாணத்துக்கு முன்னர் நடப்படும் முள்முருக்கையை இந்தச் சாத்திரக்தைக்குள் சேர்த்துக் கொள்ள முடியாது. இது ஒரு சமுக வழக்கென்றுதான் செர்லல வேணும். இதைக் கன்னிக்கால் பேர்டுதல், பந்தல்கால் நடல் எனச் சொல்வது வழக்கம். தமிழகத்துக் கிராமத்திருவிழாவில் கொடிமரம் நடுவதாக உயரிய மரமொன்றை நடுகிறார்களே. ஏறக்குறைய அதே போன்றதுதான் இவ்வழக்கம். பந்தல் கால் போட்டுவிட்டால், கல்யயணவீட்டு வேலைகள் களைகட்டத் தொடங்கிவிடும் கோபதாபங்களுக்குள்ளாகியிருந் உறவுகள் கூட, ஒன்றுபடத் தொடங்கிவிடும். அதற்கு முருங்கை மரத்தை தெரிவு செய்தது
வேண்டுமாயின் , இந்திரன் கதையின் நீட்சியாகவோ அல்லது பழக்கமாகவோ இருக்கலாம். ஆனால் சூழலின் தன்மையோடு ஒப்பிட்டுப்பார்த்தால், யாழ்ப்பாணப்பிரதேசத்தில் மிக எளிதில் வளரும் மரங்களில் இது ஒன்றாக உள்ளது. மேலும், அதன் பாகத்தில் முட்கள் நிறைந்திருப்பதனால், வீட்டுவளர்ப்புப்பிராணிகளான ஆடு மாடு என்பவற்றில் இருந்து காப்பாற்றப்படுகிறது. அதனால் பிள்ளையின் கல்யாண நினைவு முன்னிறுத்தி நடுவதற்காக இந்த மரத்தைத் தெரிவு செய்திருக்கலாம். வசந்தன் கேட்டது போன்று, அப்படி நடப்படும் மரத்தின் வளர்ச்சியை வைத்துச் சகுனம் பார்க்கும் பழக்கமும் சில இடங்களில் இருந்தது. ஆதலால் அதற்கும் இது ஏற்புடையதாக இருக்கும். எனக்குத் தெரிந்த ஒருவருக்கு ஆறு பெண்பிள்ளைகள். அவர்களுடைய வீட்டு முன்றலில், ஆறு முள்முருக்கு மரமும் வரிசைக்கு, நன்றாகச் செழித்து வளர்ந்து நிற்கும். ஆட்டுக்குக் கூட அதில் குழை ஒடிக்க மாட்டார்கள். ஆனால் பெண்கள்வீட்டில்தான் இவ்வளவு கவனம் எடுப்பதாக நினைக்கின்றேன். மாப்பிள்ளைவீடுகளில் அவ்வளவு முக்கியத்துவம் தருவதாக இல்லை என்றே நினைக்கின்றேன். ஆனால் இரு வீடுகளிலும் நடப்படும். எனக்கென்னவோ இந்தப்பழக்கம், இந்தியப்பரப்பிலிருந்து வந்ததுபோல்தான் படுகிறது.
கால்மாறிப்போவது பற்றியும் யாரோ கேட்டிருந்தார்கள். பெண்வீட்டில் கல்யாணவீடு நடைபெற்று முடிந்ததும், மாப்பிள்ளைவீட்டுக்கு மணமக்கள் சென்று திரும்புதலைத்தான் கால் மாறிச் செல்வது என்று குறிப்பிடுவார்கள். ஈழத்தின் வடபுலக் கல்யாணவீடுகளில்தான் இந்த அமர்க்களம் எல்லாம். வன்னியிலோ, கிழக்கிலோ, இந்த வழக்குகளெல்லாம் இருக்கவில்லை என்றே நினைக்கின்றேன்.
கிழக்கில் வாழ்ந்த யாழ்ப்பாண்தார் வீட்டுக் கல்யாணங்கள் அப்படி நடந்திருக்கலாம், மற்றும்படி எல்லாம் சுயமரியாதைத்திருமணங்கள் போன்றதே. இதைப் பேச்சுவழக்கில் சோறு குடுத்தல் என்று சொல்வார்கள். மாப்பிள்ளை, பெண்ணுக்குப் புது உடுபுடவைகள், தாலிகட்டல் எல்லாம் இருக்கும். சிலவேளை கோவில்களில் பூசைநேரங்களிலும், பலவேளைகளில் வீடுகளிலும், குறிப்பாக மாலைகளிலும் நடைபெறும். தாலிகட்டி முடிந்து, மாப்பிள்ளைக்கு பெண் உணவு பரிமாறி, சேர்ந்து உண்பதில் நிறைவுறும். இக்கொண்டாட்டங்களில் முக்கிய இடம்பெறும் இரு விடயம், வெடிகொழுத்தலும், குடிவகை பாவிப்பதும். இவையில்லாத கல்யாணங்கள் களைகட்டாது. பின்னாட்களில் ஒலிபெருக்கியும் இணைந்து கொண்டது. இவ்வளவுதான் தற்போதைக்கு எழுத முடிந்தது. யாரும் வினாத் தொடுத்தால் விடையில் மற்றவற்றைத் தர முனைகின்றேன்.
தோழியரே உங்கள் குரல்களை உயர்த்திச்சொல்ல இன்னும் ஒரு தினம். வாழ்த்துக்கள்!
Labels: சமூகம்.



