அபியும் நானும் மாதுமையும்


நீண்ட நாட்களாகத் திரைப்படங்கள் எதுவும் பார்க்கவில்லை. பார்க்கும் சூழல் இல்லெயென்பதிலும் பார்க்க மனநிலை வாய்த்திருக்கவில்லை என்தே உண்மை. குடும்பமாய் அமர்ந்திருந்து படம் பார்த்துக் கன நாளாயிற்று எனப் பிள்ளைகள் விரும்பியழைக்க, சென்றவாரத்தில் நண்பரொருவர் விதந்தெழுயிருந்த " அபியும் நானும் " திரைப்படத்தைப் பரிந்துரைத்தேன். ஏற்கனவே தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிய, அத் திரைப்படத்தின் பாடல் ஒன்றால் கவரப்பட்ட பிள்ளைகளும் விரும்பிச் சம்மதிக்க, ஒன்றாய் அமர்ந்தோம்.
தொலைக்காட்சித் திரையில் 'அபியும் நானும் '
அப்பா மகளுக்கான உறவை அற்புதமாய் சொல்லியிருக்கின்றார்கள். இரத்தம் தெறிக்கும் இன்றைய சினிமாக்களின் மத்தியில், பச்சைப் பசேலெனும் பின்னணியில், ஒரு பாசப்பிணைப்புக் கதையை பக்குவமாகச் சொல்லியிருக்கின்றார்கள். ரசிக்கவும், இன்னும் ஒரு படி மேலாகச் சுகிக்கவும் முடிகிறது.
திரைப்படம் பார்த்து எப்போதும் அழமாட்டாத நான் இப்போது அழுகின்றேன்.
ஏனென்றால் காரணம் திரைப்படத்தின் காட்சிகளும், கதையும் மீட்டித்தந்த நினைவுகளின் நீட்சியிலே அழுகின்றேன்.
எங்கள் நிலத்தின் நிறமும், ஒரு காலத்தில் பச்சைதான். எங்களிடமும் பாசஉறவுகளும், அவை பேசுங் கதைகளும் பலவிருந்தன.
ஆனால் இன்று எங்கள் நிலம், எங்கள் இரத்தங்களினாலேயே சிவப்பாகிப் போனது. எங்கள் குரலும், மொழியும் ஒப்பாரியொன்றைத் தவிர வேறு செப்பாது போய்விட்டது.

எங்கள் வாழ்வின் பசுமையையும் , இனிமையையும் பறித்தெடுத்தவர்களிடம் உறவுகொள்ளச் சொல்கின்றீர்கள். பாதகமில்லை பழகலாம் வாருங்களென்றால், நீட்டிய கைகளின் பின்னால் நெடுவாள் கொண்டுவருகின்றார்களே; கண்டுகொள்ளீரோ அல்லது கண்டுங் காணாதிருப்பதே உங்களி்ன் மானுடப் பேச்சின் மகிமை என்பீரோ? கொடிகளிலும், கோஷங்களிலும், உங்கள் கொள்கைகள் மறைந்து போனதுவோ, மறந்து போனதுவோ?
எத்தனை கதைகள் சொல்ல? எத்தனை சோகம் சொல்ல? எத்தனை முறை சொல்லியாயிற்று.

மாதுமை!

கோணமாமலையில் கோயில் கொண்டவனின் தேவி பெயர். என் தங்கை தவமாய் தவமிருந்து பெற்றெடுத்த பெண்ணுக்கு இட்ட பெயரும் அதுவே. தங்கை குழந்தையாய் இருந்த போது பிரிந்த நான், ஒரு குழந்தைக்கு அவள் ஏங்கிய வயதிலேயே மீளவும் சந்திக்க முடிந்தது. ஆச்சரியமாய் இருந்தது காலத்தின் வேகம். என் கைபிடித்து நடை பழகித் திரிந்த பெண், கல்யாணமாகிக் கணவனோடு வந்திருந்தாள். மணவாழ்வின் மகிழ்வில் திளைத்திருந்தாலும், மகவொன்றில்லாத மனக் குறையில் துவண்டிருந்தாள்.

பின் வந்த சில காலத்தில் பெண்மகவுக்குத் தாயானாள். பெருமிதமுற்றாள். எழுதிய கடிதத்தில் இவ்வுலகின் மகிழ்ச்சியையெல்லாம் எண்ணத்தில் குவித்து, எழுத்து மலர்களாய் சொரிந்திருந்தாள். இறைமீது கொண்ட பற்றுதலால் மாதுமை எனப் பெயர் சூட்டியிருந்தாள். இன்றவள் வன்னி வனத்திடையில்....
இறுதியாய் பேசிய போது 'வன்னி மண் மட்டுமே எமக்குப் பாதுகாப்பானது ' என இறுமாந்து சொன்னாள்...

இன்று..

தினமும் செய்திகள் சுமந்து வரும் மடல்களைத் திறக்கையில் மனம் பதைபதைக்கிறது. படபடத்துத் திறந்ததும், தெரிகின்ற எழுத்துக்களின் மீது தேடுகையில், தெரிந்து விடக் கூடாது அவர்கள் பெயர் என, வெட்கம் விட்டுப் பிரார்த்திக்கின்றேன்.
நித்திரை வரா முன்னிரவுகள் கழிந்துபோக, பின்னிரவுக் கனவுகளில், குண்டு வெடிப்புச் சத்தங்களின் பின்னணியில், மாதுமை அழுத படியே மாமாவென்றழைத்து நித்திரை கலைத்துச் செல்கின்றாள்.....

குருவி குருவியல்ல 2

குருவி குருவியல்ல முற்பகுதியில், அப்படி நடந்த ஒரு சம்பவத்துக்கு சாட்சியாக தன் வலது கை ஆட்காட்டிவிரலை காட்டுவார் சின்னராசா. ஒருமுறை காட்டில் வேட்டைக்கு சின்னராசாவும், அவரது நண்பரும் சென்றிருக்கின்றார்கள். வழியில் இரு கரடிகள் எதிர்பட்டிருக்கின்றன. ஒன்று ஆண் மற்றது பெண். சின்னராசாவுக்குப் பின்னால் நண்பர். சற்றுப் பயந்தவர். கரடிகள் நேராகச் சந்தித்து விட்டன. நண்பரிடம் தன் துப்பாக்கியைக் கொடுத்துவிட்டு, சின்னராசா கரடிகளை, நேருக்கு நேராக உற்றுப் பார்த்த வண்ணம் மந்திரக்கட்டுச் சொல்லத் தொடங்கினார்...

இவ்விதமாக மந்திரக்கட்டுச் சொல்லும் போது கவனம் முழுக்கவும் எதிரே நிற்கும் மிருகத்தின் கண்களை உற்றுப் பார்ப்பதிலேயே இருக்க வேண்டுமாம். அதனால், பின்னால் நின்ற நண்பர் மெல்ல நகர்ந்து , மரத்திலேற ஓடியதை இவர் கவனிக்கவில்லை. ஆனால் எதிரே நிற்கும் எதிராளிகளின் அசைவிவ் கவனம் வைத்திருக்கும் மிருகங்களைப் போலவே அவர் முன் நின்ற கரடியும் நண்பரின் அசைவைக்கண்டதும் இவர்கள் மேல் பாய்ந்திருக்கிறது. சின்னராசா கலங்கவில்லை. மந்திரக்கட்டைச் சொல்லிக் கொண்டே, பாய்ந்து வந்த கரடியை நோக்கி முன்னகர்ந்து, கையால் தள்ளி இருக்கிறார். மந்திரக்கட்டுச் சொல்லி முடிந்ததும், எதிர்படும் மிருகத்தை நோக்கி, தூவெனத் துப்ப வேண்டுமாம். அப்போது அந்த மிருகம் வாய் மூடிவிடுமாம். பின்னர் தங்களைச் சுதாகரித்ததின் பின்னர் மந்திரக்கட்டின் மாற்றுப் பகுதியைச் சொன்னால் மிருகம் பழைய நிலைக்கு வந்துவிடுமாம். இதன்படி மந்திரக்கட்டு முடிந்து அவர் தூவெனத்துப்பிய போது, கரடியின் வாய் இறுகிக்கொண்டதாம். ஆனால் எதிர்பாரா விதமாக கரடியைத் தள்ளிய அவரது வலதுகை ஆட்காட்டிவிரல், கரடியின் வாய்க்குள் அகப்பட்டுக் கொண்டதாம். வாய்இறுகிக்கொண்டதாலும், இவர் தள்ளியதாலும் நிலைகுலைந்த கரடி சரிந்துவிழ, பின்னால் நின்ற கரடி, கோபத்துடன் இவர்மீது பாய எத்தனிதிருக்கிறது. நிலமை விபரீதமாய் போனதையுணர்ந்து, துப்பாக்கியை எடுத்துக் தாக்கவரும் கரடியை நோக்கிக் குறிவைத்து, பொறிவில்லை அழுத்தினால் அழுத்துபடுகிதில்லை. அப்போதுதான் தன் ஆட்காட்டிவிரலின் முக்கால் பகுதியைக் காணவில்லை என்பதும், அறுபட்ட விரலில் இருந்து இரத்தம் சொட்டுவதும் தெரிந்திருக்கிறது. நண்பரைத் திரும்பிப் பார்த்தால் காணவில்லை. கணமும் தாமதிக்காமல் நடுவிரலால் வில்லை அழுத்தி, வெடிவைத்ததும் தாக்க வந்த கரடி திரும்பியோட மற்றைய கரடியும் திரும்பி ஓடத்தோடங்கியதாம். பின்னர் அறுந்துபோன கைவிரலுக்குப் பச்சிலை வைத்துக் கட்டிக்கொண்டாராம். அன்றிலிருந்து துப்பாக்கிச் சூட்டிற்கு மிக அவசியமான ஆட்காட்டிவிரல் அல்லாமல் நடுவிரலாலே சுடப் பழகிக்கொண்டாராம். சின்னராசாவின் காட்டுவாழ்க்கை அனுபவக் கதைகள் கேட்பதற்கு மிகச் சுவாரிசயமானவை.

மற்றொருமுறை காட்டுக்குச் சென்றபோது, காட்டில் மிருகங்களுக்காக, மறைத்துக் கட்டப்பட்டிருந்த பொறிவெடியில் சிக்கியதனால், அவரது தொடைப்பகுதியில் பொறி வெடியின், துப்பாக்கிச் சன்னங்கள் பாய்ந்துவிட, காயத்துடனும், சிந்திய குருதியுடனும் காட்டிலிருந்து மீண்டு, வைத்தியசாலை சென்று, காயத்திற்கு வைத்தியம் பார்த்தாராம். அப்படி வைத்தியம் செய்தபோதும், தன் தொடைப்பகுதியில் நிரந்தரமாகத் தங்கிவிட்ட இரு துப்பாகிச் சன்னங்கள், அசைவதை, இச்சம்பவத்தின் சாட்சியாகக் காட்டுவார்.

இப்படியான காட்டுவாழ்க்கை, வேட்டை அனுபவங்கள், பலவற்றைத் தன்னகத்தேயும், தானே சாட்சியாகவும் இருந்த சின்னராசா, வெடிமருந்துகளைக் கையாள்வதிலும், பழைய வெற்றுத் துப்பாக்கி ரவைக் கூடுகளைப் புதிய ரவைகளாக மாற்றவும் தெரிந்துவைத்திருந்தார்.

அந்தக்கால வாழ்வியலில், அவரொரு கதைநாயகன்தான் . அவரிடமிருந்து தெரிந்து கொண்ட பலவிடயங்கள் சில, சந்தர்பங்களில் எமக்கும் கைகொடுத்திருக்கிறது. மிகச் சாதாரண மனிதனாகிலும், குருவிச் சின்னராசா திறமை, தன்னம்பிக்கை, துணிவு என்பதன் சொந்தக்காரர் என்பேன்.

குருவி குருவியல்ல





குருவி உண்மையில் அசத்தலான பேர்வழிதான். கடுகு சிறிதென்றாலும் காரம் பெரிதென்பது போல், மூர்த்தி சிறிதென்றாலம் கீர்த்தி பெரிதென்பது போல், குருவியின் கீர்த்தியும் பெரிதுதான். வலைப்பதிவெழுத வந்த காலங்களிலே இந்தக் குருவி பற்றி எழுதவேண்டுமென எண்ணியிருந்ததுதான். சாதாரண வாழ்வு வாழ்ந்த மிகச்சராசரியான மனிதன். ஒரு காலத்தில் தன் பெயர் இணையத்தில் இவ்வாறு பதிவு செய்யப்படுமென்றோ அல்லது பதிவு செய்யப்பட்டதை அறிந்து கொள்ளக் கூடிய சூழலிலோ இருக்கக் கூடியவரில்லை. இன்னமும் இருக்கின்றாரோ என்பதும் தெரியவில்லை. தான் சொல்லும் கதைகளின் சாட்சியமாகவே வாழ்ந்த அந்தச் சராசரி மனிதனைப் பற்றிய பதிவிது. ஒருசில புதிய விடயங்களைத் தெரிந்து கொள்ளும் வாசிப்பினை இது தரலாம்.


காடு பற்றி அறிய, காடுகளில் சுற்றித்திரிந்து வர ஆவல் கொண்டிருந்த காலத்தில், என்னைக் கந்தளாய் காடுகளுக்குள் தன்னுடன் கூட்டிச்சென்றவர்தான் குருவி. குருவி அவரது பட்டப்பெயர் அல்லது சிறப்புப் பெயர். காரணப்பெயரும் கூட. அடர்ந்து வளர்ந்து, இருள் கவ்விய காடுகளுக்குள் அநாயசமாக விரைந்து செல்லும் நடைவேகத்தாலும், குட்டைத் தோன்றத்தாலும், வந்ததுதான் குருவி எனும் பட்டப்பெயர். நிஜத்தில் சின்னராசா. குருவிச்சின்னராசா என்றால் தம்பலகாமப் பகுதியில் ரொம்பவும் பரிச்சயப் பட்டிருந்தவர். அந்த பரந்த அறிமுகத்துக்குக் காரணம், அவரிடமிருந்த சில அதிதமான திறமைகள் அல்லது செயல்கள்.


அந்தக்காலத்து இரட்டைக்குழல் துப்பாக்கியை நிமிர்த்திப்பிடித்தால் அதன் உயரத்தில் சற்றே கூடிய அந்த மனிதன் ஒரு வேட்டைப்பிரியன். ஆனால் வேட்டையாடுவதற்கென அவர்களுக்குள்ளிருந்த மரபுகள் அல்லது சட்டங்கள் மீறாத வேட்டைக்காரன். இதைவிடவும் சின்னராசாவுக்கு மேலும் சில தகமைகள். அதில் எனக்குப் பிடித்தது அவரது கம்பு விளையாட்டு. அவரைவிட நீளமான கம்பை அநாயசமாகச் சுற்றி விளையாடுவார். அதன் பால் ஈர்ப்புக்கொண்டு நானும் எனது மாமா ஒருவரும், அவரிடம் கம்பு விளையாட்டுப் பயிற்சி பெற விரும்பினோம்.


ஒரு அமாவாசை இரவில் கோணேசர் கோவில் மேற்குவீதியில் வகுப்பு ஆரம்பமாகியது. கம்பு விளையாட்டுக்கு உகந்த கம்பாக துவரைத்தடியினைப் பாவிப்பார்கள். நார்த்தன்மை கொண்ட நல்ல வைரமான, நேரான துவரந்தடிகளை வெட்டிப் பாடனம் செய்து பாவிப்பார்கள். கடினமான மேற்தோலை உடைய எருமைகளை அடித்து மேய்க்கவும், இந்தத் துவரந்தடிகளையே பாவிப்பார்கள். அதனைத் துவரங்கேட்டி எனச் சொல்வார்கள். பாடனம் செய்து, அவர் கொண்டு வந்திருந்த கம்புகளை வைத்து, குருவணக்கஞ் செய்வது எப்படி என்று முதல்வகுப்பில் காட்டித்தரப்பட்டது. அமாவாசை முதல் பூரணை வரை முதலாம் பாடம் எனவும் வரையறுத்துச் சொல்லியிருந்தார். ஆனால் எமது துரதிஷ்டமும் பலரது அதிர்ஷ்டமும் சேர்ந்துகொள்ள அப்பாவுக்கு முதல்நாளிலே செய்தி கசிந்துவிட, துவரங்கேட்டியால் என்னை மேய்த்து, சின்னராசாவைக் கடிந்துவிட, என் கம்பு விளையாட்டுப் பயிற்சி, வணக்கவகுப்புடனே வணக்கம் போடப்பட்டுவிட்டது.


சின்னராசா, கிழக்குக்கேயுரிய மந்திரவிளையாட்டுக்களிலும் கெட்டிக்காறார். ஆனாலும் அவர் எல்லாரிடத்திலும் வெளிப்படையாக அதைச் சொல்லிவிடும் வெள்ளந்திக்காறர். அதனால் அவரது மந்திர வேலைகள் பலிக்காது எனச் சொல்வார்கள். மந்திர விளையாட்டு என நான் சொன்னதுக்குக் காரணம், அதை ஒரு பழிவாங்கு செயலாக அவர்கள் பாவித்ததில்லை. கும்பத்து மால்களில் ஒரு வித்தை விளையாட்டாகப் பாவித்ததனாலே. அதைத் தவறாகச் செய்பவர்களையும் சின்னராசா கடிந்து கொள்வார்.


இந்த மந்திர வேலைகளில் சிலவற்றை அவர் தன் காடுசார் வாழ்வில் பாதுகாப்புக்குப் பாவித்துக் கொள்வார். சிலவற்றைக் கண்டிருக்கின்றேன். சில கதைகளை அவர் சொல்லக் கேட்டிருக்கின்றேன். வேட்டையாடலுக்கென அவர்கள் தீர்மானித்துள்ள சில மிருகங்கள் பறவைகளைத் தவிர, ஏனையவற்றை வேட்டையாடுவதில்லை எனும் ஒரு கொள்கை அவர்களிடம் எழுதப்படாத சட்டமாகவிருந்தது. அப்படி அவர்கள் வேட்டையாட எத்தனிக்காத மிருகங்களிடமிருந்து தங்களைத் தற்காத்துக்கொள்ள அந்த மந்திர அறிவைப் பாவித்துக் கொண்டார்கள். இதை கட்டு மந்திரம் எனச் சொல்லிக்கொள்வார்கள். இது மிருகங்களின் வகைக்குத் தக்கவாறு சொல்வார்களென நினைக்கின்றேன். இதைச்சொல்லி உச்சரிப்பதின் மூலம், அமமிருகங்களின் வாய்களைக் குறிப்பிட சில நிமிடங்களுக்கு திறக்கவிடாது செய்ய முடியும், அல்லது அவை செல்லும் பாதையினைத் திருப்பிவிட முடியும் என வெகுவாக நம்பினார்கள். ஆனால் இதற்கெல்லாம் ஒரு நேரக்கட்டளவும் அவர்களிடமிருந்தது. நேரக்கட்டும், நம்பிக்கையும், தவறினால் மிருகங்கள் கடுமையாகத் தாக்கிவிடும் என்று சொல்வார்கள்.


அப்படி நடந்த ஒரு சம்பவத்துக்கு சாட்சியாக தன் வலது கை ஆட்காட்டிவிரலை காட்டுவார் சின்னராசா. ஒருமுறை காட்டில் வேட்டைக்கு சின்னராசாவும், அவரது நண்பரும் சென்றிருக்கின்றார்கள். வழியில் இரு கரடிகள் எதிர்பட்டிருக்கின்றன. ஒன்று ஆண் மற்றது பெண். சின்னராசாவுக்குப் பின்னால் நண்பர். சற்றுப் பயந்தவர். கரடிகள் நேராகச் சந்தித்து விட்டன. நண்பரிடம் தன் துப்பாக்கியைக் கொடுத்துவிட்டு, சின்னராசா கரடிகளை, நேருக்கு நேராக உற்றுப் பார்த்த வண்ணம் மந்திரக்கட்டுச் சொல்லத் தொடங்கினார்...

மிகுதியை நாளை சொல்கின்றேனே :)

ஏப்ரல் 1 முட்டாள்கள் தினமாமே




பாடசாலைக் காலத்தில், ஏப்ரல் முதலாம் நாள் ஒரு பகிடிவதை நாளாக எமக்கிருந்தது. முதல் நாளே யார் யார் எனத்திட்டமிட்டதன்படி, காலையில், பகிடிவதை தொடங்கும். வெள்ளைச்சீருடையில், பேனா மையைத் தெளிப்பதுதான் அது. குறித்த நபருக்கு தெளித்தபின் அதைப்பார்த்து கேலிசெய்து சிரிப்பதுதான் 'ஏப்ரல் பூல்' விளையாட்டாக இருந்தது. பெரிதாக ஒன்றுமில்லையென அப்போது தெரிந்தாலும், அறுவடை முடிந்த வயல்களில், கொட்டிக்கிடக்கும் நெற்கதிர் பொறுக்கி, நெல்லாக்கி விற்று வரும் பணத்தில் பள்ளிச்சீருடை ஒன்றை வாங்கியணிந்துவரும் ஏழை மாணவனுக்கு இது எவ்வளவு வலியைத் தந்திருக்கும் என இப்போது புரிகிறது.

ஒரு காலத்தில், ஏப்ரல் மாதத்தை வருடத்தொடக்கமாகக் கொண்டிருந்த, ஐரோப்பிய சமூகத்தில், ஜனவரியை வருடத்தொடக்கமாகக் கொள்ளும் புதிய நாட்காட்டிமுறை அறிமுகமாகியபோது, புதிய முறைக்கு மாறாதிருந்த பழமை வாதிகள் ஏப்ரல் முதல்நாளை வருடத்தொடக்கமாகக் கொண்டாட, அதைப் புதிய மாற்றம் கண்டவர்கள், முட்டாள்கள் தினம் என எள்ளி நகையாடியதன் நீட்சி, காலனியாதிக்கத்தால் எங்களிடமும் தொற்றிக்கொண்டது. தொடங்கியவர்கள் அதை விட்டுவிலகிச் செல்ல, நாம் தொடர்கிறோம்...


ஏப்ரல் ஒன்று முட்டாள்கள் தினம் என என்னளவில் நினைவு கொள்ள 1987 ஏப்ரல் முதலாந்திகதிக்குச் செல்ல வேண்டும். அந்தக்காலப்பகுதி, எங்கள் நிலத்தில் அமைதி நிலவியதாகச் சொல்லப்பட்டகாலம். அமைதிகாக்க வந்தவர்கள் எங்கள் தெருக்களில் காலையும் மாலையும் நடைபயின்றதால், அகிலத்தில் அவ்விதம் கற்பிதம் செய்யப்பட்டிருக்கலாம்.


எங்கள் வீட்டினருகே ஒருசிறு மளிகைக்கடை. கடையோடு சேர்ந்தே அதை நடத்துபவர்களின் வீடு. அவர்களுடைய பிள்ளைகளில் ஒரு பெண், சற்று மனவளர்ச்சி குன்றியவள். ஆனாலும் அந்தக்குடும்பத்தில், அயல்களில், அனைவராலும் நேசிக்கபட்ட சிறுபெண். வீட்டோடு சேர்ந்தே கடையுமிருந்ததால், அப்பெண்ணையும் சிலவேளைகளில் கடைகளில் காணலாம். அன்றும் அவள் நின்றிருந்தாள்.




வீதியில் வந்த வீ(ண/ர)ர்களில் ஒருவனுக்கு பீடி குடிக்கும் எண்ணம் வரவே, வீதியருகேயிருந்த கடைக்குச் சென்றான். கடையின் முகப்பில் தாயோடு அப் பெண்ணும் . பீடிகேட்டவனுக்கு, தாய் பீடியெடுத்துக் கொடுத்தாள். பற்றவைக்க தீப்பெட்டி கேட்டான். கடையில் தீப்பெட்டி முடிந்துவிட்டதைச் சொல்லி வீட்டினுள்ளிருந்து எடுத்துவர உள்ளே சென்ற தாயையும், வீதியிலும், கடைமுகப்பிலும், நின்ற கர்ம வீரர்களையும் மாறி மாறிப் பார்த்து விகல்பமின்றி சிரித்தபடியே இருந்தாள் சிறுபெண்.




பீடி வாங்கியபின் கிடைத்த மீதிச் சில்லறையை வைப்பதற்காகவோ என்னவோ, கையிலிருந்த துப்பாக்கியைக் கடை மேசையில் வைத்தான் அவன். சிறுகுழந்தையாய் சிரித்தபடி, " இது சுடுமா..? " எனக்கேட்டாள். என்ன நினைத்தானோ?. துப்பாக்கியைக் கையிலெடுத்துச் சுட்டுக்காட்டினான். துப்பாக்கிச் சத்தம் கேட்டு உள்ளே சென்ற தாய் ஓடிவந்தாள். உணவருந்திக்கொண்டிருந்த தந்தை ஓடிவந்தார். அண்டைவீட்டுக்காறர் ஓடிவந்தனர். ஆனால்... சுடுமா எனக்கேட்ட பேதை மட்டும் பேசவில்லை. வீழந்து கிடந்த அவளின் தலையினடியிலிருந்து செங்குருதி வெளிவரத் தொடங்கிற்று.




வீதியிலிறங்கிய வீனர்கள் வரிசை, நடக்கத் தொடங்க, புகைந்த துப்பாக்கியினைத் துடைத்த பின் திரும்பி அவனும் நடந்தான். என்ன நடந்ததென்று வினவிய சகபாடிக்குச் சிரித்தபடி சொன்னான்..




" ஏப்ரல் பூல்.."




இங்கும் வாசிக்க உண்டு

பிரான்ஸ் அரசியலில், ஈழத்தமிழர்கள்.


தமது சொந்த மண்ணின் அரசியல் இன்னல்களால், புலம்பெயர்ந்த ஈழத்தமிழர்கள், இப்போ தாம் வதியும் நாடுகளிலுள்ள அரசியல் செயற்பாடுகளில் இணைந்துவருவது தெரிந்ததே. அன்மையில் பிரான்ஸில் நடைபெற்று முடிந்துள்ள உள்ளுர் தேர்தலில் 12 தமிழர்கள் தெரிவாகியுள்ளனர். இவர்கள் பாரிஸ் மற்றும் அதன் சுற்றுப்புற உள்ளுராட்சி மன்றங்களுக்கு தெரிவுசெய்யப்பட்டுள்ளனர்.

இதில் 7 பேர் ஈழத் தமிழர்களாவர். மூவர் பாண்டிச்சேரியை சேர்ந்தவர்களாவர். இதேவேளை ஈழத் தமிழர்கள் பிரான்ஸின் தேர்தலின் மூலம் தெரிவாகியுள்ளமை அங்குள்ள ஈழத் தமிழர்கள் மத்தியில் புத்துணர்வை ஏற்படுத்தியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

பிரான்ஸில் சுமார் 125 ஆயிரம் தமிழர்கள் வாழ்கின்றனர். இதில் 50 ஆயிரம் பேர் ஈழத்தமிழர்களாவர். பிரான்ஸின் உள்ளுராட்சி தேர்தலில் 14 ஈழத்தமிழர்கள் போட்டியிட்டனர்.

தேர்தலில் வெற்றி பெற்ற ஈழத் தமிழர்கள் அனைவரும் இடதுசாரி கட்சிகளை பிரதி நிதித்துவப்படுத்தி போட்டியிட்டவர்களாவர். இதே வேளை இந்த தெரிவுகளின் மூலம் பிரான்ஸின் தமிழர்கள் வலதுசாரி கட்சியான தற்போது அரசாங்கத்தின் மீது தமது வெறுப்பை வெளிப்படுத்தியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. வெற்றிபெற்றவர்களுக்கும், வெற்றிபெறச் செய்தவர்களுக்கும் பாராட்டுக்களும் வாழ்த்துக்களும்.

கடந்த வருடத்தில் நோர்வேயில் இடம்பெற்ற உள்ளுர் தேர்தலில் ஈழத் தமிழர்கள் ஐவர் தெரிவு செய்யப்பட்டனர். இந்த தேர்தலில் நோர்வேயில் உள்ள 70 வீத ஈழத் தமிழ் பெண்கள் தமது வாக்குகளை செலுத்தியதாக புள்ளிவிபரங்கள் தெரிவித்திருந்தன..

சுவிற்சர்லாந்து தேசிய அரசுத் தேர்தலில் போட்டியிட்ட ஈழத்துப் பெண் குறித்த செய்திகளை இங்கு படிக்கலாம்.


இதுவும் பிடிக்கும், படிக்கலாம்.

கல்லூரி, நிஜங்கள், நினைவுகள்.

அன்மையில் பார்த்த படங்களில் "கல்லூரி" ரொம்பவும் பிடித்திருந்தது. பிடித்ததற்கான காரணங்களில் அதன் கதை, கதையில் வரும் காட்சிகள் பலவும், பலரது மாணவப் பருவங்களிலும் வந்து போயிருக்கக் கூடியன, எனக்கும் வந்திருந்தது என்பது முதன்மையாகும்.

திருகோணமலை புனிதசூசையப்பர் கல்லூரியின் மதியபோசன இடைவேளையில், எங்கள் வகுப்பறையைக் கடந்து செல்லும் எல்லோர்க்கும், எங்கள் சாப்பாட்டு முறைமை வியப்பும் வேடிக்கையும் தருவது. எல்லோருடைய உணவுப் பொதிகளையும் விரித்து வைத்துக்கொண்டு, பொதுவாக கலந்து உண்பது எங்கள் நட்பு வட்டத்தின் பழக்கம். சிறுவயது முதலே சைவ உணவுப் பழக்கம் உள்ள நான், அந்த ஒரு காரணத்தினால் அந்த வேளையில் விலகிவிட்டக் கூடாது எனும் அக்கறையில், மதியபோசனத்தைச் தாங்களும் சைவ உணவாக மாற்றிக்கொண்ட அற்புதமான நண்பர் வட்டம் என்னது.

கல்லூரி ஆண்களுக்கு மட்டுமேயானதால், கல்லூரி நண்பர் வட்டம் ஆண்களோடு மட்டுமே அமைந்துவிடும். கல்லூரிக்கப்பால் உள்ள நண்பர்வட்டம் மிகப்பெரிது. அது தோழிகளையும் கொண்டது. திருகோணமலை ஒரு பல் சமூகக்குழுமங்கள் இனைந்து வாழும் மாநிலம் ஆனதால், ஈழத்தின் ஏனைய பகுதிகளைவிட இங்கு வாழ்நிலை சற்று வித்தியாசமானது. அதிலும் குறிப்பாகத் திருமலை நகரப் பகுதியும், அதன் அன்மித்த கிராமங்களும், பழகியல்பு மிக யதார்த்தமும் நேசமும் நிறைந்தது.



சிவராத்திரி நகர்வலம், வெசாக் பண்டிகைக்காலம், சல்லியம்மன் பொங்கல், கோணேஸ்வரர் கோவில் தெப்பத்திருவிழா, போன்ற கொண்டாட்ட நாட்களில் நள்ளிரவு தாண்டி அதிகாலைவரை எங்கள் சுற்றல் தொடரும்.




திருகோணமலைக் கடற்கரை, இலங்கையின் அழகான கடற்கரைகள் பலவற்றிலொன்று. தெப்பத்திருவிழாக்கலாங்களில் விடியும்வரை அந்த கரையின் மணற்படுக்கைகளில் கிடந்து நாம் பேசி மகிழ்ந்த கதைகள்தாம் எத்தனை. ஏன் ஞாயிறு மாலைகளில்...?. கோணேஸ்வரர் கோவில் மாலைப்பூசைக்கு நின்றுவிட்டு, குன்றிருந்திறங்கி வரும் போது, புத்தரையும் பார்த்து, புத்தரின் புத்திரிகளையும் பார்த்த மகிழ்வோடு கடற்கரைக்கு நாம் வரவும், கதிரவன் தனக்கினி வேலையில்லையென கடலுள் விழவும் சரியாக இருக்கும். கரையிலிருந்து கடலைப்பார்த்து, கடலை கொறித்து, இடையிடையே கடலை எறிந்து, கதையும் எறிந்த மகிழ்ந்திருந்தோம். அலையின் இரைச்சலில் இசை சேர்த்துப் பாடிக்களித்திருந்தோம். துட்டிருந்தால், எட்டுமணிக்கு நெல்சன் தியேட்டரில் ஆங்கிலப்படம். அல்லாவிட்டால் பிரியமனமில்லாமல் பத்துமணிக்கு கடற்கரையில் பிரிவோம். எங்கள் கதைகளும், பாடல்களும், மகிழ்வுகளும் மட்டுமே நிறைந்து கிடந்த அந்தக் கடற்கரையில் நாங்கள் மட்டுமல்ல, எங்களுக்கு முன்னவர்களும் பின்னவர்களும் அப்படித்தான் இருந்தார்கள். ஏனெனில், எப்போதும் மனதுக்கு மகிழ்ச்சியை மட்டுமே வாரித்தந்தது அந்தக் கடற்கரை.


அந்த நம்பிக்கையில்தான், 2006 ஜனவரி மாதம் இரண்டாம் நாளில் எங்களைப்போலவே இருந்த இளையவர் சிலர் அந்தக் கடற்கரையில் களிப்புறச் சென்றனர். சிரிப்பும், மகிழ்வும், மட்டுமே கொண்டு சென்ற அந்த மாணக்கர்களைக் குண்டு கொண்டு வந்தார்கள் என்று சொல்லி, வேட்டையாடி விருந்து கொண்டாடிற்று பேரினவாதம். விடுமுறைக்குக் கூடிக் குதுகலித்திருந்த பள்ளித் தோழர்கள், பட்டாம்பூச்சிகளாய் வட்டமடித்து வந்தபோது, துப்பாக்கியால் சுட்டுத் துவம்சம் செய்தது அரச பயங்கரவாதம்.


ரஜிகர் மனோகர் 1985-02.01.2006


லோகிததாசன் றோகாந் 07.04.1985 - 02.01.2006


யோகராஜா ஹேமச்சந்திரன் 04.03.1985 - 02.01.2006


சஜேந்திரன் சண்முகநாதன் - 02.01.2006

சிவானந்த தங்கவடிவேல் -02.02.2006

லோகிதாசன் றோகாந், யோகராஜா ஹேமச்சந்திரன், ரஜிகர் மனோகரன், சஜேந்திரன் சண்முகநாதன், சிவானந்தா தங்கவடிவேல் என்னும் ஐந்து பட்டாம்பூச்சிகள் சிறகொடிந்து விழுந்து போயின. தங்கள் கண்முன்னே தோழர்களைப் பறிகொடுத்த ஏனையோர், காயம் பட்டவர்ளையும் மீட்டுக்கொண்டு கதறியழுது ஓடினர். கல்வித்தகமையிலும், விளையாட்டுத்துறைகளிலும், பொதுப்பணிகளிலும், ஓர்மமாய் ஒன்றித்திருந்தவர்களை ஒருகணத்தில் உயிர்பறித்தழித்தன, பேயாளும் தேசத்தின் பிணந்தின்னிக் கழுகுகள். பெற்றவயிறுகள் பற்றியெரிய, உற்ற உறவுகள் விம்மிநிற்க, பிணங்களை வைத்துப் பேரம் பேசின வெறிநாய்கள். மறுத்துநின்ற மற்றவர்கள் உயிர் பறிக்கப்படும் என அச்சமூட்டி அரசு ஆண்டது. எல்லாமிருந்தும், இறைமை மட்டும் இல்லாக்காரணத்தால் ஏதிலிகளாக எம்மவர் மரணமும், வாழ்வும்.

எங்கள் கிள்ளைக் கதைகளாலும், கிளர்ந்த சிரிப்பு மகிழ்வுகளாலும், விரிந்த எங்கள் கடற்கரை இன்று எமக்கில்லை. இனி என்றும் எமக்கு இல்லை என்பதும் இல்லை. ஆதலினால், இன்னமும் காதல்செய்வோம் எங்கள் கடற்கரையை.













என்னத்தைச் சொல்ல... வசதிக்கேற்றவாறு வரலாறு எழுதப்படும் தேசம் எங்கள் தேசமாயிற்று. இதை இணையத்திலும் உறுதிப்படுத்துவது போல தேசம் இணையத்தளத்தில், எம். ஆர். ஸ்ராலினின் செவ்வியிலும் சில செய்திகள் வந்துள்ளது. படித்த போது வேடிக்கையாகவும், வேதனையாகவும் இருந்தது.




ஒரு வரலாற்றுக் குறிப்பை உங்களுக்கு ஞாபகப்படுத்த விரும்புகின்றேன். 27-04-1977 ஆண்டு கனவான் எஸ்.ஜே.வி.செல்வநாயகம் அவர்களுடைய சாம்பல் கிழக்கு மாகாணத்திற்கு கொண்டுவரப்பட்ட அன்றுதான் முதன் முதலாக வரலாற்றுப் பெருமைமிக்க கிழக்கு மாகாணத்தின் அமைதி குலைத்தெறியப்பட்டது. மூவினங்களும் சேர்ந்துவாழும் அற்புதமான எங்கள் திருகோணமலை இனக்கலவரத்தை அன்றுதான் கண்டது. அன்று தொடங்கிய இரத்தத் துளிகள் இன்றுவரை தொடர்கிறது.

அப்படியானால் அதற்கு முன் தமிழர்கள் மீது தாக்குதலே நடக்கவில்லையா?

பன்குளம் எனும் தமிழ்கிராமத்தின் மீது, கந்தளாய் தமிழ்மக்கள் மீது, முள்ளிப் பொத்தானை குடியேற்றத்திட்டத்தில், என ஆங்காங்கே, உதிரியாகத் தமிழர்கள் மீது நடந்த தாக்குதல்கள் என்னவாம்.

புதிதாக உருவாக்கப்பட்ட குடியேற்றத்திட்டங்களில், தமிழருக்காக ஒதுக்கப்படும் நிலங்களில், தமிழர்கள் நிரந்தரக் குடிகளாக வாழமுடியாமல் செய்ய, அதற்கான அச்சநிலையைத் தோற்றுவிக்க, பேரினவாதம் இப்படியான தாக்குதல்களை அப்பகுதிகளில் செய்ததை, வசதியாக மறைத்துவிடுகிறீர்களே?. உதாரணத்துக்கு ஒன்று..

பாலம்போட்டாறு குடியேற்றத்திட்டத்தில் குடியேறிய ஒடுக்கப்பட்ட தமிழ்மக்களை அச்சப்படுத்தி வெளியேற்ற வைப்பதற்காக, பேரினவாதிகளின் கைக்ககூலிகள் பலிகொண்ட தமிழ் இளைஞனின் பெயர் சுந்தரம் திருநாவுக்கரசு. கூட்டுறவுத்திணைக்களத்தின் களஞ்சியப்பொறுப்பாளனாக இருந்தவனை, அவனது பணிநேரத்திலே பலியெடுத்த பாவிகள், நாற்பது வருடங்களுக்கு மேலாக தமிழ்மக்களுடன் ஒன்றாக வாழ்ந்த ஒரு சிங்களக்குடும்பத்தைச் சார்ந்தவர்களே என்ற உண்மையைக் கூட அன்றை தமிழ்இளைஞர்கள் ஒரளவு அறிந்திருந்தார்களே.

இப்படியான குடியேற்றத்திட்டங்களில், கொடுப்பது போல கொடுத்து, பறிக்கும் வகையில் பறித்துக் கொள்ளும் இத்தகைய சூழ்ச்சிகளுக்கு பலியாகிய தமிழரக்ள் குந்தியிருக்க நிலமற்ற ஏழைப்பாட்டாளிகள் என்பது கூட நீங்கள் மறந்துபோனதா?

இப்படி எத்தனை வேதனைக்கதைகள் உண்மையாக நடந்திருக்கும் போது, அதைத் தெரிந்து கொண்டு மறைக்கிறீர்களா? அல்லது தேவைக்காக மறுக்கிறீர்களா?



இன்னும் விரிவாகப் பார்க்க

திருகோணமலை ஒரு பார்வை

எனும் தலைப்பில் நான் முன்னர் எழுதியவை.

மட்டக்களப்புத் தயிர், சுவிஸ் லசி.




முன்பொருமுறை மதியோடு பேசும் போது, பேச்சிடையே இந்த மட்டக்களப்புத் தயிர் பற்றிப் பேசியபோது இதைப்பற்றி எழுத வேண்டும் எனக் கேட்டிருந்தார். சென்ற சில வாரங்களுக்கு முன், முத்துலெட்சுமியின் அமிர்த்தசரஸ் பற்றிய பதிவில் தயிர் பற்றி வாசித்த போது மீண்டும் ஞாபகத்துக்கு வந்தது.


யாழ்ப்பாணத்தில் தயிர் எனச் சாப்பாட்டில் சேர்ப்பது சற்றுக் குறைவென்றே நினைக்கின்றேன். ஆனாலும் மோர் அங்கு தாராளமாகப் பாவிக்கப்படும். இதில் சில நன்மைகளும் உண்டு. தயிரைக்கடைந்து மோராக்கும் போது வெண்ணெய் பெறப்பட்டு, நெய்யாக்கப்படுவதால், கொழுப்புச்சத்துக்குறைவான மோர்உடல்நலத்துக்கு உகந்தவாறு கிடைக்கிறது. மோராக்கப்படுவதால், நிறையப்பேருக்கு கொடுக்க முடிகிறது. யாழிலுள்ள வெக்கையான காலநிலைக்கு மோரின் தண்ணீர்த்தன்மை உகந்தது. இதற்குள் ஒரு பொருளாதாரச்சிக்கனமும் மறைந்திருக்கிறது. இப்படியான நன்மைகளைக் கொள்ள முடியும்.


வெயில்காலத்தில் யாழ். நகரத்துக்கு மிதிவண்டியில் சென்று வரும் போதெல்லாம், எந்த வழியாகப் பயனித்தாலும், நாச்சிமார் கோவிலடிவரைக்கும் கே.கே.எஸ் வீதிவழியாகத்தான் பயணம் செய்வேன். காரணம், நாச்சிமார் கோவிலுக்கு முன்னாலிருக்கும் மோர்க்கடை. ஒரு பெட்டிக்கடைதான். ஆனாலும் அந்த மோர் பக்குவம் அருமையாக இருக்கும். ஆனால் அதில் போய் மோர்குடிப்பதற்குள் நான் படும்பாடு பெரும்பாடாகிப் போய்விடும். எந்த நேரமும், நிறைந்த சனப் புழக்கம் உள்ள கே. கே. எஸ். வீதியில், வாகனத்தில் போய்வருவோரில், யாராவது நம்மை அடையாளங் கண்டு, வீட்டில் சொல்லிவிட, விழப்போகும் திட்டுக்களின் நினைப்பு, மோரின் சுவையை அனுபவிக்க விடாது. மோர் குடிக்கக்கூடாதென்பதல்ல வீட்டின் கண்டிப்புக்குக் காரணம். அதற்குள் ஒளிந்திருப்பது யாழ்ப்பாணத்துச் சாதீயம்.


கிழக்கில் தயிர், தயிராகவே உணவில் சேர்க்கப்படும். அதற்கு முக்கிய காரணம், கிழக்கின் கால்நடைவளம். குறிப்பாக மட்டக்களப்புத் தயிர், முழு இலங்கைக்கும் பிரசித்தம் என்றும் சொல்லலாம். மண்சட்டியில் சுண்டக்காச்சிய எருமைப்பாலுறைந்து, பாலின் நீர்த்தன்மையை மண்சட்டி இழுத்துவிட, கெட்டித்தயிராக வரும் . அந்தச் சட்டிகளைத் தனியாகஅல்லது, சோடிகளாக தென்னோலை உறிகளில் இணைத்துக்கட்டி, விற்பனைக்காக வெளிமாநிலங்களுக்கு அனுப்புவார்கள்.


மட்டக்களப்பில் சாப்பாட்டுடன் தயிரைச் சேர்த்துக்கொள்ளாது, சாப்பிட்டு முடிந்ததும், கண்ணாடிக்குவளைகளில் தயிரை இட்டு, அதற்கு மேல் சீனி அல்லது கித்துள்பாணி விட்டுத் தருவார்கள். இனிப்பும் புளிப்பும் கலந்த ஒரு இன்சுவை. சாப்பாட்டில் தயிர் கலந்து சாப்பிடுவதனால் கூட அதனுடன் சற்றுச் சீனிசேர்த்துக் கொள்வதையும் கண்டிருக்கிறேன். என்கென்னவோ விருந்தோம்பலில் மட்டக்களப்புத் தமிழர்களை விஞ்ச முடியாதென்றே எண்ணத் தோன்றுகிறது. அவ்வளவு நேசமாக விருந்து படைப்பார்கள். விழிக்கும் மொழியில் புதியவர்களைக் கூட "மகன்" "மகள்" சுட்டி அழைப்பதிலிருந்து, அனைத்து விசாரிப்புக்களிலும் அந்த நேசத்தைக் காணலாம்.


இந்திய உணவகங்களிலும், இங்குள்ள ஹரேகிருஸ்ணா ஆலய விருந்துகளிலும் நான் விரும்பிப் பெற்றுக்கொள்வது லசி. மாம்பழமும், தயிரும் சேர்ந்த அந்த லசிகளிலும், வித்தியாசமான இனிப்பும் புளிப்பும் கலந்த சுவையும் இருக்கும். இவ்வகை லசிக்கள் தற்போது பல்வேறு சுவைகளில் இங்குள்ள பல்பொருள் அங்காடிகளில் கிடைக்கிறது. இஞ்சி, கறுவா, கராம்பு என்பன சேர்ந்த லசி மிகஅருமை. இதைவிட சுவிஸின் புகழ்மிகு பாற்பொருள் உற்பத்தி நிறுவனங்களில் ஒன்றான Emmi தயாரிக்கும் யோக்கட் வகைகளில் ஒன்றில் மட்டக்களப்புத் தயிரின் சுவையை ஒரளவு பெறமுடிகிறது.


மட்டக்களப்புப் பகுதிகளில் இஸ்லாமிய நண்பர்கள் சிலர் விருந்துகளின் முடிவில் பழப்பாகினை உணவுத்தட்டுகளில் இட்டு வழங்குவதைக் கண்டிருக்கின்றேன். இந்தியாவில் சிலரது விருந்துகளில் சிறிது தேன் வழங்குவதாகக் கேள்விப்பட்டதுண்டு. இவை விருந்துண்ணல் இனிப்பாக நிறைவுறுவதன் அடையாளம் எனச் சொல்லப்படுவதும் உண்டு. எதுவாயினும், உட்கொண்ட உணவு சேமிபாடடையும் வழிமுறைகள்தான் இவையென நான் சொல்ல, சாப்பிட்டதன் பின், " கோக்ககோலா" கூடி சீக்கிரம் செமிக்கும் என்கிறான் என் நண்பன்.






தென்றலும் புயலும்.


தென்றலும் புயலும். ஈழத்துத் திரைப்படவரலாற்றில் குறிப்பிட்டுச் சொல்லத்தக்கவொரு திரைப்படம். திருகோணமலைக்கலைஞர்கள் பலரின் கூட்டுழைப்பில் உருவான ஒரு திரைப்படம். இது குறித்து நீண்ட நாட்களாகவே எழுத வேண்டும் என எண்ணியிருந்தேன். அந்த எண்ணத்திற்கான முக்கிய காரணம், இத்திரைப்படத்தில் நடித்த கலைஞர் சித்தி அமரசிங்கம்.
தென்றலும் புயலும் திரைப்படத்தின் தயாரிப்பாளர், டாக்டர் வேதநாயகம் அவர்கள். இவர் திருகோணமலையைச் சேர்ந்தவர். அவரோடு பங்குகொண்டவர், யாழ். அராலியைச் சேர்ந்த வங்கி முகாமையாளராகிய சிவபாதவிருதையர். இவர்கள் இருவருமே படத்தின் முக்கிய கதாபாத்திரங்கள். கதையின்படி, ஒரே குடும்பத்தைச் சேர்ந்த சகோதரர்கள்.
இவர்களுக்கான நாயகிகளாக, சந்திரகலாவும், ஹெலனும் நடித்தார்கள். சித்தி அமரசிங்கம் நகைச்சுவைப் பாத்திரமாகத் தொடங்கி, கதையின் நிறைவுப்பகுதியில், குணசித்திரப் பாத்திரமாக வரக்கூடிய முக்கிய பாத்திரமொன்றில் நடித்தார். இசை. திருமலை பத்மநாதன்.
இந்தப்படத்தின் படப்பிடிப்புக்கள் திருகோணமலையின் ரம்மியமான பகுதிகளில் நடந்தன. குறிப்பாக மூதூர், நிலாவெளி, உப்பாறு, ஆகிய பகுதிகளில், பாடல் காட்சிகளும், வெளிப்புறக்காட்சிகளும் படமாக்கப்பட்டன. ஈழத்துத்திரைப்படங்களில் மிகநல்ல ஒளிப்பதிவில் வந்த படங்களில் இதுவும் ஒன்று. கறுப்பு வெள்ளைப்படமாக இருந்த போதும், வெளிப்புறக்காட்சிகள் மிக அழகாகப் பதிவு செய்யபட்டிருந்தது. இசையும் மிக இதமான இசையாகவிருந்தது. பின்னர் இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தின்,
காலை ஒலிபரப்புக்களில் அடிக்கடி ஒலித்த " சந்திரவதனத்தில் இந்த நீலப்பூ.." என்ற பாடல் இந்தத்திரைப்படத்தில் வந்த பாடலென்றே நினைக்கின்றேன்.

மூதூர், உப்பாறு, பகுதியில் எடுக்கப்பட்ட இப்பாடல்காட்சியில், அந்தப்பகுதியின் இயற்கை அழகு நன்றாகவே பதிவு செய்யப்பட்டிருந்தது. திரைக்கதையைப் பொறுத்தவரையில் பெரிய மாற்றங்கள் இல்லை. தென்னிந்தியச்சினிமாவின் நகலெடுப்புத்தான். ஆனால் இதில் பங்குகொண்ட கலைஞர்கள் பலர் உயிரோட்டமான நடிப்பினால் மெருகூட்டினார்கள். அப்படியான கலைஞர்களில் சித்தி அமரசிங்கம் குறிப்பிடத்தக்கவர்.
தோற்றத்தில் நகைச்சுவை நடிகர் நாகேஸின் தோற்றத்தை ஒத்திருந்தவர், பேச்சிலும் ஏறக்குறைய அதே நகைச்சுவையுணர்வு கொண்டவர் என்பதை, நேரில் சந்திந்தபோது தெரிந்து கொண்டேன். தென்றலும் புயலும் திரைப்படத்தை, திருமலை ஜோதித்தியேட்டரில் நண்பர்களோடு பார்த்தபோது, இடைவேளை நேரத்தில் சித்தி அமரசிங்கம் முதலில் அறிமுகமானார். பார்வையாளர்களோடு அமர்ந்திருந்து, மக்கள் ரசனையை அவதானித்துக் கொண்டிருந்த அவர் வெளியே வந்திருந்தார். அட்டகாசமான கலகலப்பான மனிதரெண்டும் சொல்ல முடியாது, அதே நேரம் படு அமைதியான மனிதருமல்ல. ஆனால் அந்தக் கணத்தில் அறிமுகமாகிய எங்களோடு, எங்கள் கருத்துக்களோடு நெருக்கமாக நின்றார். நேசமாகக் கேட்டார். திரும்பவும் படம் பார்த்தோம். படத்தின் நிறைவுக்காட்சியில் அமரசிங்கம் ஏற்றிருந்த பாத்திரத்தின் தியாகமொன்றால், உணர்வு பூர்வமாக பார்வையாளர்களின் மனங்களில் நிறைந்திருந்தார். அன்றைய சந்திப்பின் காரணமாய் எங்களிலும் நிறைந்திருந்தார்.
அதற்குப்பின் பல தடவைகள் அவரோடும் பழகும் வாய்ப்புக் கிடைக்காவிட்டாலும், கிடைத்த சந்தர்ப்பங்களில் நெருங்கிப்பழகியுள்ளார். தென்றலும் புயலும் திரைப்படம் பெற்ற வரவேற்புத் தந்த உற்சாகத்தில் அமரசிங்கம் ஒரு புதிய முயற்சியை முன்னெடுத்தார். "அமரன் ஸ்கீறீன்" என்ற நிறுவனத்தை உருவாக்கி, அதன் மூலம் ஒரு திரைப்படத்தை உருவாக்கும் திட்டத்தில் இறங்கினார். இதற்காக அவர் யோசித்தவிதம் சற்று வித்தியாசமானது.
திரைப்படத்திற்கான திட்டமிட்ட பொருளாதாரத் தேவை ஒரு இலட்சம் இலங்கை ரூபாய்கள். இதை பெற்றுக்கொள்ள முதலீட்டாளர்களை அவர் நாடவில்லை. மாறாக மக்களை, ரசிகர்களை நாடினார். ஒரு பங்கு ஒரு ரூபாய் என ஒரு இலட்சம் பங்குகள் விற்கத்திட்டமிட்டார். அவரிடம் கேட்டேன், ஏன்? ஒரு ரூபாய் பங்குகள் என்று. அதற்கு அவர் சொன்ன பதில்தான் இன்றளவும் என்னுள் அவர் நினைவுகளை நிறுத்தி வைத்திருக்கிறது. "தம்பி! நூறு ரூபாய் பங்கோ ஆயிரம்ரூபாய் பங்கோ வைத்தால் கெதியாத் தொகையைச் சேர்த்திடலாம்தான். ஆனால் நான் நினைப்பது அதுவல்ல. எல்லா மக்கள் தரப்பினரும், எல்லாரசிகர்களும், அந்தப்படத்தின் முதலீட்டாளர்களாக இருக்கவேண்டும். அதற்கு ஒரு ரூபாய் பங்குதான் சரியாக இருக்கும்..." என்றார்.
அவரது எண்ணமும் செயலும் எனக்கு ஏற்புடையதாகவும் மகிழவாகவும் இருந்தது. நானும் என் நண்பர்களும் கூட சில பங்குகளை வேண்ட முடிந்தது. அதன்பின் அவரைக்கண்ட போதுகளிலெல்லாம், அவர் முயற்சியோடு முன் முனைவது கண்டிருக்கின்றேன். ஆனால் காலத்தின் சுழற்சியில் அவர்முயற்சி கை கூடாது போய்விட்டது. எங்கள் நிலத்தில் எழுந்த இனப்பிரச்சினைதான் எல்லாவற்றையும் அழித்து விட்டதே. அதற்குள் அமரசிங்கம் அவர்களின் ஆசையும் அடங்கிவிட்டது. ஆனாலும் அமரசிங்கம் அவர்களின் செயற்திறன் வேறுபல வடிவங்களில் அவரது இறுதிக்காலம் வரை நிறைவு பெற்றதாக, திருமலையைப்பிரிந்திருந்தபோதும் அறியமுடிந்தது. ஆம், முடிந்தவரை முயலும் அமரசிங்கம் போன்றவர்களால், சும்மா இருக்க முடியாது.
படம் உதவி: ரமணீதரன்

நடந்த நூலகம் நொடிந்த கதை.





திருகோணமலையின் பசுமைக்கிராமமொன்றில் வாழ்ந்த காலமது. என் கல்லூரிக் காலம் . வாசிப்பு, இசை, ஊர்சுற்றல், நண்பர்கள் என உல்லாசமாக இருந்த காலமும் கூட. வாசிப்பு முதல் விருப்பமாக அப்போதுமிருந்தது. ஆனால் வாசிப்புக்கான புத்தகங்களைப் பெறுவது என்பதுதான் கடினம். அதிலும் நல்ல புத்தகங்களை என்னது என்று உரிமை கொண்டாடும் அகமகிழ்வு அளவிடமுடியாதது. ஆனால் அதற்குத் தடையாயிருந்தது பொருளாதாரம். அதை வெற்றிகொள்ளச் சிந்தித்தபோது வந்துதித்த எண்ணத்தில் உருவானதுதான் என் நடமாடும் நூலகம்.



வாசிப்பில் யாசிப்புள்ள இருபது பேர்களைச் சேர்த்துக் கொண்டேன். ஒவ்வொருவரிடமிருந்து மாதாந்தம் ஒரு குறிப்பிட்டதொகையைப் பெற்றுக்கொள்வது. திருகோணமலை நகரிலுள்ள இரு முக்கிய புத்தகசாலைகளாகிய, சிதம்பரப்பிள்ளை புத்தகநிலையம், வாணிபுத்தகநிலையம், இரண்டிலும் இருந்து தெரிவு செய்யப்பட்ட புத்தகங்களை வாங்கிக்கொள்வேன். தெரிவு செய்யப்பட்ட உறுப்பினர்கள் இருபதுபேரில், சராசரியான வாசகர்கள், தீவிரவாசகர்கள்,எனக் கலந்திருந்ததால், வாங்கும் புத்தகங்கள் கலந்தேயிருக்கும்.

வாங்கிய புத்தகங்களுக்கு உறையிட்டு, அடையாளம் வைப்பதற்காக நூல் ஒட்டி, (வாசிக்கும் புத்தகங்களின் பக்கங்களை மடித்து அடையாளமிடுவது எனக்குப் பிடிப்பதில்லை) இலக்கமிட்டு, பெரிய பிளாஸ்டிக் கூடையொன்றில் அடுக்கி, வார இறுதிகளில், ஐந்து மைல் சுற்று வட்டத்துக்குள்ளிருந்த என் வாசக நண்பர்களின் வாசல் தேடிச் சைக்கிளில் செல்வேன். வாரத்திற்கு ஒருத்தருக்கு இரண்டு புத்தகங்கள் என, சுற்று ஒழுங்கில் பரிமாறிக்கொள்வோம். வருடமுடிவில் அவரவர் பிரியப்பட்ட புத்தகங்களைச் சம அளவில் பகிர்ந்து கொள்வோம். இப்படிப் பகிரப்படும் போது பல நண்பர்கள் தங்கள் பங்குகளை என்னிடம் தந்ததாலும், எனது விருப்பத்தின் காரணமாகவும், இரண்டான்டுகளுக்குள்ளாக சுமார் முந்நூறு புத்தகங்கள் என் நூலகத்தில் சேர்ந்திருந்தன. இந்த நகர்வில் நான் நுகர்ந்து கொண்ட சுகமான மற்றுமொரு அனுபவம், ஒவ்வொரு உறுப்பினர்களுடனும் வாசிப்பின்னான, வாசக அனுபவப் பகிர்வு. இது பலநேரங்களில் நல்ல பல கருத்தாடல்களையும் தந்தன.



வீரகேசரிபிரசுர வெளியீடாக வந்த அனைத்துப்புத்தகங்கள், அகிலன், சாண்டில்யன், தீபம் பாரத்தசாரதி, சிவசங்கரி, ஆகியோரின் படைப்புக்கள், எனத் தொடங்கி பின்னாட்களில் கார்க்கியின் தாய், வால்காவிலிருந்து கங்கை வரை எனத் தொடர்ந்தது. இந்தியக் கலைக்களஞ்சியம் என்ற தலைப்பில், இந்திய உயர்ஸ்தானிகராலயம் வெளியிட்ட இரு தொகுப்புக்கள், இந்தியக்கலை கலாச்சாரம் பற்றிய பல்வேறுவிடயங்களையும் சொல்லும் பதிப்பு. அப்போதே அதன் விலை முந்நூறு ரூபாய்களுக்கு மேலிருந்தது. நூலகத்தின் இரண்டாமாண்டு நிறைவு நினைவாக அத்தொகுதி வாங்கப்பட்டது. இதுதவிர இடசாரிச்சிந்தனையாளர்களால் வெளியிடப்பட்ட சில காலாண்டுச்சஞ்சிகைகள், சிரித்திரன் சுந்தரின் படைப்புக்கள், டொமினிக் ஜீவாவின் மல்லிகைத் தொகுப்புக்கள், வெளியீடுகள், என நிறைந்திருந்தது என் நூலகம்.



திருகோணமலையைவிட்டு நான் பிரிந்தபோதும், என்வீட்டிலிருந்த ஒரு அலுமாரியில் அவை அடுக்கிவைக்கப்பட்டேயிருந்தது. பின்னொரு நாளில் என் குடும்பத்தாரும் விடுமுறைக்காக யாழ்ப்பாணம் வந்திருந்தபோது, அந்த விபரீதம் நடந்தது. அப்போது திருகோணமலைப்பிரதேசத்தில் மீளவும் ஒரு இனக்கலவரம் நிகழ்ந்தது. தமிழ்மக்கள் பலரும், தங்கள் வீடுகளைவிட்டு வேறிடங்களில் தஞ்சம் பெற்றிருந்த தருணமொன்றில், எங்கள் வீடு சூறையாடப்பட்டது.


பெட்டி இணைக்கப்பட்ட உழவு இயந்திரமொன்றுடன் வந்த கயவர்கள், வீட்டில் உள்ள பொருட்களைச் சூறையாடத் தொடங்கினார்கள். என் நண்பனின் தந்தையிடம் சொல்லி, நான் ரசித்து, பூமுதிரைப் பலகையில் செய்து வைத்திருந்த என் நூலக அலுமாரியும் அவர்கள் கண்களில் பட, அதற்குள் இருந்த புத்தகங்களை, எடுத்தெறிந்து மகிழ்ந்தார்கள். வாசிப்பு வாசனையற்ற ஒரு கயவன், வண்ணக்காகிதங்களில் உறையிட்டிருந்த அந்தநூல்களை, வானத்தில் எறிந்து கீழேவிழுவதைப் பார்த்து மகிழ்ந்தானாம்.



வயோதிபம் காரணமாக இடம்பெயராதிருந்த பக்கத்து வீட்டு முதியவர், திரும்பிச் சென்ற என்குடும்பத்தாரிடம் சொன்ன தகவல்கள் இது. இருபத்தைந்து வருடங்களுக்கும் மேலாக அந்த மண்ணில் தான் தேடிய தேட்டங்களின் அழிவை நினைத்து என் அப்பா அழுதார். இரண்டு வருடங்களாக இரசித்துச் சேர்ந்த, என் நேசத்துக்குரிய புத்தகங்களை இழந்து,
நான் அழுதேன். நடமாடும் நூலகம் என நான் நகைப்பும், பெருமையுமாய், சொல்லி மகிழ்ந்த என் உழைப்பு, என் தேடல், இல்லாதாக்கபட்டது.


இத்தனைக்கும் எங்கள் வீடு சூறையாடப்பட்டது, சிங்களக்காடையர்களால் என்று நீங்கள் நினைத்தால் அதுதான் இல்லை. கிழக்கில் தமிழ்மக்களின் துயர்கள் பலவற்றிலும் பங்குகொண்டிருக்கும், அவர்களும் தமிழ்பேசுபவர்கள்தான். இதற்குப் பின்னரும் என் நூற்சேகரிப்புக்கள் இரண்டு தடவைகள், இந்த யுத்தத்தின் காரணமாகவே அழிந்து போயிருக்கின்றன. அதுபற்றி இன்னுமொரு தடவை சொல்கிறேன்.

ஈழத்து இசைச் சகோதரர்கள்.


எழுபதுகளில் ஒருநாள் மாலை, திருகோணமலை புனிதசூசையப்பர் கல்லூரியின் பிரமாண்டமான, மண்டபத்தில் அந்த இசைநிகழ்ச்சி நடைபெறுவதாக ஏற்பாடாகி இருந்தது. நாம் படிக்கும் கல்லூரியில் நடைபெறும் இசைநிகழ்ச்சி என்பதற்கும் மேலாக, எங்கள் நண்பர்கள் வட்டத்திற்கு பிடித்தமான கலைஞர்கள் கலந்து கொள்வதனால், நாங்களும் ஆர்வமாகவே சென்றிருந்தோம். நிகழ்ச்சி மாலை 6.00 மணிக்கு என்றிருந்தது. நாங்கள் 5.30 மணிக்குச் சென்றபோது, மண்டபம் நிரம்பியிருந்தது. எங்களுக்கோ, மண்டபம், பலகணி, எல்லாமாக, சுமார் எழுநூறுபேர் ஒரே தடவையில் அமர்ந்திருந்து நிகழ்ச்சி பார்க்கக் கூடிய அந்த மண்டபம் நிகழ்ச்சிக்கு முன்னதாக நிரம்பி விட்டதா என்று ஆச்சரியம். நிகழ்ச்சிக்கு முன்னதாக நிரம்பியிருந்ததே ஆச்சரியமன்றி, அந்தக் கலைஞர்களுக்காக கூட்டம் சேர்வது ஒன்றும் ஆச்சிரியமல்ல. தங்களின் சுய முயற்சியாலும், திறமையாலும், ஈழத்து மெல்லிசைவரலாற்றில், முதலாவது இசைதட்டை வெளியிட்டு, ஈழத்து மெல்லிசை மன்னர்கள் எனும் சிறப்பினைப் பெற்றுக்கொண்ட சகோதரர்கள் அவர்கள்.


இந்நிகழ்ச்சிக்கு முன்னரே அவர்கள் இலங்கைத்தீவின் பல பாகங்களிலும், பல மேடைநிகழ்ச்சிகளைச் செய்திருந்தனர். அப்படியான இசைக்கச்சேரிகளின் போது, அவர்கள் காட்டிய பல நுட்பங்களும், வித்தியாசங்களுமே, எம்.பி பரமேஸ், எம்.பி கோணேஸ், எனும் அந்தச் சகோதரர்களின் இசை மேல் பலரும் விருப்பமுற வைத்தது. மற்றைய இசைக்குழுக்களிடம் இல்லாத மேலதிக திறமை, இவர்கள் சொந்தமாகவே பாடல் இயற்றி, இசையமைத்துப் பாடினார்கள். அதுவே ஈழத்து மெல்லிசை வரலாற்றில், என்றும் அவர்களை விட்டு விலகிச் செல்ல முடியாவாறு அமைந்து விட்டது. சகோதர்களில் மூத்தவரான பரமேஸ் பாடலை இயற்றிப் பாடவும் செய்வார். இளையவர் அதற்கான இசைக்கோப்பினைச் செய்வார். இவர்களோடினைந்த மற்றொருவர், மகேஸ். அப்படி அவர்களின் படைப்பிலுருவான " உனக்குத் தெரியுமா..? பாடல்தான் இலங்கையில் , இசைத்தட்டில் வெளிவந்த முதலாவது தமிழ் பாட்டு.

பாடலும், இசையும் கூட, அப்போது வெளிவந்த தமிழகப் பாடல்களிலிருந்து வித்தியாசமாகத்தான் இருந்தது. இலேசான மேலைத்தேய இசைச்சாயலோடு, ஈழத்தின் தன்மையும் சேர்ந்திருக்கும். இந்த நுட்பங்களைவிடவும், இளவயதில் அவர்களது இசை நிகழ்ச்சிகளில் வேறு சில விடயங்கள் அதிகம் பிடித்திருந்தன. மற்றெந்த தமிழ் இசைக்குழுவும், றம்பெட் வாத்தியத்தை பாவிக்காத வேளையில் இவர்களது இசை நிகழ்ச்சிகளில், அது இசைக்கப்படும். இசைக்குழுவின் கலைஞர்களனைவரும் சீருடையில் வருவார்கள். நிறையத் தாளவாத்தியங்கள் இருக்கும். கோணேஸ் மேடையில், இசைக்கோப்பினை ஒருவித அழகியலுடன் கட்டமைப்பார். பரமேஸின் பாடல் வரிகளும், குரலும் அற்புதமாவிருக்கும். இவை எல்லாவற்றுக்கும் மேலாக நல்ல ஒலித்தரம் இருக்கும்.

அன்று நாங்கள் பார்க்கச் சென்றிருந்த நிகழ்ச்சி, முதற்தடவையாக ஒரு ஆர்கெஸ்ட்ரா ஒழுங்கமைப்பில் வடிவமைக்கப்பட்டிருந்து. தெரிவு செய்யப்பட்ட பதினான்கு பாடல்களை மட்டுமே பாடுவதாகவும், சொல்லப்பட்டிருந்தது, எங்கள் எதிர்பார்ப்பை அதிகப்படுத்தியிருந்தது. அறிவித்தது போன்று குறித்த நேரத்தில் அரங்கின் திரைவிலக ஒரே ஆரவாரம். அனைத்துக்கலைஞர்களும் வெள்ளைநிற கோட்சூட் ஆடை அலங்காரத்துடன், முழு ஆர்கெஸ்டாரவும் நின்றது. இசை ஆரம்பமாகியது. நான்கு றம்பேட் வாத்தியக்கலைஞர்கள், எலெக்ட்றிக் கிட்டார், றம்செற், கீபோட் என , இருபத்திமூன்று கலைஞர்களுடன் மேடையில் தங்கள் திறமைகளை காண்பித்துக் கொண்டிருந்தார்கள். திரைப்படப்பாடல்கள், அவர்களது சொந்த இசையமைப்பில் வந்த பாடல்கள் என மாறிமாறி வந்தது.


அந்தக்காலப்பகுதியில் வந்த பிரபலமான தமிழ்திரைப்படப்பாடல்களில் ஒன்று "என் தேவனே உன்னிடம் ஒன்று கேட்பேன்.." பாடலுக்கு முன்னர் கிட்டார் இசை அருமையாக வரும், அதன்பின் மற்ற வாத்தியங்களும் பாடலும் வரும். அந்தப்பாடல் குறித்த அறிவிப்பு வந்து, கிட்டார் இசையும் தொடங்கிற்று. கிட்டார் இசை முடிய முன்னரே மற்றைய வாத்திய இசை வந்து விட்டது. உடனே இசைக்கட்டமைப்புச் செய்த கோணேஸ் இசையை நிறுத்தி, திரும்பவும் முதலில் இருந்து ஆரம்பித்தார். இரண்டாவது தடவை எல்லாம் சிறப்பாகச் சேர்ந்து கொண்டன. அந்தப்பாடல் முடிந்ததும், கைதட்டல்கள் இரட்டிப்பாக இருந்தன. தாங்கள் தெரிவு செய்த பாடல்களை மட்டுமே இசைக்கும் பொழுது, அதை முழுவதும் நிறைவாக ரசிகர்களுக்குக் கொடுக்க வேண்டும் என்பதே தங்கள் விருப்பம் என கோணேஸ் சொன்னபோது, ரசிகர்கள் மகிழ்ச்சி ஆரவாரம் செய்தார்கள். நிகழ்ச்சி முடிந்து நாங்கள் வெளியே வரும்போது , அடுத்த நிகழ்ச்சிக்காக ரசிகர்கள் வெளியே காத்திருந்தார்கள், இரண்டாவது காட்சிக்காக. ஆம் அன்று இரண்டாவது தடவையாகவும் , அந்நிகழ்ச்சி நடந்தது. நான் நினைக்கின்றேன், திருமலையில், ஒரு ஆர்க்கெஸ்ட்ரா, ஒரேநாளில் ஓரே மேடையில், இரு தடவைகள் நிகழ்ச்சி செய்தது, அதுவொன்றாகத்தான் இருக்கும்.

இவ்வளவு சிறப்புக்கள் பெற்றிருந்த அக்கலைஞர்களின் ஆரம்ப காலம் ஒன்றும் அவ்வளவு இனிமையாக இருந்ததில்லை. சிரமங்களைத் தோளில் சுமந்தவாறே, வெற்றிச்சிகரத்தின் உச்சிக்குச் சென்றார்கள். எங்கும் உள்ளது போல், இந்த இசை சகோதர்களினிடையேயும் பிரிவு வந்தது. சகோதரர்கள் பிரிந்துகொண்டபின், அவர்களது நிகழ்ச்சிகள் சிறப்பாகப் பேசப்படவில்லை. அதனாலேயே ஈழத்தின் மெல்லிசைப் போக்கில் ஒரு தேக்கம் ஏற்பட்டது என்னும் சொல்லலாம். இன்னும் என்னென்னவோ சாதித்திருக்க வேண்டிய சகோதரர்களின் இணைந்த இசைப்பயனம், இடையில் நின்று போனதென்னவோ சோகம்தான்...

ஆனால் இணைந்திருந்த காலங்களில் படைத்ததென்னவோ என்றும் இளமையாக இருக்கக் கூடிய இசைக்கோலங்கள்தான்.
இன்றும் இளமையாக இருக்கும் அந்தப்பாடல்களில் சில உங்களுக்காக.....





பாடல்களும், படமும்:-நன்றி! www.tamil.fm இணையத்தளம்

சல்லி அம்மனும் கடல் அம்மாவும்


திருகோணமலையிலிருந்து நிலாவெளி நோக்கி நீளும் கடற்கரையில், சாம்பல்தீவுக்குப் பக்கத்தில் அமைந்ததுதான் சல்லி. இதன் கடற்கரையில் அழகான ஒரு அம்மன் கோவில். இந்தக்கோவிலால் அந்த இடத்திற்கு சல்லி எனப்பெயர்வந்ததா? அல்லது அந்த இடத்தில் அமைந்ததால் சல்லி அம்மன் என கோவில் பெயர்பெற்றதா என்ற வரலாற்றுக குறிப்புக்கள் எதுவும் தெரியவில்லை. தெரிந்துகொள்ளும் ஆர்வமில்லாத வயதில் சல்லிஅம்மன்கோவில் எனக்கு அறிமுகமானது, இந்தத் தெரியாமைக்கு ஒரு காரணமாகவிருக்கலாம்.

வைகாசிமாதத்தில் வரும் பெளர்ணமியிலோ அல்லது அதை அண்டியோ சல்லி அம்மன் கோவில் பொங்கல் வரும். பொங்கலுக்குப் பத்து நாட்களுக்கு முன்னரே சல்லிக்கிராம கடற்றொழிலாளர்கள், தங்கள் தொழிற்படகுகளை கரையேற்றி விடுவார்கள். அந்த பத்து நாட்களும் அவர்கள் கடலுக்குச் செல்வதில்லை. அம்மன் கோவில் பூசை வழிபாடுகளோடு ஒன்றித்து விடுவார்கள். கடைசி மூன்றுநாளும் விசேடமென்றாலும், பத்தாம் நாள் பொங்கல்தான் பிரசித்தம்.

திருகோணமலை மத்திய பேருந்து நிலையத்திலிருந்து ஒவ்வொரு பதினைந்து நிமிடத்துக்கு ஒரு பேருந்து சல்லிஅம்மன்கோயிலுக்கு மக்களை அள்ளிச் செல்லும். அன்று மதியத்திலிருந்தே தொடங்கிய இந்த அள்ளல் அழைப்பு, நள்ளிரவு தாண்டியும் தொடரும். சல்லிக்கிராமத்தின் நுழைவிலேயே பேரூந்துகள் மறிக்கப்பட்டுவிடும். அங்கிருந்து கோவிலுக்குச் செல்லும் வழியெங்கும் தற்காலிக மின்விளக்குகளும், ஒலிபெருக்கி இணைப்பும் செய்யப்பட்டிருக்கும். யாழ்ப்பாணம் ஈச்சமோட்டை “ றீகல் சவுண்ட்ஸ் “ தனது நூற்றுக்குமதிகமான ஒலிபெருக்கிகுழல்களை, உயர்ந்த தென்னை மரங்களில் கட்டி, அந்தப்பிரதேசமெங்கும் ஒலியால் அதிரவைக்கும். அதன் குழல்களில் உள்ள இலக்கங்களை வைத்து இம்முறை எத்தினை குழல்கள் கட்டியுள்ளார்கள் என்பதை அறிவதில் எமக்கு ஒரு திருப்தி. கோவிலை நெருங்க நெருங்க திருவிழாக்கடைகள் பல இருக்கும். விளையாட்ப் பொருட்கள், அலங்காரப்பொருட்கள், ஆடைகள், கச்சான் கடலைக் கடைகள், குளிர்பாணக்கடைகள், என்பதுதான் வழமையான கடைகள். ஆனால் இங்கே வித்தியாமாக இன்னுமொரு கடையும் இருக்கும். அதுதான் புட்டுக்கடை. ஆம், தமிழகத்தில் பலாப்பழத்துக்கு, பண்டிருட்டி என்பது போல, திருகோணமலைப்பகுதியில் சாம்பல்தீவுப்பகுதி. மிகச்சுவையான பலாப்பழங்கள். இந்தப்பலாப்பழங்கள் காய்க்கும் காலமும் சல்லி அம்மன் கோவில் திருவிழாக்காலமும் ஏறக்குறைய ஒரே காலப்பகுதி என்பதால், சல்லி அம்மன் கோவில் திருவிழாக்கடைகளுள், பலாப்பழமும் புட்டும் சேர்த்து விற்பனைசெய்யும் கடைகளும் இருக்கும். ஓலைப்பெட்டிகளில்,இலேசான சூட்டில் உலிர்ந்த புட்டும் பலாப்பழமும், தருவார்கள். அந்த ஓலைப்பெட்டியிலிருந்தும், பலாப்பழத்திலிருந்தும், வரும் வாசனைகளின் கலவையில் புட்டுத் தனிச்சுவை தரும். சல்லிக்குப் போய் புட்டுச்சாப்பிடாமல் வந்தால், திருப்பதி போய் லட்டுச் சாப்பிடாமல் வந்தது போலாகிவிடும்.

கோயிலுக்குப் போனா கும்பிட வேணும், இதென்ன புட்டுச் சாப்பிட்டுக்கொண்டு.. என்டு ஆர் புறுபுறுக்கிறது. கொஞ்சம் பொறுங்கோவன்...அப்பிடியே பராக்குப் பார்த்துக் கொண்டு நடந்தால் கோயில் வரும். கோயிலொன்டும் பெரிய கோயிலல்ல. அது ஒரு ஆகமவழிபாட்டுக் கோயிலுமல்ல. அந்தப்பிரதேசத்தில் வாழும் கடற்தொழிலாளர்களின் நம்பிக்கைத் தெய்வம் சல்லி அம்மன். அதீதமான நம்பிக்கையும், வைராக்கியமான பக்தியும் கொண்ட கடற்தொழிலாளர்கள், தினசரி தொழிலுக்குப் புறப்படும் போது கற்பூரம் ஏற்றிக் கும்பிட்டுவிட்டுச் செல்வார்கள். மறுநாள் காலை தொழில் முடித்துக் கடலால் வந்ததும், தாங்கள் பிடித்த மீன்களில் ஒரு பகுதியை அம்மனுக்குக் காணிக்ககையாக கோவில் முன் உள்ள தொட்டியில் இட்டுவிடுவார்களாம். அப்படிச் சேரும் மீன்களை விற்ற வருமானத்திலேயே சல்லி அம்மனின் நித்திய வாழ்வு. ஆனால் பொங்கலும், பொங்கலுக்கு முந்தைய நாட்களும், அப்பிரதேச மக்களுக்கு மிக முக்கிய தினங்கள். பொங்கல் தினத்தன்று திருகோணமலைச்சுற்றுவட்டாரமே சல்லிக்குத் திரண்டு வரும்.

கோயிலுக்கு முன்னால் பத்துமீற்றர் தூரத்துக்குள், கடலன்னை மெதுவாக அலை அசைப்பாள். கரையில் சல்லிக்கிராமக் கடற்றொழிலளர்களின், படகுகளோடு, வேறுசில படகுகள் இழுத்துக் கட்டப்பட்டிருக்கும். அவை வல்வெட்டித்துறை,பருத்தித்துறை, முல்லைத்தீவுப் பிரதேசங்களில் இருந்து வந்த கடற்தொழிலாளர்களின் படகுகள். தொழில்தொடர்புகள், உறவுநிலைத் தொடர்புகள் வழி, அவர்களும் சல்லிஅம்மன் பொங்கலுக்கு வருவார்கள். இவர்களையெல்லாம் விட, பொங்கலன்று அவர்களின் நம்பிக்கைத் தெய்வம், கடலாக வருவாளாம். இதுபற்றி எனக்கு முதலில் ஆர்வமிருக்கவில்லை.

முதன்முறை சல்லி அம்மன் கோவிலுக்குச் சென்றபோது, அந்தகடற்கரை முழுக்க நண்பர்களோடு அலைந்துவிட்டு, இரண்டு மூன்று தடவை புட்டுச்சாப்பிட்டுவிட்டுக் களைத்துப்போய் கடற்கரை மணலில் இருந்தவர்கள் அப்படியே உறங்கிவிட்டோம். திடீரென நாங்கள் உறங்கிக் கொண்டிருந்த இடமெல்லாம், கடல்நீர் சிறு அலையாய் வந்து போனது. தூக்கத்திலிருந்தவர்கள், பேசிக்கொண்டிருந்தவர்கள், எல்லோரும் நனைந்துவிட்டார்கள். ஆனால் கோவில் பகுதியில், ஒருவித ஆர்பரிப்புத் தெரிந்தது. பறைகள் அதிர்ந்தன. அப்போதூன் சொன்னார்கள், பொங்கல்பானை பொங்கித்தள்ள கடலம்மன் வந்து வாங்கிச் சென்றாவென்று. இது அங்குள்ள ஒரு வழமையாம். இதைக் கேட்ட மாத்திரத்தில் எமக்கு ஏற்றுக்கொள்ள முடியவில்லை. எங்கள் பகுத்தறிவு விடவில்லை. அடுத்த வருடம் அந்தத்தருணத்தை அக்கறையாக எதிர்கொண்டோம். அது நடந்தது. ஆச்சரியப்பட்டோம். அதற்கடுத்த வருடம் கோவிலுக்குக் கிட்டவாக நின்றெ பார்த்தோம். என்ன ஆச்சரியம், பொங்கல் பொங்கித்தள்ளும் அந்தத்தருணத்தில், அலையடித்து, பொங்கல் பானைவரை வந்து சென்றது.
இது எப்படி நடந்நது என இன்றுவரை எனக்குப் புரியவில்லை. சிலசமயங்களில் கடல் பொங்கிவருவது இயல்புதானென்றாலும், எப்படி அந்த பொங்கல் பானை பொங்கும் தருணத்தில் எழுந்து வந்தது. அந்தத் தொடர்பை ஏற்படுத்தியது யார்? அல்லது எது? தங்கள் அன்னையென நம்பும் கடற்தொழிலாளர்களின் நம்பிக்கையா? அல்லது வேறெதுவமா? அது எப்படிச் சரியாக அந்தத் தருணத்தில் மட்டும் அலையெழுந்து வருகிறது? கேட்பதற்கு ஆச்சரியமாகவிருப்பினும், நான் பார்த்த மூன்று தடவைகளிலும், இந்த நிகழ்வில் மாற்றமேதும் இருக்கவில்லை. அதன்பின்னர்தான் கடற்தொழிலாளர்களுக்கும் கடலுக்குமிடையிலான உறவை, நேசத்தை, பக்தியை சற்று உற்று நோக்கினேன். அது வித்தியாசமாகவே இருந்தது. மற்றவர்களால் இலகுவில் புரிந்து கொள்ள முடியாததாகவிருந்தது. பின் இந்தியாவிற்கு பயிற்சிக்காக சென்று வந்த போராளிகள், கடலோடிகளின் இறுக்கமான சில பழக்கவழக்கங்களைச் சொன்னபோது, அந்த உறவின் தாத்பரியம், கடல்மீதான அவர்களது நம்பிக்கைகள், மேலும், புரிந்து கொள்ள முடியாத புதிராகவே இருந்து.

இதை சென்றவருடத்திலேயே சொல்ல நினைத்திருந்த போதும், நம்பிக்கையீனத்தைத் தந்துவிடுமோ எனும் காரணத்தால், எழுதாமல் இருந்துவிட்டேன். சென்றவாரத்தில் தமிழ்நதியின் பதிவொன்றில், வசந்தன் இட்ட பின்னூட்டத்தில் கடல்பற்றிக் குறிப்பிட்டிருந்தது, இது பற்றி எழுதத்தூண்டியது. ஆனாலும் எனக்கு இவையெல்லாம் கடந்து, சல்லி என்றால் இனிப்பாய் நினைப்பது, புட்டும் பலாப்பழமும், அதைவிரும்பிய வரைக்கும் தந்து மகிழ்ந்த பள்ளித்தோழிகளும், அவர்களது பாசமிகு பெற்றோர்களும்தான்.


கல்யாணமும் முள்முருக்கும்.


நாங்கள் பெண்பார்க்கப்போவதில்லை எனச் சயந்தன் தொடங்க, வசந்தன் தொடர, சில ஊர்வழக்குகளும், தமிழகம், ஈழம் சார்ந்த ஒப்பீட்டுப்பார்வைகளும் வந்திருந்தன. பழம்பெரும் பதிவர்கள் வரிசையில் என்னையும் சேர்த்திருக்கேக்க, நானும் நாலுவரி சொல்லாட்டி மரியாதையில்லை என்டு எழுதத் தொடஙகினா அது நீண்டு போயிட்டு. பேசாம வசந்தன்ர பாணியில பதிவாப்போட்டிட வேண்டியதுதான் என்டு போட்டாச்சு. சயந்தனுக்குப் பின்னூட்டமும் போட்டாச்சு.

யாழ்ப்பாணத்துப் பெண்பார்க்கும் படலம் பற்றி விரிவாக்கதைச்சிருக்கினம். வசந்தனும் அதை நேரிலபார்த்து, அனுபவிச்சு எழுதியிருக்கிறார் ஆனாபடியால அதைவிடுவம். உந்த முருங்கை மரம் நல்லா உலைச்சிருக்குப் போல கிடக்கு ஆனாபடியால அதில இருந்து தொடங்குவம். ஆனால் ஏன் பின்நவீனத்துவமா யோசிச்சு, கல்யாணம் செய்த மாப்பிள்ளைய அரட்டி வைக்கிறதுக்காக நடுகிறதென்டு கண்டுபிடிக்கேல்ல.:) கலியாணத்துக்குப் பிறகு விளையாட்டுக்காட்டினா, மவனே முள்முருக்கில கட்டிவைச்சுத்தான் பூசை என்டிறத, சிலேடையாகச் சொல்லிச்சினமோ தெரியேல்ல..:)

கானா.பிரபா சொன்ன தேவேந்திரனுக்கு இட்ட சாபக்கதைதான் சாத்திரரீதியானகதை. ஆனால் அது கல்யாணவீட்டில் அரசாணி மரமாக வைக்கப்படும் முருங்கைக்குத்தான் பொருத்தமாக இருக்கும். ஏனெனில் அம்மி மிதித்து, அருந்ததிபார்த்து, அரசாணிசுற்றி என நீளும் சடங்கு அது.
அதற்குப் பாவிப்பது முள்முருக்கு அல்ல. கல்யாண முருங்கை. முள்முருக்குப் போன்றதுதான். ஆனால் முள்ளுக் குறைவு. இலைகளில் மஞ்சள் வண்ணத்தில், நரம்புகளும் நடுப்பகுதியும் காணப்படும். மாப்பிளையும் பெண்ணும் இணைந்திருப்பதற்கான அடையாளமாக அது சொல்லப்படும். ஆனால் அது கிடைப்பது அரிதாக இருந்ததால் அதற்குப் பதிலாக முள்முருக்கு அந்த இடத்தைப் பிடித்துக்கொண்டது.

வீட்டில் கல்யாணத்துக்கு முன்னர் நடப்படும் முள்முருக்கையை இந்தச் சாத்திரக்தைக்குள் சேர்த்துக் கொள்ள முடியாது. இது ஒரு சமுக வழக்கென்றுதான் செர்லல வேணும். இதைக் கன்னிக்கால் பேர்டுதல், பந்தல்கால் நடல் எனச் சொல்வது வழக்கம். தமிழகத்துக் கிராமத்திருவிழாவில் கொடிமரம் நடுவதாக உயரிய மரமொன்றை நடுகிறார்களே. ஏறக்குறைய அதே போன்றதுதான் இவ்வழக்கம். பந்தல் கால் போட்டுவிட்டால், கல்யயணவீட்டு வேலைகள் களைகட்டத் தொடங்கிவிடும் கோபதாபங்களுக்குள்ளாகியிருந் உறவுகள் கூட, ஒன்றுபடத் தொடங்கிவிடும். அதற்கு முருங்கை மரத்தை தெரிவு செய்தது
வேண்டுமாயின் , இந்திரன் கதையின் நீட்சியாகவோ அல்லது பழக்கமாகவோ இருக்கலாம். ஆனால் சூழலின் தன்மையோடு ஒப்பிட்டுப்பார்த்தால், யாழ்ப்பாணப்பிரதேசத்தில் மிக எளிதில் வளரும் மரங்களில் இது ஒன்றாக உள்ளது. மேலும், அதன் பாகத்தில் முட்கள் நிறைந்திருப்பதனால், வீட்டுவளர்ப்புப்பிராணிகளான ஆடு மாடு என்பவற்றில் இருந்து காப்பாற்றப்படுகிறது. அதனால் பிள்ளையின் கல்யாண நினைவு முன்னிறுத்தி நடுவதற்காக இந்த மரத்தைத் தெரிவு செய்திருக்கலாம். வசந்தன் கேட்டது போன்று, அப்படி நடப்படும் மரத்தின் வளர்ச்சியை வைத்துச் சகுனம் பார்க்கும் பழக்கமும் சில இடங்களில் இருந்தது. ஆதலால் அதற்கும் இது ஏற்புடையதாக இருக்கும். எனக்குத் தெரிந்த ஒருவருக்கு ஆறு பெண்பிள்ளைகள். அவர்களுடைய வீட்டு முன்றலில், ஆறு முள்முருக்கு மரமும் வரிசைக்கு, நன்றாகச் செழித்து வளர்ந்து நிற்கும். ஆட்டுக்குக் கூட அதில் குழை ஒடிக்க மாட்டார்கள். ஆனால் பெண்கள்வீட்டில்தான் இவ்வளவு கவனம் எடுப்பதாக நினைக்கின்றேன். மாப்பிள்ளைவீடுகளில் அவ்வளவு முக்கியத்துவம் தருவதாக இல்லை என்றே நினைக்கின்றேன். ஆனால் இரு வீடுகளிலும் நடப்படும். எனக்கென்னவோ இந்தப்பழக்கம், இந்தியப்பரப்பிலிருந்து வந்ததுபோல்தான் படுகிறது.

கால்மாறிப்போவது பற்றியும் யாரோ கேட்டிருந்தார்கள். பெண்வீட்டில் கல்யாணவீடு நடைபெற்று முடிந்ததும், மாப்பிள்ளைவீட்டுக்கு மணமக்கள் சென்று திரும்புதலைத்தான் கால் மாறிச் செல்வது என்று குறிப்பிடுவார்கள். ஈழத்தின் வடபுலக் கல்யாணவீடுகளில்தான் இந்த அமர்க்களம் எல்லாம். வன்னியிலோ, கிழக்கிலோ, இந்த வழக்குகளெல்லாம் இருக்கவில்லை என்றே நினைக்கின்றேன்.

கிழக்கில் வாழ்ந்த யாழ்ப்பாண்தார் வீட்டுக் கல்யாணங்கள் அப்படி நடந்திருக்கலாம், மற்றும்படி எல்லாம் சுயமரியாதைத்திருமணங்கள் போன்றதே. இதைப் பேச்சுவழக்கில் சோறு குடுத்தல் என்று சொல்வார்கள். மாப்பிள்ளை, பெண்ணுக்குப் புது உடுபுடவைகள், தாலிகட்டல் எல்லாம் இருக்கும். சிலவேளை கோவில்களில் பூசைநேரங்களிலும், பலவேளைகளில் வீடுகளிலும், குறிப்பாக மாலைகளிலும் நடைபெறும். தாலிகட்டி முடிந்து, மாப்பிள்ளைக்கு பெண் உணவு பரிமாறி, சேர்ந்து உண்பதில் நிறைவுறும். இக்கொண்டாட்டங்களில் முக்கிய இடம்பெறும் இரு விடயம், வெடிகொழுத்தலும், குடிவகை பாவிப்பதும். இவையில்லாத கல்யாணங்கள் களைகட்டாது. பின்னாட்களில் ஒலிபெருக்கியும் இணைந்து கொண்டது. இவ்வளவுதான் தற்போதைக்கு எழுத முடிந்தது. யாரும் வினாத் தொடுத்தால் விடையில் மற்றவற்றைத் தர முனைகின்றேன்.

இன்று மகளிர்தினம். இத்தினத்தில் இத்தாலியர்கள், பெண்களுக்குப் பரிசாக வழங்கும் பூவின் பெயர் Mimose மிமோசே. அதுதான் பதிவின் முதலில் உள்ள படம். இதற்கான சிறப்புக்காரணம் ஏதும் உண்டா எனத்தெரிந்த இத்தாலியபெண்களிடம் விசாரித்தேன். யாரும் சரியான காரணம் தெரியவில்லை என்றார்கள். யாருக்காவது இதன் காரணம் தெரியுமா? ஐரோப்பா எங்கனும் இப்பழக்கம் உண்டா? அல்லது இத்தாலியர்கள் மட்டும்தானா? தெரிந்தவர்கள் வந்து சொல்லுங்களேன்...

தோழியரே உங்கள் குரல்களை உயர்த்திச்சொல்ல இன்னும் ஒரு தினம். வாழ்த்துக்கள்!

பாலையூற்று

மணம் முடித்து மகிழ்வாகக் கழிந்த ஓராண்டில், மனம் ஓப்பிய வாழ்க்கைகுப் பரிசாக ஒரு குழந்தை. எதிர்காலம் நோக்கிய தேடலில், மணாளன் திரைகடலோடப் புறப்படுகின்றான். அவன் போன பொழுதுகளில், உறைநிலத்தில் போர் வெடிக்கிறது. போரின் வெம்மையால் யாவரும் இடம் பெயர்கிறார்கள். ஆனால் அந்தப் பெண் மட்டும், முகவரியைத் தான் தொலைத்தால், கடல்கடந்த கண்ணாளன் தொடர்பு கொள்ள முடியாது போய்விடுமே எனக் காத்திருக்கின்றாள்.

கடல் கடந்து சென்ற கணவன், தான் புறப்பட்ட பொழுதுகளில் போர் வெடித்ததையும், மக்கள் இடம்பெயர்ந்ததையும் செய்தியாக அறிகின்றான். செய்வதறியாது தவிக்கின்றான். அவளும் பிள்ளையும் இருக்கின்றார்களா? இறந்துவிட்டார்களா? இடம்பெயர்ந்துவிட்டார்களா? எதுவும் தெரியாமல், திணறுகின்றான். தொடர்புகொள்ள வழியேதும் கிடைக்கவில்லை. காத்திருப்பும் தேடலும் தொடர்கிறது. காலம் கழிகின்றது. ஒரு நாளல்ல இருநாளல்ல, ஒன்றல்ல, ஒன்பதல்ல. பதினைந்து வருடங்கள்.

நாட்டில் ஏற்பட்ட தற்காலிக சமாதானம் தந்த தைரியத்தில், தாய் நாட்டிற்குத் திரும்பி வரும் அவன், தாரத்தையும், தன்வாரிசையும், கண்டுகொள்கின்றான். கட்டியணைத்துக்கொள்கின்றான். கொண்டவள் குமுறுகின்றாள், குழந்தையாய் விட்டுச்சென்ற பிள்ளை, இளைஞனாய் எட்ட நிற்கின்றான்.

கேட்கக் கேட்க, என் கண்களில் கண்ணீர் தாரை தாரையாக வழிகிறது. என்ன கேட்டக்க கேட்டகவா என்கிறீர்களா?. ஆம் அப்படித்தான். ஏனெனில் இந்தக்கதை ஏதோ சினிமாவில் பார்த்ததல்ல, பத்திரிகையில் படித்ததல்ல. கதையும், கதைமாந்தர்களும், களமும் கூட, கற்பனையல்ல. இவ்வளவும் உண்மை. என் தேசத்தில், நானிழந்த மருதத்தில், என்னோடு படித்த என் பள்ளித் தோழியின் வாழ்க்கைச்சோகமிது. சென்று, பார்த்து, வந்து சொன்னவன் என் சக நண்பன். சொன்னவனும் அழுதான், கேட்டவனும் அழுதேன். இருக்காத பின்ன..

இருபத்தைந்து ஆண்டுகளுக்கு முன், மறுநாள் பண்டதரிப்பு பஸ்நிலையத்தில் சந்திப்பதாகச் சொல்லிப் பிரிந்திருந்தோம். அந்த மறுநாள், இருபத்தைந்து ஆண்டுகளின் பின், புலத்தில் தொலைபேசி வழியாக சென்ற வாரத்தில் வந்தது. தொலைபேசியைக் கண்டுபிடித்த கிரகாம் பெல் லுக்கு நன்றி.

இரவு ஒன்பது மணிக்குத் தொடங்கிய உரையாடல் அதிகாலை நான்கு மணிவரை நீண்டது. தொடக்கத்தில் ஆச்சரியமாகப் பார்த்துக் கொண்டிருந்த மனைவியும், பிள்ளைகளும், தூக்கக் கலக்கத்தில் எழுந்து சென்றுவிடவும் , எங்கள் கதை, வெளிநாட்டு, வேகவீதியென நீண்டு விரிந்தது.

சென்ற சில வருடத்தின் முன், தாயகம் சென்ற நினைவுகளையும் மீட்டியபடியே, ஒவ்வொன்றாக, ஒவ்வொன்றாக, பலதும் சொன்னான். எத்தனை நினைவுகள்... எததனை நினைவுகள். பதினைந்து ஆண்டுகள் காத்திருந்து கணவனைக் கண்டுகொண்ட தோழி, பதினெட்டாண்டுகளாகியும், கைதான கணவன் வராத சோகத்தை, மறைத்தபடி வாழும் மற்றொரு சகோதரி. மணவாழ்க்கை துவண்டு மரித்துக்கொண்ட நண்பன், திசைமாறிப்போன மற்றுமொரு நண்பன், என எத்தனை கதைகள். அத்தனை மணிகளிலும் சோகம், சுகம், ஆச்சரியம், என எத்தனை அனுபவிப்புக்கள்.எல்லாவற்றிலும் நிரம்பிய சோகமாய் என்னை வருத்தியது, இன்னமும் வருத்துவது, பாலையூற்றுக்குப் போனாயா எனக் கேட்ட போது, அவன் சொன்னது.

பாலையூற்று என்ற அழகிய கிராமத்தில், சின்னஞ்சிறியதாய் ஒரு கிறீஸ்தவ தேவாலயம். அழகான அச்சூழலில், பின்புறத்தே கல்வாரி மலைக்காட்சி கவித்துமாய் காட்சிதரும். நான் கிறிஸ்தவனாக இல்லாத போதும், அந்த ஆலயமும், சூழலும், என்னுள் நிறைந்துபோயிருந்தது. போகும் வேளையெல்லாம் அந்தப்புற்தரையில் புரண்டு மகிழ்ந்திருக்கின்றோம். பாடிப்பரவசப்பட்டிருக்கின்றோம். உரையாடி உளம் மகிழ்ந்திருக்கின்றோம்.

சோலையென இருந்த அந்தச் சூழலிலே, காடளந்து வரும் இனிய காற்றினிலே, எமை மறந்து நண்பர்கள் நாம் இருந்து மகிழ்ந்த அந்த நிலத்தினிலே, போர் மூண்ட இதுவரை காலத்திலும், ஒன்றாக, இரண்டாக, நானுறுபேரை வெட்டிச் சாய்திருக்கிறார்கள். ஆண், பெண், இளைஞன், யுவதி, குஞ்சு, குருமான், என்ற பேதம் எதுவுமில்லாது கொன்றிருக்கின்றார்கள். அத்தனை பேரும் தமிழர்கள் ....

நண்பர்களாய் நாம் நடந்து திரிந்த இடங்களையெல்லாம், நினைவுகள் சுமந்து திரிந்திருக்கின்றான். வேவுக் கண்களும், காவுக்கருவிகளும், கண்காணித்த போதும், ஏதோ ஒருவித வேகத்திலே, எல்லாவிடமும் பயணித்திருக்கிறான். பயணப்பின் வழிபோதலில், பாலையூற்றும் வந்தபோது, பயங்கரம் தரும் இக்கதைகளைக் கேள்விப்பட்டிருக்கின்றான். தெரிந்தவர், தெரியாதவர் எனப் பலரும், அழிந்துபோன அவ்விடத்தில், முன்னைய பசுமையைக் காணமுடியுமா என எண்ணியபடியே, ஏக்கமுடன் திரும்பி விட்டானாம். காடளந்துவரும் காற்றில், குருதியின் வாடை குமட்டுமே என்று திரும்பிவிட்டானாம்.

பாவிகளே! பாலையூற்று என்ற அந்தப் பசும்பூமியை, எழிலோடு, என் பிள்ளைக்குக் காட்ட இயலாது செய்துவிட்டீர்களே......

இவ்வார வானொலி நிகழ்ச்சி

நண்பர்களே !

இணையத்தில் இன்பத்தமிழ் எனும் பெயரில், ஐரோப்பியத்தமிழ்வானொலியில் ஒலிபரப்பாகிய இவ்வார நிகழ்ச்சியினைக் கேட்க இங்கே

வாருங்கள்.
நன்றி!

Photobucket - Video and Image Hosting




சென்ற வாரத்தில் ஒரு நாள் , தொலைக்காட்சி நிகழ்ச்சியொன்றில் பேராசிரியர் ஞானசம்பந்தன் அவர்கள் பாலைப்பழம்பற்றிக்குறிப்பிட்டார். சங்ககாலத்தையப் பாடல்கள் முதற்கொண்டு, சாமிநாத ஐயர்வரை, தொடர்புபடுத்தி அழகாகச் சொன்னார். அப்படி அவர் சொல்லிய அந்தச் சொல்லழகு ரசிக்கத்தக்கதாக இருந்தபோதும், பாலைப்பழம் குறித்து அவர் சொன்ன தகவல்தான் சற்றுக் குழப்பமாவுள்ளது.
பாலைநிலத்தில் உள்ள ஒரு மரத்திலிருந்து பெறப்படும் பழமிது. அதனால்தான் அதற்குப் பாலைப்பழம் எனும் பெயர் வந்ததாகச் சொன்னார். ஆனால், இந்தப்பழத்தினை திருகோணமலையில் கோடைகாலத்தில், வீதிஓரப் பழக்கடைகளிலும், சந்தைகளிலும் வாங்கக் கூடியதாகவிருக்கும். பார்வைக்கு, வேப்பங்காயைவிடச் சற்றுப் பெரிதாக, இளமஞ்சள் நிறத்திலிருக்கும். இனிப்பென்றால், அப்படியொரு இனிப்பு. உள்ளே பால்போன்ற திரவம் இருக்கும். அதனாலே அதனைப் பாலைப்ழம் என்று அழைப்பதாகச் சொல்வார்கள். பாலைப்பழத்தை சற்று அதிகமாகச் சாப்பிட்டால், உதடுகள் ஒட்டத் தொடங்கிவிடும். பாலைப்பழத்தை வைத்திருக்கும் பெட்டிகள், கூடைகள் கூட ஒட்டிக்கொண்டிருக்கும். பழம் மட்டுமே சுவையாக இருக்கும்.
திருகோணமலைக் காடுகளிலிருந்து இப்பாலைப்பழம் சேகரிக்கப்பட்டுச் சந்தைக்கு வரும். இந்தப்பாலைப்பழத்தைத் தரும் மரத்திலேயிருந்து நேரடியாகப் பறித்துச் சாப்பிட்டவன் நான். அதனால்தான் பாலைப்பழம் பாலைவனத்து மரமொன்றிலிருந்து பெறப்படுவது எனச் சொல்லும்போது, என்னால் ஏற்றுக் கொள்ளமுடியாமல் இருந்தது. ஏனெனில் அந்த மரம் அடர்ந்த காட்டுப்பிரதேசத்து மரம். மிக உயரமாகவும், வைரம்பாய்ந்ததாகவும், வளரக் கூடியது. அப்படிப்பார்த்தால் அது முல்லைநிலத்துக்குச் சொந்தமாக இருக்க வேண்டும். அப்படியென்றால், பாலைப்பழம் என்று வேறு பழங்களேதும் உண்டா.? பாலை நிலத்தில் பேரீந்து தவிர வேறு சுவையான பழங்கள் கிடைக்கின்றனவா? தெரியவில்லை. நண்பர்கள் தெரிந்திருந்தால் சற்றுச் சொல்லுங்கள் கேட்போம்.

சரி, சரி. பாலைமரம்பற்றிக் கதைக்கத் தொடங்கியதில் வேறு சில மரங்கள் பற்றிய நினைவுகளும் வந்தன. அவைபற்றியும் சற்றுப் பார்ப்போம். ஏறக்குறைய பாலைப்பழம் கிடைக்கும் காலங்களில் கிடைக்கும் மற்றுமொரு பழம், வீரப்பழம். இது சற்று உருண்டை வடிவிலிருக்கும். சிகப்பு நிறம். சாடையான புளிப்புத்தன்மையும் இருக்கும். சாப்பிட்டால் பற்களில் காவி படியும். ஆனால் இந்த இரு பழங்களையும் தரும் மரங்களான பாலைமரமும், வீரை மரமும். நல்ல வைரமான மரங்கள். பாலைமரக்குத்தி வீடுகளுக்கு கப்பாகவும்( தூணாகவும்), வளையாகவும், பாவிக்கப்படும். வீரை மரம் வைரமான மரமாயிருப்பினும், அதன் உள்ளமைப்பு, நார்த்தன்மையானதால், அநேகமாக உதிரி உபயோகங்களுக்கும், வேலிக்கு கம்பிக்கட்டையாகவும், விறகுக்குமே பாவிப்பார்கள். வீரைமரம் பெயருக்கேற்ற மாதிரித்தான் இருக்கும். காய்ந்த வீரைமரங்களில் ஆணி அடிப்தே சிரமம்மென்றால், அந்த மரத்தின் வைரத்தை ஊகித்துக் கொள்ளுங்களேன். இந்த மரங்களின் சுவையான பழங்களுக்குப் பிரியமானவர்கள் மனிதர்கள் மட்டுமல்ல. யானையும், கரடியும், மிகவும் ருசித்துச் சாப்பிடும்.

எங்கள் நண்பர் வட்டம் இப்பழங்களைச் ச்ந்தையிலோ தெருவிலோ வாங்குவதில்லை. நேரடியாகக் காட்டுக்குள்ளிருந்து எடுத்து வருவோம். ஒரு தடவை காட்டுக்குள் போனால், எங்கள் வீடுகளுக்கும், சுற்று வட்ட வீடுகளுக்கும் தேவையானளவு கொண்டு வருவோம். காட்டுக்குள்ளே போய் எந்த மரத்தின் பழம் அதிக சுவை என்பதை அறியவும் ஒரு உத்தி இருக்கிறது. எந்த மரத்துக்குக் கீழே யானையின் விட்டைக் கழிவோ அல்லது கரடிகள் சுவைத்துத் துப்பிய எச்சங்களை வைத்தும், அந்த மரத்தின் பழங்கள் அதிக சுவையாக இருக்மெனத் தீர்மானித்துக் கொள்வோம்.

இருவர் மரத்திலேறி, ஒருவர் கொப்புக்களை வெட்டிவிட, மற்றவர் யானை அல்லது கரடி ஏதும் வருகிறதா எனப் பார்த்துக் கொள்வார். கீழேநிற்பவர்கள் விழுந்த கொப்புக்களில் உள்ள பழங்களைச் சேகரிப்பார்கள். பாலைப்பழமும், வீரைப்பழமும், தந்த சுவையென்பது மறக்கமுடியாதது. அந்த மரங்களையும், அவற்றுடன் இணைந்த நினைவுகளையும்தான்...

பொங்கலும் போர்த்தேங்காயும்.


ஈழத்தில் எங்கள் பொங்கலின் முதற்பகுதியை வாசித்துவிட்டுத் தொடருங்கள்.

தென் தமிழீழக் கிராமத்துப் பொங்கல்.

பொங்கலுக்கு சில தினங்களுக்கு முன்னரே வீட்டின் முன், ஆற்றுநீர் அடித்துக் கரைசேர்த்த வெள்ளைக்குருமணல் வண்டில்களில் ஏற்றி வந்து பறிக்கப்படும். வடபகுதியில் முற்றங்களை சாணகத்தால் மெழுகி, கோலம்போட்டு பொங்குமிடத்தை தயார் செய்வார்கள். ஆனால் தென் தமிழீழத்தில் இந்தக் குருமணலினைக் கொண்டு சிறிய மேடையொன்று அமைத்து, அதிலே கோலம் போட்டு, சுற்றிவரத் தோரணம் கட்டி அழகு செய்வார்கள். பொங்கல் பானைகள் பெரும்பாலும் மண்பாணைகளாகவே இருக்கும். மண்பானையில் பொங்கல் செய்வதென்பது, சுவையை மிகுதியாக்கும். ஆயினும் அதிலே பொங்குவது சற்று நுட்பமான காரியம்தான். பொங்கல், படையல் எல்லாம் ஏறக்குறைய வடபகுதிபோலவே இருக்கும்.

காலையில் படையலும் வழிபாடுமாக இருக்கும் பொங்கல் கொண்டாட்டங்கள் மதியப்பொழுதுகளில் வேறுவகை மனமகிழ்வுக் கொண்டாட்டங்களாக மாறிவிடும். சின்ன வயதில் அம்மா மதியத்துக்குப் பிறகு வெளியில் போகவிடமாட்டா. போட்டிகளும், விளையாட்டுக்களும், நடைபெறுமிடங்களில், போதையும் இருக்கும். அதனால் சண்டைகள் வந்துவிடும் என்கின்ற பயம்தான். ஆனால் எனக்கு அந்த வேளைகளில் நடைபெறும் போட்டிகளைப் பார்க்க மிகுந்த ஆசை. அதிலும் போர்த் தேங்காய் அடித்தல் என்றொரு விளையாட்டு மிகவும் பிடிக்கும். இந்த விளையாட்டைப்பற்றி நீங்கள் கேள்விப் பட்டிருக்கின்றீர்களோ தெரியாது. மிகுந்த சுவாரசியமான விளையாட்டு அது.

சற்றேறக்குறைய கிறினைட் எனும் கைக்குண்டளவில்,( பாருங்கள் கைக்குண்டு எங்கள் தலைமுறைக்கு எவ்வளவு பரிச்சமாகப் போய்விட்டது) இருக்கும் சிறிய வகைத் தேங்காய் அது. யாழ்ப்பாணப் பக்கம் நாள்தேங்காய் மரமென சில மரத்தினைத் தெரிவு செய்து, அதன் தேங்காய்களை கோவில் தேவைகளுக்கும், மங்கள வைபவங்களும் பாவிப்பார்கள். அதுபோல் போர்த் தேங்காய் மரங்களும் தெரிவு செய்து பாவிக்கப்படும். இந்தத் தேங்காய்களின் மேலோடாகிய சிரட்டை(கொட்டாங்குச்சி) மிகவும் தடிப்பானது.

போர்த்தேங்காய் விளையாட்டில் ஒரே சமயத்தில், இருவர் ஈடுபடுவார்கள். தமிழகத்துக் கிராமங்களில் நடைபெறும் சேவற்சண்டைகளுக்கு இணையான சுவாரசியத்துடன் இவ்விளையாட்டு நடைபெறும். முதலில் ஒருவர் தன்தேங்காயை நிலத்தில் குத்தி நிறுத்துவார். மற்றவர் அதன் மேல் தன் தேங்காயைக்கொண்டு அடிப்பார். வைத்த தேங்காய் உடையாவிட்டால், முறைமாறி அடித்ததேங்காய் அடிவாங்கத்தயாராகும். சிலவேளைகளில் சிரடடைகள் வெடித்துச் சிதறுவதனால், போட்டியாளர்களின் முகம் கைகள் மட்டுமல்ல, பார்வையாளர்களது உறுப்புக்களும் ஊறுபடுவதுண்டு. போட்டியில் பணப்பந்தயம் முதல் தண்ணிப்பந்தயம் வரை இருக்கும். பல தேங்காய்களை சிதறடித்த தேங்காயை வைத்திருக்கும் நபர் அன்றைய பொழுதில் கதாநாயகன்தான். ஏனென்றால் அவர் எங்கெங்கு போட்டிக்குச் செல்கின்றாரோ, அங்கெல்லாம் அவர் பின்னே ஒரு கூட்டம் வேடிக்கை பார்க்கச் செல்லும். அவரும் ராசநடை நடந்து செல்வார்.

மாட்டுப்பொங்கல், பட்டிப்பொங்கலாக நடைபெறுவதும் இங்குதான் சிறப்பாக இருக்கும். தைப்பொங்கலின் மறுநாள் காலைமுதலே பட்டிகள் களைகட்டத் தொடங்கிவிடும். எருதுகளின் கொம்புகள் அழகாகச்சீவப்பட்டு வர்ணம் தீட்டப்படும். பசுக்கள் குளிக்கவார்க்கப்பட்டு, கழுத்தைச் சுற்றி மாலை அலங்காரங்கள் செய்யப்படும். . எருமையினப்பசுக்கள் நீராட்டபடுவதோடு சரி. பெரும்பாலும் நெற்றியில் ஒரு சந்தனப்பொட்டுடன் சமாதானம் கண்டுவிடும். ஏன் எனும் கேள்ளவி என்னுள் எழும்போதெல்லாம், என்னைப்போல் கறுப்பு என்பதாலோ அல்லது சோம்பேறித்தனமாக இருப்பதாலோதான் அவை பெரிதாகக் கவனிக்கப்படுவதில்லை போலும் எனச் சமாதானம் கண்டுகொள்வேன். வடபகுதி போலல்லாது, காலையிலேயே பட்டிப்பொங்கல் நடைபெறும்.

பொங்கல் முடித்துப் படைத்த பின் பட்டிகள் திறக்கப்படும் அந்த்ததருணங்களுக்கான ஆயத்தங்கள் சில தினங்களுக்கு முன்னமே சிறுவர்களாகவிருந்த எங்கள் மத்தியில் ஆரம்பமாகிவிடும். நீளமான தடிகளில் கொழுவி ( வேனாம் வில்லங்கம்) கொழுக்கி போன்றதொரு கம்பியை வைத்துக் கட்டி, ஒரு தற்காலிக ஆயுதம் தயார் செய்து மறைத்து வைத்திருப்போம். பட்டிகள் திறந்து பசுக்களும் காளைகளும் திறக்கப்பட்டதும், சிறுவர்குழாம்கள் கவனிப்பது, அக்கால் நடைகளின் கழுத்துக்களைத்தான். அவற்றின் கழுத்தில் கோர்த்துக்கட்டப்பட்டிருக்கும் வடை மாலைகளும், அந்த மாலைகளில் சேர்த்துக்கட்டப்பட்ட பணநோட்டுக்கள் சிலதும் தான் எங்கள் எதிர்பார்ப்பின் இலக்கு. ஒவ்வொரு குழுவும் ஒவ்வொரு கால்நடையைக் கலைத்தவாறே விரையும். அவற்றின் கழுத்திலே உள்ள மாலைகளைக் குறிவைத்து எங்கள் தற்காலிக ஆயுதம் நீளும். மாலைகள் அறுக்கபட்ட காளைகளையோ, பசுக்களையோ, பின்னர் யாரும் கலைக்க மாட்டார்கள். ஆனால் சில கால்நடைகள் இலகுவில் அகப்படமாட்டாது. தமிழகத்து ஜல்லிக்கட்டுக்குச் சமமான விறுவிறுப்போடு இந்த விரட்டும் நடக்கும்.

பெரும்பாலும் இந்த விளையாட்டில் இளைஞர்களும், சிறுவர்களுமே ஈடுபடுவார்கள். அறுத்தெடுக்கப்பட்ட மாலைகளில் உள்ள வடைகள் உடனடி உணவாகும். கிடைத்த பணம் அன்றிரவுச்சினிமாவுக்கு கட்டணமாகும். நீங்கள் எருமைப்பாலில் பொங்கிய பொங்கல் சாப்பிட்டிருக்கிறீர்களா? அமிர்தம் அமிர்தம் என்று என்னவோ சொல்கிறார்களே, அது அதுதான். ஆனா அந்த அமிர்தத்தை இப்போது நீங்கள் சாப்பிட முடியாது. ஏனென்றால் இன்று அந்த மண்ணில்தான் போரின் ஆழமான வடுக்கள், அவலங்களை ஏற்படுத்தி, எங்கள் சகோதரர்கள் எல்லாவற்றையும் இழந்த ஏதிலிகளாக, மரங்களின் கீழும், முகாம்களிலுமாக, உண்பதற்குச் சீரான உணவின்றிச் சிதைந்து போயுள்ளார்கள். போர்தேங்காய் விளையாடி உறவுகள், போரினால் சிதறுகாயாக அடிக்கப்படுகிறார்கள். ஆனாலும்..

எங்கள் நிலம் எங்களுக்கென்றாகும். அன்றையபொழுதுகளில் இன்பப் பொங்கல் நிறைவாய் பொங்கும் எனும் நம்பிக்கையோடு...

எனது முன் பனிக் காலங்கள்.

திருவெம்பாவை பூசையும்
திருப்பள்ளியெழுச்சிப் பஜனையுமாய்
சுகமான ஒரு முன்பனிக்காலம்
எழுபதுகளில் எனக்கிருந்தது.

பின்வந்த எண்பதுகளில்
காவலும் கடமையுமாய்
கடலிலும் கரையிலும்
என் முன்பனிக்காலம் கழிந்தது.

தொன்னூறுகளின் தொடக்கத்திலோ
நெஞ்சு கனக்கும் நினைவுகளோடு
வெண்பனியுறையும் துருவக்
கரையின் தெருக்களில் நான்..

நன்றி - ' திசை'



அனைவர்கும் இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்!



ஊரார் பிள்ளையை ஊட்டிவளர்ந்தவர்கள் தலைப்பில் நான் ஏற்கனவே இரு பதிவுகள்.(.பகுதி 1 பகுதி 2 ) எழுதியுள்ளேன். என் வாழ்நாளில் என்றுமே மறக்க முடியாத இனிய ஆசான்கள் மூவரை அவற்றில் அடையாளப் படுத்தியிருந்தேன்.இன்று இந்த ஆண்டின் இறுதிப் பகுதியில், ஊரார் பிள்ளையை ஊட்டிவளர்த்த மேலும் இரு உத்தமர்களை இங்கே அழைத்து வருகின்றேன்.

தம்பலகாமத்தில் படித்த அந்தப் பள்ளிப்பருவத்தில், எனக்குக் கற்றுத்தந்த ஆசான்களில் இந்த இருவரும் கூட மறக்கமுடியாத மான்புடையவர்களே. ஆசிரியர்கள் திரு.தம்பிராஜா, திரு.தம்பையா, ஆகிய இருவரும் ஊரார் பிள்ளையை ஊட்டிவளர்த்த உத்தமர்கள் மட்டுமல்ல, உன்னதமான மண்ணின் மைந்தர்களும்தான்.

இருவருக்கும் இடையில் பல ஒற்றுமைகள் கூட ஒன்று. இருவரும் பயிற்றப்பட்ட ஆசிரியர்கள், இருவரும் எப்போதும் தூயவெண்ணிற உடையிலே காணப்படுவார்கள். நல்ல தமிழுக்குச் சொந்தக்காறர்கள். எல்லாவற்றுக்கும் மேலாக செந்நெல் விளைவிக்கும் நல் விவசாயிகள்.

ஆசிரியர் திரு: தம்பிராஜா!

சிறுவயதில் சமுகவியல் சொல்லித் தந்தவர். ஏட்டில் இருந்த எழுத்துக்கள் மூலம் கற்றுத் தந்ததவரல்ல அவர். அதற்கும் மேலே சமுகத்தின் பல்வேறு கூறுகளையும் சொல்லித்தந்தவர். இலேசான நகைச்சுவையுடன் இனிமையாகப் பாடம் நடத்துவார். வதந்தி பரவும் வகைதனை, வகுப்பில் மாணவர்களைக் கொண்டு நடத்திக்காட்டிப் புகட்டியவர். பத்திரிகை வாசிப்பதிலும், பத்திரிகைகளின் பங்கு , மக்கள் சமுகத்தில் ஏற்படுத்தும் தாக்கங்கள் குறித்துச் சொல்லித்தந்தவர். பாடசாலை நேரத்துக்கப்பால், சமுகம் சார்ந்த பணிகளில் ஈடுபடுவதிலும், பாடசாலைகாலம் முடித்து, உயர்கல்வி கற்கும் காலத்தில், செல்நெல் விளைவிக்கும் விவசாயியாக வயல்வரப்புக்களில் நடந்த காலத்தில், உற்ற தோழனாய் உடன் வந்தவர்.

பின்னாட்களில் எனக்கு, சமுகம் சார்ந்த பணிகளிலும், பத்திரிகைத் துறைசார்ந்த பணிகளிலும், ஆர்வமுறவும், ஈடுபடவும் இவரது கற்கைநெறி, உந்தித் தள்ளியது, உதவியாகவிருந்தது என்று சொன்னால் மிகையாகாது. தூய வெண்ணிற வேட்டியும் சட்டையுமணிந்து, கையில் செய்திப்பத்திரிகைகளுடனும், வகுப்புக்களை வலம் வரும் இவரை, மாலைவேளைகளில் மடித்துக்கட்டிய சாரத்துடனும், தோள்மேல் நீளக்கிடக்கும் மண்வெட்டியுடனும், மண்ணின் மைந்தனாக கிராமத்துத் தெருக்களில் காணலாம். வயல்களில் நெற்பயிர்களை நிறைவுடன் வளர்ப்பதற்கு வேண்டிய சூத்திரங்கள் பல சொல்லித் தந்தவர். ஏன், எதற்கு என எல்லாவற்றையும் யோசிக்கப்பழக்கியவர்.


ஆசிரியர். திரு: தம்பையா!

இவர் அந்தப்பாடசாலையில், பல்துறைப்பயிற்றாளன் என்று சொன்னால் மிகையாகாது. சித்திர ஆசிரியரான இவர், எனக்குக் கற்றுத்தந்த கலைகள் பல. ஓவியம், சிற்பம், ஒலிபரப்பு, அச்சுத்துறை என அனைத்துத் துறைகளிலும், எனக்கு அடியெடுத்துக் கொடுத்த அல்லது அடிகொடுத்துச் சொல்லி தந்த சோர்விலான். குறித்த வயசுக்குப் பின், மாணவர்களென்றெண்ணுவதற்கு மாறாக மனம் விரும்பும் நண்பனாகப் பாவித்துப் பயிற்றுவித்தவர்.

பாடசாலை முடிந்துவிட்ட மாலைநேரங்களிலும், பாடசாலை விடுமுறை நாட்களிலும் கூட, பள்ளிப் பணிகளில் மூழ்கிக்கிடந்தவர். அந்தப்பணிகளினூடே, அளவிலா விடயங்களை, அற்புதமாகச் சொல்லித் தந்தவர். ஓவியம் வரைகையில், தூரிகையை லாவகமாக வளைத்திழுப்பதிலாகட்டும், சும்மா கிடக்கும் சுள்ளித்தடியினைக் காட்டி, அதற்குள் ஒளிந்து கிடங்கும் உருவத்தினை உணரவைப்பதிலாகட்டும், ஒலிபரப்புத்துறையில் உச்சரிப்பு நேர்த்தியை ஒழுங்குபடுத்தியதிலாகட்டும், அச்சுக்கலையில் அழகியலை காண்பதிலாகட்டும், எல்லாவற்றையும், இரசனையோடு செய்தார். எங்களையும் செய்வித்தார்.

மாதிரிக்குச் சிலவற்றைச் சொல்லி மகிழலாம். பாடசாலை இல்ல விளையாட்டுப் போட்டியொன்று. மஞ்சள், பச்சை, நீலம், ஆகிய முவர்ணங்கள் மூன்று இல்லங்களுக்கும். இந்த இல்ல அலங்காரங்களை, சினிமாக்களில் வரும் செட்டுக்களுக்கு நிகராக நாங்கள் செய்வோம். அதிலே எங்கள் கலையாக்கத்தை பரீட்சித்துக் கொள்வோம்.

பச்சை வண்ண இல்லத்தின் அலங்காரத்துக்குப் பொறுப்பாக ஒருவன், மஞ்சள் வண்ண இல்லத்தின் அலங்காரத்துக்குப் பொறுப்பாக மற்றொருவன், என எனது நண்பர்களே இருக்க, நீல வண்ண இல்லத்துக்கான அலங்காரத்தில் நான். என்றும் பசுமையாகவே இருக்கும் மருதநிலத்தில் பச்சை அலங்காரமோ அல்லது பழுத்துப்போன மஞ்சள்அலங்காரமோ செய்ய அதிகம் சிரமப்படத்தேவையில்லை. இயற்றையான பொருட்களும், இன்னும் கொஞ்சம் கற்பனையும் சேர்த்தால், அலங்காரச் சிகரங்களாக அவ்வில்லங்களை அமைத்துவிடலாம். அதனாலேயே போட்டியில் அலங்காரத்துக்கான பரிசின் முதலிரு இடங்களையும் அவ்வண்ண இல்லங்கள் தட்டிச் சென்றுவிடும். அதனால் நீல நிற இல்லங்கள் இறுதியிடத்தை தமதுடமையாக்கி வைத்திருந்தனர். ஆனால் அவ்வருடம் நிச்சயம் அதை மாற்றுவேன் எனச் சொல்லியிருந்தேன்.

தம்பையா மாஸ்டருக்குச் சாடையான சந்தேகம். ஆனால் கேட்கவில்லை. ' கடல்புறா ' நாவல் வாசித்த பாதிப்பிலிருந்த நான், அவ்வருடம் நீல நிற இல்லத்திற்காகப் போட்ட அலங்காரம், பிரமாண்டமான ஒருகடற்புறாக்கப்பல் வடிவம். இறுதிநேரம்வரை அடுத்த இல்லங்களுக்காகப் பணியாற்றும் நண்பர்களுக்குக் கூடச் செர்லலாது இரகசியமாக வேறோர் இடத்தில் வைத்து அனைத்துப்பபகுதிகளையும், தனித்தனிப் பாகங்களாகச் செய்து, இறுதிநாளன்றுக்கு முன்னைய இரவில், முழுவதுமாக மைதானத்தில் பொருத்தி விட்டேன். காலையில் வந்தவர்களுக்கு மைதானத்தில் நீலவானத்தின் பின்னனியில், நீலக்கடலின் அலையடிப்பில் செல்லும், கடற்புறா எனும் கப்பலொன்று மைதானத்தில் நிற்கக் கண்டனர். தம்பையா மாஸ்டர் பார்த்த மாத்திரத்தில் கட்டியணைத்துக்கொண்டார். எல்லாம் சரி, இதற்குக் கப்பல் பணியாளர்கள் போல் வேடமிட்ட மாணவர்களை நிறுத்தினால் இன்னமும் நல்லா இருக்குமெனச் சொல்லி முடிக்க முன்னமே, நீலவண்ணத்தில் கப்பல் பணியாளர்கள் வந்ததைத் கண்டதும், இவ்வருடம் உனக்குத்தான் பரிசெனச் சொல்லி மகிழ்ந்தார். போட்டி வேளையில், இயற்கையாகக் காற்றும் சற்று வீசக் 'கடற்புறா' மிதப்பது போலச் சற்று அசைந்தும் காட்டிற்று. அதற்கப்பாலும் பரிசு எனதில்லத்துக்குக் கிடைக்காமல் போகுமா ?

ஒலிபரப்புத் துறையில் எனக்கிருந்த ஆர்வம் கண்டு, விளையாட்டுப்போட்டிகள், கலைவிழாக்கள், எதுவாயினும் அற்புதமாக அறிவிப்புச் செய்யும் தம்பையா மாஸ்டர், தனக்குப்பக்த்தில் எனக்கும் ஒரு சரியாசனம் போடச் செய்தார்.

இன்று எனக்கு இந்தக் கணினியில் தமிழைத்தட்டெழுவதை விரைவாகச்செய்ய முடிகிற முனைப்புக்கான வினையுக்கிகூட அவரேதான். அந்நாட்களில் பாடசாலைத் தமிழ்தட்டெழுத்து இயந்திரத்தில் தட்டப்பழக்கியவரும் அவரேதான்.

நினைவுக்கையெழுத்திடுங்கள் எனச்சொல்லி, நினைவுக்கையெழுத்திடும் குறிப்புப் புத்தகத்தை நீட்டினால், ' சும்மாயிரு ' எனும் யோகர் சுவாமி வாசகத்தை அழகாய் எழுதி, அடியில் ச.தம்பையா என அழகாய் கையெழுத்திட்டுத்தருவார். இந்த இடத்தில் இன்னொன்றையும் குறிப்பிடலாம். சிகப்பு, நீலம், கறுப்பு, என மூன்று வண்ணங்களில் மட்டுமே பேனைக்கு விடும் மை இருந்த காலத்தில், தம்பையா மாஸ்டரின் பேனை மட்டும் அழகாக ஊதாநிற வண்ணத்தில் எழுதி, வித்தியாசம் காட்டி நிற்கும்.

சொல்லச் சொல்ல சுகமாயிருக்கும் நினைவுகள் இன்னும் எத்தனை எத்தனை? உண்மையில் இந்த உத்தமர்கள் கற்றுத்தந்த, கள்ளமற்ற சிந்தனைகள், காட்டிய பரிவுகள், ஊட்டிய அன்னமாய், உயிரில்கலந்து, இன்றளவும் என்னை உயர்த்திச் செல்கிறது என்றே சொல்வேன்.

ஐயமீர்! ஆண்டுகள் பல சென்றபோதும், பல ஆயிரம் மைல்கள் கடந்திட்ட போதும், உங்களை மறவா நேசிப்போடிருத்தலே, இன்னும் என்னை நீள நடத்திச் செல்கிறதென நம்புகின்றேன். நாளையொரு பொழுதில், நானும் நீங்களும் நேசித்திருந்த தெருக்களில், நெஞ்சினின்றும் நீங்கா நினைவுகளுடன் நடந்து மகிழ்வேன் எனும் நம்பிக்கையோடு, இன்னுமோர் தினத்தில், இல்லையில்லை மறைந்துகழியும் மற்றுமோர் ஆண்டிலிருந்து அடியெடுத்து நடக்கின்றேன்.

சங்கப்பலகை - திருமலை

இதைப்பற்றிக் கனநாளா எழுதவேணும் என்டு நினைத்ததுதான். ஆனாலும் எப்படியோ கழிந்து போயிரும். கனநாட்களாக மருதநிழலில் எழுதவும் இல்லை. ( மருதநிழலுக்கு அடிக்கடி வாற அக்கா வேற கோபிக்கப்போறா) இணையத்தில் இதுவரையில் வேறயாரும் இதனைப்பதிவு செய்ததாகத் தேடிப்பார்த்ததில் காணவில்லை. ஆதலால் இன்று இதைப்பதிவு செய்கின்றேன்.

சங்ககாலத்தில் எழுதப்பட்ட நூல்களின் தரமறியச் சங்கப்பலகைமேல் வைத்து, பொற்றாமரைக்குளத்தில் விட, நூல் தரமாயின் சங்கப்பலகை நூலோடு மிதக்குமெனவும், அல்லாவிடின் நீரில் அமிழ்ந்துவிடும் என்றும் ஒரு கதை சிறுவயதில் கேட்ட ஞாபகம். அதுசரி, சங்கப்பலகைக்கும் திருமலைக்கும் என்ன தொடர்பு என எண்ணுகின்றீர்களா? இங்கே நான் குறிப்பிடுவது தமிழீழத்தின் திருமலை.

ஆமாம் திருகோணமலையில் 70களின் இறுதிகளில் இயங்கி வந்த ஒரு தமிழார்வக் குழுமத்தின் பெயர்தான், இங்கே நான் குறிப்பிடும் சங்கப்பலகை. தலைவரென்றும், செயலாளரென்றும், பதவிகள் தெரிவுசெய்து, மாதம் ஒருதரம் கூடி, தேநீரும், வடையும் சாப்பிட்டு, வெட்டிக்கதை பேசுவதோடு முடிந்து விடும் சங்கங்கள், மன்றங்கள், மத்தியில் தனித்துவத்தோடு செயற்பட்ட ஒரு அமைப்பு இந்தச் சங்கப்பலகை.
தலைவர் முதலாய பதவிகள் எதுவுமில்லாது, ஒருசில நண்பர்களின் உழைப்பில், பலரும் பயனடைந்தனர் இச் சங்கப்பலகையால்.

மாதந்தோறும் பெளர்ணமி தினங்களில்( பெளர்ணமி நாட்கள் சிறிலங்காவில் அரசவிடுமுறை தினங்கள்) மாலை ஆறுமணிக்கு, திருகோணமலை நகரி மத்தியை ஊடறுத்துச் செல்லும் மத்தியவீதியில். அமைந்திருக்கும் சென் சேவியர் பாடசாலை மண்டபத்தில் கணிசமான இளைஞர்கள் கூடுவார்கள்.

தெரிவுசெய்யபட்டிருக்கும் நிகழ்ச்சி வழங்குநரை. ஒரு நண்பர் அறிமுகஞ்செய்துவைப்பார். அத்துடன் நிகழ்ச்சி ஆரம்பமாகும். நிகழ்ச்சி கட்டுரை வாசித்தலாக அல்லது ஆய்வுரையாக, அல்லது அறிவியல் சம்பந்மான விளக்கவுரையாக, என பல்கலை சார்ந்திருக்கும். ஆனால் அநேகமாக ஒரு நிகழ்ச்சிதான் நடைபெறும். நிகழ்ச்சி வழங்குபவர் குறைந்தது 45 நிமிடங்கள் எடுத்துக்கொள்வார். அதன்பின் அந்நிகழ்வு குறித்த கருத்துப்பரிமாற்றங்கள் தொடர்நிகழ்வாக அமையும். நிகழ்ச்சி வழங்கியவர் பிரதானமாக எழுப்படும் கேள்விகளுக்கு விளக்கமளிப்பார். குறைந்தது ஒரு மணிநேரம் இது நடைபெறும். பின்னர் அனைவரும் கலைந்து செல்வர்.

இன்றைய கையடக்கப் பொருட்கள் வழங்கும், பல்வகைப்பயன்பாடுகள் போல், அன்றையபொழுதில் கையடக்கமாக நடந்த இப்பெளர்ணமி மாலை சங்கப்பலகை வழங்கிய பயன் மேலானாது. திருகோணமலையில், சமூகஅக்கறையும், தேடலும்மிக்க இளைஞர்கள் பலரை உருவாக்கியது. பரந்துபட்ட நல்ல வாசகர்களை உருவாக்கியது. இவற்றின் தொடர்ச்சியாக அரசியலார்வமிக்க இளைஞர்களையும், பின்னாளில் பல விடுதலைப்போராளிகளையும், உருவாக்கியது சங்கப்பலகை. இதில் முன்னின்று செயற்பட்ட இளைஞர்கள் சிலர் பின்னாட்களில் பேராதனைப் பல்கலைக்கழக மாணவர்களாக இருந்தபோது, ஏரிக்கரை எனும் காலாண்டுச் சஞ்சிகை வெளியிட்டார்கள். நானறிந்தவரைக்கும், ஈழத்தின் இலக்கியப்பரப்பில் தரமான ஆக்கங்களுடனும், அழகான வடிவமைப்புடனும், வெளிவந்த சிற்றிதழ் இதுவாகும். ஆனால் என்ன சிற்றிதழ்களின் ஆயுட்காலக் குறைவுக்கு அதுவும் விதிவிலக்காகவில்லை.

அப்போது அதன் பெறுமானம் அவ்வளவு தெரியாவிடினும், இப்போது நினைக்கையில் பெறுமானம் புரிகிறது. இன்று இங்கு எழுதுவதில் ஏதேனும் நன்றாகத் தெரிந்தால் (தெரிந்தால்...?) திருமலையின் சங்கப்பலகைச் சந்திப்புக்களும் காரணமெனலாம். இதுபோன்ற நிகழ்வுகள் இப்போதுள்ள இளைஞர்களுக்கு இருப்பதாயும் தெரியவில்லை...... இருந்தாலும் இராணுவம் இட்டுக்கட்டி இழுத்துச் சென்றுவிடுமே....


 

நன்றி, வணக்கம்.