பிறப்புக்களை வெற்றியாக்கியவள்....
10 comments Published by மலைநாடான் on Sunday, September 03, 2006 at 5:23 PM
பிறப்புக்களை வெற்றியாக்கியவள்...... மேரி அக்கா!
ஒரு காலத்தில் தம்பலகாமத்தில் மிகப்பிரபலமான பெயர். இப்பொழுது குடும்பத்தர்களாக இருக்கும் அக்கிராமத்து மக்கள் பலரின், பிறப்பினை வெற்றியாக, மகிழ்ச்சிமிக்கதாக, ஆக்கிவைத்த அன்னையவள். ஆம்! மேரி அக்கா ஒரு மருத்துவத்தாதி. சின்ன வகுப்பில் விளக்கேந்திய மாது என்ற சிறப்போடு, புளோறிங் நைட்டிங்கேல் அம்மையாரின் கதை படித்தபோது, புளோறிங் நைட்டிங்கேலாக என் மனதில் பதிந்த முகம் மேரி அக்காவினுடையதுதான்.
சைவசமயிகள் வாழ்ந்த அந்தக்கிராமப்பகுதியில், மதங்களைக்கடந்த நேசிப்போடு, மக்கள் சேவையில் நின்ற மேரி அக்காவின் பணி அளப்பரியது. மிகப்பெரிய வைத்திய வசதிகள் அற்ற, சாதாரண கிராமிய வைத்தியசாலையாக இருந்த, தம்பலகாமம் அரசினர் வைத்தியசாலையில், மருத்துவத்தாதியாகக் கடமையாற்றிய மேரி அக்கா, பணிநேரம் என்பதையும் தாண்டிப் பணியாற்றிய பண்பாளர்.
பிரசவம் என்பது, பெண்களுக்கு மறுபிறப்பு. இத்தகைய மறுபிறப்புக்களை, மேரியக்கா உடனிருந்தால் பயமின்றி பிரசவிக்கலாம் எனத் தாய்மார்கள் சொல்லும் அளவுக்கு பெயர்பெற்ற மருத்துவத்தாதி மேரிஅக்கா. இந்தச்சிறப்புக்குச் சொந்தக்காரியானதால், மேரிஅக்காவின் சேவை நேரம் என்பது வரையறைக்குட்படாதிருந்தது. ஆனாலும் அவர் முகஞ்சுளித்தோ, மனஞ்சலித்தோ நான் கண்டதில்லை.
மேரி அக்காவும், என் தாயும், நல்ல நண்பிகள். சைவஆச்சாரத்தில் திளைத்த என்தாயும், கிறிஸ்தவ மரபை மீறாத மேரிஅக்காவும், கொண்டிருந்த நட்பு, அதிசயமாகப் பார்க்கப்படவில்லை. ஏனெனில் இருவர் தன்மைகளும் அவ்வளவு பிரசித்தம். கத்தோலிக்க மரபில் நின்ற மேரி அக்கா தைபொங்கல் பொங்குவா. சைவமரபில் நின்ற என்தாய், பாலன்பிறப்புக்குப் பலகாரம் சுடுவா. என்தாயுடன் மட்டுமல்ல, எல்லோரிடத்திலும் அத்தகைய மாறா மனப்பக்குவத்துடன் பழகியவர்தான் மேரி அக்கா.
மேரிஅக்காவிற்கு ஐந்து ஆண்பிள்ளைகள். எங்கள் வீட்டில் நானும் தங்கையும்தான். பெண்குழந்தையில்லாத மேரிஅக்காவிற்கு என்தங்கைமீது கொள்ளைப்பிரியம். கிறிஸ்மஸ் பண்டிகைக்கு தன்பிள்ளைகளுக்கு புத்தாடை வேண்டும் மேரியக்காவின் தெரிவில் முதலிடத்தில் இருப்பது என் தங்கைக்கான ஆடைதான். என் தாயாரின் மறைவில் துவண்டது என் குடும்பம் மட்டுமல்ல. மேரி அ;க்காவும், அவரது குடுபத்தினரும் அதிர்ந்து போனார்கள்.
மேரிஅக்காவுக்கு இடமாற்றம் கிடைத்து, தங்கள் சொந்த ஊரான மூதூருக்குச் செல்லும் வரையில், தாயிழந்த எனக்கும், என் தங்கைக்கும், தாயின் பரிவைத் தந்த மேரிஅக்கா, என்னை எப்போதும் தம்பி என்றே விழிப்பார்கள். பல ஆண்டுகள் கழித்து, புலத்தில் சந்தித்தபோதும், மேரிஅக்கா அப்படியே அழைத்தார்கள். கண்களில் அதே தாயின் கருணையோடு............
-0-0-0-0-0-0-0-0-0-0-0-0-0-0-0.............0-0-0-0-0-0-0-0-0-0-0-0-0-0-0-0-
தொலைபேசி அழைத்தது.
தொடர்ந்த எறிகணைத்தாக்குதலின் கோரத்தில், அந்தக் கணத்தில் எதுவும் செய்யத் தோன்றாமல் கதறிக்கொண்டிருந்த பிள்ளைகளில் ஒருவரின் மனைவிக்கு மற்றுமொரு எறிகணைத்துண்டு தாக்க அவரும் சரிகின்றார். நிலமையின் விபரீதத்தைப்புரிந்துகொண்டு மனைவி பிள்ளைகளுடன் பாதுகாப்பான இடங்களை நோக்கிப்பிள்ளைகள் ஒடுகின்றார்கள். மூதூரைப்பிரிய விரும்பாத மேரிஅக்காவின் உயிர்பிரிந்த உடல் மூதூர் மண்ணில். காயம்பட்ட பெண்ணை போராளிகள் மூலம் வைத்தியசாலைக்கு அனுப்பி வைத்துவிட்டு, பிள்ளைகளையும் மற்றவர்களையும், மரங்களின் கீழ் பாதுகாப்பாக இருத்திவிட்டு, இரவுப்பொழுதில் மீண்டும் வந்த பிள்ளைகள், தாயின் உடலை எடுத்துச் சென்று, பொங்கிவரும் அழுகையை அடக்கிக்கொண்டு அடக்கம் செய்ய முனைகின்றார்கள். யாரோ ஒருவர் திருவாசகம் பாடுகின்றார். மதங்களைக் கடந்து மக்களை நேசித்த மகராசியின் பூதவுடல், முக்தி தரும் திருவாசப்பாடலுடன் மூதூர் மண்ணுக்குள் .........................சங்கமமாகிற்று.
அழுகின்றேன். என் இன்னுமொரு தாயின் மறைவுக்காய்...